Wednesday, April 30, 2008

வள்ளுவம் சொல்வது என்ன?

மூன்று உறுதிப் பொருள்களான அறம்,பொருள்,இன்பம் இவற்றை ஊன்றுகோலாக க் கொள்ளும் மனிதன்..பரம் பொருளான அன்பினைப் பெரும்பேறு பெறுவான்.
அறமுறைக் காத்து,பொருள் வரவு ஏற்று,இன்பநெறி அனுபவிக்க வேண்டும் என்பதால்தான் அறத்துப்பால்,பொருட்பால்,இன்பத்துப்பால் என முப்பால் அருளினார்.
வள்ளுவன் தன் முதல் குறளை தமிழ் முதல் எழுத்தான 'அ' கரத்தில் தொடங்கி(அகர முதல எழுத்தெல்லாம்) கடைசி குறளை(1330) தமிழ் கடைசி எழுத்தான "ன" கரத்தில் முடித்தான்.(ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி
முயங்கப் பெரின்)
வள்ளுவன் பதிவில் 50 அதிகாரங்களுக்கு நேரடி அர்த்தங்களாய் இல்லாவிடினும் அவன் சொல்ல வந்ததை சுருக்கி
சொல்லி இருக்கிறேன்.இது சம்பந்தமாக எனக்கு மின்னஞ்சல் அனுப்பியவர்கள்,தொலைபேசியவர்கள் மற்றும்
பின்னூட்டம் இட்டவர்கள் அனைவருக்கும் நன்றி.
உங்கள் ஆதரவு மீதி குறட்பாக்களுக்கும் தொடரட்டும்.

50.இடனறிதல்

1.முற்றுகை செய்ய ஏற்ற இடத்தைக் கண்டதும்தான், பகைவரை இகழாமல் செயல்களைத் தொடங்கவேண்டும்.

2.அரணுடன் பொருந்தி ,வரும் பகையை எதிர்த்தால் பெரும் பயன் கிட்டும்.

3.தக்க இடத்தில் தம்மைக் காத்து,பகைவரிடம் தம் செயலைச் செய்தால்..வலிமை அற்றவரும் வலியவராவார்.

4.தக்க இடம் அறிந்து செயலைச் செய்தால்..அவரை வெல்ல வேண்டும் என எண்ணும் பகைவர் இரார்.

5.ஆழமுள்ள நீரில் முதலை வெல்லும்..ஆனால் நீரில் இருந்து அது வெளியே வந்தால் அதை மற்ற உயிர்கள் வென்று
விடும்.
6.வலிய சக்கரங்கள் கொண்ட தேர் கடலில் ஓடாது..கடலில் ஓடும் கப்பலும் நிலத்தில் ஓடாது.(இடத்தேர்வு முக்கியம்)

7.செயலுக்கான வழிவகைகளைக் குறைவில்லாது எண்ணி தக்க இடத்தில் செய்தால்..அஞ்சாமை என்ற ஒரு
துணை போதும்.
8.சிறிய படை ஆயினும் அதன் இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையைக் கூட வென்றிட இயலும்.

9.பாதுகாப்பான கோட்டையும், படைச் சிறப்பும் இல்லாவிட்டால் கூட அவர் வாழும் இடத்தில் அவரை தாக்குதல் அரிது.
10.வேல் ஏந்திய வீரர்களை வீழ்த்தும் யானை கூட.. சேற்றில் சிக்கிக் கொண்டால் நரிகளால் கொலை செய்யப்படும்

49.காலமறிதல்

1.தன்னைவிட வலிய கோட்டானை காக்கை பகலில் வென்றுவிடும்.அதுபோல
பகையை வெல்ல ஏற்ற காலம் வேண்டும்.

2.காலத்தோடு பொருந்தி ஆராய்ந்து நடந்தால்..அதுவே செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும்
. கயிறாக அமையும்.

3.தேவையான சாதனங்களுடன்,சரியான காலத்தையும் அறிந்து செய்தால்
எல்லா செயல்களும் எளியன ஆகும்.

4.உரிய காலத்தையும்,இடத்தையும் அறிந்து நடந்தால் உலகமே நம் கைக்குள் வரும்.

5.உரிய காலத்திற்காக பொறுமையாக கலங்காது காத்திருப்பவர் இந்த உலகத்தைக்கூட வெல்லுவர்.

6.உறுதியானவர்கள் ..உரிய காலத்துக்கு அட்ங்கி இருத்தல் என்பது ஆடு ஒன்று
தன் எதிரியை தாக்க கால்களை பின் வாங்குவது போன்றது.

7.அறிவுடையவர்..புற சினம் கொள்ளமாட்டார்கள்.அதே சமயம் வெல்லுவதற்கு ஏற்ற
காலம் பார்த்து அக சினம் கொள்வர்.

8.பகைவரைக் கண்டால் பொறுத்துக்கொள்ளவேண்டும்.. அந்த பகைவன் முடிவு காலம்
வந்தால் தானே விழுவான்.

9.சரியான காலம் வரும்போது.. அதை பயன்படுத்திக்கொண்டு செய்தற்கரிய
செயல்களை செய்யவேண்டும்.

10.காலம் வரும்வரை கொக்கு காத்திருப்பது போல காத்திருந்து, காலம் வரும்போது குறி தவறாமல் மீனை கொத்துவது போல காரியத்தை செய்து முடிக்கவேண்டும்.

48.வலியறிதல்

1.செயலின் வலிமை,தன் வலிமை,பகைவனின் வலிமை,இவர்களுக்கு துணையாக இருப்பவரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்து செயல் பட வேண்டும்.
2.நமக்கு பொருந்தும் செயலையும்,அதற்காக அச் செயல் பற்றி ஆராய்ந்து அறியும் முயற்சியும் மேற்கொண்டால்
முடியாதது என்பதே இல்லை.
3.நமது வலிமை இவ்வளவுதான் என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து இடையில் அதை முடிக்க முடியாது அழிந்தவர் பலர்.
4.மற்றவர்களுடன் ஒத்து போகாமை,தன் வலிமையின் அளவை அறியாமை..ஆகியவையுடன் தன்னைத்தானே
வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
5.மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் ..அளவுக்கு அதிகமாக ஏற்றினால் அச்சு முறியும்.

6.ஒரு மரத்தின் நுனி கொம்பில் ஏறியவர்,அதையும் கடந்து ஏறமுயன்றால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

7.தக்க வழியில் பிறர்க்குக் கொடுக்கும் அளவு அறிந்து கொடுக்க வேண்டும்.அதுவே பொருளை போற்றி வாழ்வதாகும்.

8.நமது வருவாய் குறைவாக இருந்தாலும்..செலவு அதற்குள் இருந்தால் தீங்கு ஏற்படாது.

9.பொருளின் அளவு அறிந்து வாழாதவன் வாழ்க்கை..ஒளிமயமாய் இருப்பதுபோல தோன்றி இல்லாமல் போகும்.

10.தனக்குப் பொருள் உள்ள அளவை ஆராயாமல்.. .அளவின்றி கொடுத்துக் கொண்டே இருந்தால் விரைவில் கெடுவான்.

Tuesday, April 29, 2008

47.தெரிந்து செய்ல்வகை

1.ஒரு செயலில் இறங்குமுன் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை
ஆராய்ந்த பின்னே இறங்கவேண்டும்.

2.அறிந்த நண்பர்களுடன் சேர்ந்து ...ஆற்ற வேண்டிய செயல் ஆராய்ந்து தாமும் சிந்தித்து செய்தால்
எந்த வேலையானாலும் நன்கு முடியும்.

3.பெரும் லாபம் வரும் என கை முதலையும் இழக்கும் செயலை அறிவுடையார் செய்யமாட்டார்கள்.

4.களங்கத்துக்குப் பயப்படக்கூடியவர்கள்...ஒரு செயலின் விளைவுகளை எண்ணிப்பார்த்து
களங்கம் தரும் செயலை செய்யார்.

5.பகைவரை ஒடுக்க முழுமையாக முன்னேற்பாடுகள் செய்யாவிடின் அது பகைவனின் வலியைக் கூட்டிவிடும்

6.செய்யக்கூடாததை செய்தாலும் சரி..செய்யவேண்டியதை செய்யாமல் விட்டாலும் சரி கேடு விளையும்.

7.நன்கு சிந்தித்தபின்னே செயலில் இறங்கவேண்டும்..இறங்கிய பின் சிந்திப்போம் என்பது தவறு.

8.நமக்கு எவ்வளவு பேர் துணயாக இருந்தாலும்.. முறையாக.செயல்படாத முயற்சி குறையிலேயே முடியும்.

9.அவரவர் இயல்புகள் அறிந்து அதற்கு பொருந்துமாறு செய்யாவிடின், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

10.தம் நிலைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார் ஆதலால் உலகு இகழாத செயல்களை
செய்யவேண்டும்.

46.சிற்றினம் சேராமை

1.பெரியோர் கீழ்மக்களை அஞ்சி ஒதுங்குவர்.ஆனால் சிறியோரின் இயல்பு
கீழ்மக்களின் கூட்டத்துடன் சேருவது.
2.நிலத்தின் தன்மை போல் நீர் மாறும்...அதுபோல மக்கள் அறிவும் தங்கள் இனத்தின்
தன்மையைப் போன்றதாகும்.

3.ஒருவனது இயற்கை அறிவு மனத்தால் ஏற்படும் .ஆனால் உலகத்தாரால் இப்படிப்பட்டவன்
என மதிக்கப்படுவது சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

4.ஒருவரின் அறிவு அவரது மனதில் உள்ளது போலக் காட்டினாலும் உண்மையில் அவன்
சார்ந்த இனத்தில் உள்ளதாகும்.

5.மனத்தின் தூய்மை,செயலின் தூய்மை இரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையை ஒத்ததே ஆகும்

6.மனத்தூய்மை யானவர்க்கு ...அவருக்குப்பின் எஞ்சி நிற்பது புகழும் ..இனம் தூய்மையானவருக்கு
அவரின் நற்செயலும் ஆகும்..

7.மனத்தின் நலம் உயிர்க்கு ஆக்கமாகும்...இனத்தின் நலமோ எல்லா புகழையும் வழங்கும்.

8.மனத்தின் நலம் உறுதியாக இருந்தாலும் சான்றோர்க்கு இனத்தின் நலம் நல்ல காவலாக அமையும்.

9.மனத்தின் நன்மையால் இன்பம் உண்டாகும்.அது இனத்தின் தூய்மையால் மேலும் சிறப்படையும்.

10.நல்ல இனத்தைவிட சிறந்த துணை ஏதுமில்லை...தீய இனத்தைவிட துன்பமும் பகையும் தரக்கூடியது
எதுவுமில்லை.

.

Sunday, April 27, 2008

45.பெரியோரைத் துணைக்கோடல்

1.அறமுணர்ந்த மூத்த அறிவுடையோரின் நட்பை பெறும் வகை அறிந்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

2.வந்த துன்பம் நீங்கி..மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோரின் நட்பைக் கொள்ள வேண்டும்.

3.பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் நட்புக் கொள்ளல் அரிய பேறாகும்.

4.அறிவு ஆற்றலில் தம்மைவிட சிறந்த அறிஞர்களிடம் உறவு கொண்டு அவர் வழி நடத்தல் வலிமையாகும்.

5.தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரை உலகம் கண்ணாகக் கொள்ளுவதால் மன்னனும் அத்தகையோரிடம்
நட்பு கொள்ளவேண்டும்.
6.தக்க பெரியவரின் கூட்டத்தில் உள்ளவனுக்கு பகைவரால் எந்த தீங்கும் ஏற்படாது.

7.தவற்றை கண்டித்து அறிவுரை கூறும் பெரியாரை துணைக்கொள்பவரை கெடுக்கும் ஆற்றல் யாருக்கும் இருக்க
முடியாது.
8.கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை யில்லா அரசு,பகைவர் எவரும் இல்லா விட்டாலும் தானே அழியும்.

9.முதல் இல்லா வியாபாரிக்கு ஊதியம் வராது..அதுபோல தம்மை தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு
எப்பேறும் இல்லை.
10.நல்லவரின் நட்பை கை விடுதல்,பலர் பகையை தேடிக் கொள்வதைவிட பத்து மடங்கு தீமையாகும்.

44.குற்றங்கடிதல்

1.செருக்கும்,சினமும்,காமமும் இல்லாதவரின் செல்வாக்கு மேம்பட்டது ஆகும்.

2.பேராசை,மானமில்லாத தன்மை,குற்றம்புரியும் செயல்கள் ஆகியவை தலைவனுக்கு கூடாத தகுதிகளாகும்.

3.தினையளவு குற்றத்தையும்,பனையளவாக எண்ணி தங்களை காத்துக் கொள்வார்கள் பழிக்கு அஞ்சுபவர்கள்.

4.குற்றம் அழிவை உண்டாக்கும் பகையாக மாறும்..அதனால் குற்றம் ஏதும் புரியாமல் இருக்க வேண்டும்.

5.குற்றம் செய்வதற்கு முன்னமே காத்துக் கொள்ளாதவன் வாழ்வு நெருப்பின் முன் வைக்கப்பட்ட வைக்கோல்
போராய் அழியும்.
6.தலைவன் என்பவன் நம் குற்றத்தை உணர்ந்து திருந்திய பின்னரே பிறர் குற்றத்தை ஆராய வேண்டும்.

7.நற்பணிகள் செய்யாது சேர்த்து வைப்பவன் செல்வம் பயனின்றி அழிந்து விடும்.

8.எல்லா குற்றத்தையும் விட பெருங்குற்றம் பிறர்க்கு ஏதும் ஈயாத் தன்மையே ஆகும்.

9.தன்னைத்தானே உயர்வாக எண்ணி தற்பெருமையுடன் நன்மை தராத செயல்களில் ஈடுபடக்கூடாது.

10.தனது விருப்பம் என்ன என பிறர் அறியா வண்ணம் நிறைவேற்றுபவரை பகைவர்கள் சூழ்ச்சி ஒன்றும் செய்யாது

Saturday, April 26, 2008

43.அறிவுடைமை

1.பகையால் அழிவு வராது பாதுகாப்பது அறிவு மட்டுமே.

2.மனம் போகும் போக்கில் போகாது..தீமையை நீக்கி.. நல்வழி தேர்வு செய்வது அறிவுடைமை ஆகும்.

3.ஒரு பொருள் குறித்து யார் என்ன சொன்னாலும்..அதை அப்படியே ஏற்காது..அப்பொருளின் மெய்ப்பொருள் அறிவதே அறிவாகும்.
4.நாம் சொல்ல வேண்டியதை எளிமையாக சொல்லி,பிறரிடம் கேட்பதையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமை

5.உலகத்து உயர்ந்தவரோடு நட்புக் கொண்டு..இன்பம்,துன்பம் இரண்டையும்..ஒன்று போல கருதுவது அறிவுடைமை

6.உலகம் நடைபெறும் வழியில் உலகத்தோடு ஒட்டி தானும் நடப்பதே அறிவாகும்.

7.ஒரு விளைவிற்கு எதிர்காலத்தில் எதிர் விளைவு எப்படி இருக்குமென..அறிவுடையார் மட்டுமே நினைப்பர்.

8.அஞ்ச வேண்டிய வற்றுக்கு அஞ்சுவது அறிஞர்கள் செயலாகும்.

9.வரப்போவதை முன்னமே அறிந்து காத்துக் கொள்ளும் திறனுடையருக்கு துன்பம் அணுகாது.

10.அறிவுடையர் எல்லாம் உடையவர்.அறிவில்லாதவர் என்ன இருப்பினும் இல்லாதவரே ஆவர்.

Friday, April 25, 2008

42.கேள்வி

1.செவியால் கேட்டறியும் செல்வம்..செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

2.கேள்வியாகிய செவி உணவு இல்லாத போதுதான் வயிற்றுக்கு உணவு தரும் நிலை ஏற்படும்.

3.செவி உணவாகிய கேள்வி அறிவு பெற்றோர் நிலத்தில் வாழ்ந்தாலும் தேவருக்கு ஒப்பாவார்கள்.

4.நாம் படிக்கவில்லையெனினும், கற்றவர்களிடம் கேட்டு அறிந்தால்,அது வயதான காலத்து ஊன்றுகோலாய் அமையும்.
5.வழுக்கும் நிலத்தில் நடக்க ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர் அறிவுரை உதவும்.

6.நல்லவற்றை சிறிய அளவே கேட்டாலும் அந்த அளவிற்கு அது பெருமையைத்தரும்.

7.நுட்பமான கேள்வி அறிவு உடையவர்,சிலவற்றை தவறாக உணர்ந்தாலும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

8.காதுகள் கேட்கக்கூடியதாக இருந்தாலும்,அவை நல்லவர்கள் உரையை கேட்காவிட்டால் செவிடாகவே எண்ணப்படும்.
9.கேள்வி அறிவு இல்லாதவர்கள்..பணிவான சொற்களை பேசும் பண்புடையவராக ஆக முடியாது.

10.செவிச்சுவை அறியாது..வாய்ச்சுவை மட்டுமே அறிந்தவர்கள் இறந்தாலும்..வாழ்ந்தாலும் ஒன்றுதான்.

Thursday, April 24, 2008

41.கல்லாமை

1 அறிவாற்றல் இல்லாமல் கற்றவர்களிடம் பேசுதல் கட்டமில்லாமல்
சொக்கட்டான் விளையாடுவதைப்போல ஆகும்.

2.கல்லாதவன் சொல்லை கேட்க நினைப்பது மார்பகம் இல்லா பெண்ணை விரும்புவது போல ஆகும்.

3.கற்றவர் முன் எதுவும் பேசாதிருந்தால் கற்காதவர்கள் கூட நல்லவர்களே ஆவர்.

4.படிக்காதவனுக்கு இயற்கை அறிவு இருந்தாலும் ...அவனை சிறந்தோன் என அறிவுடையோர்
ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

5.கல்வி அற்றவன் மேதை போல நடந்தால் ...கற்றவர்களிடம் அவன் வேஷம் கலைந்துவிடும்.

6.கல்லாதவர்கள் வெறும் களர் நிலமே...அவர்கள் வெறும் நடைபிணங்களே.

7..அழகாய் இருந்தாலும்...தெளிந்த அறிவற்றோர் கண்ணைக்கவரும் மண் பொம்மையாகவே ஆவர்.

8.முட்டாள்களின் செல்வம் ..நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட மிக்க துன்பம் செய்வதாகும்.

9.கற்றவராயிருந்தால் ..உயர்ந்தவர்..தாழ்ந்தவர் என்ற வேறுபாடு போய்விடும்.

10.அறிவு நூல் படித்தவர்கள் மனிதர்களாகவும்..படிக்காதவர்கள் விலங்குகளாகவும் கருதப்படுவர்.

Wednesday, April 23, 2008

40.கல்வி

1.கற்கத் தகுந்த நூல்களை குறையின்றி கற்பதோடு நில்லாது...கற்றபின் அதன்படி நடக்க வேண்டும்.

2.எண் என்பதும் எழுத்து என்பதும் மக்களின் கண்கள் போன்றதாகும்.

3.கண்ணுடையவர் என்பவர் கற்றவரே..கல்லாதவருக்கும் கண்கள் இருப்பினும் அவைகள் புண்களாகவே கருதப்படும்.

4.பழகும் போது மகிழ்வோடு பழகி..பிரியும் போது இனி எப்போது காண்போம் என எண்ணும்படி பிரிவதே அறிவுடையோர் செயலாகும்.
5.செல்வந்தர் முன் தாழும் வறியவர் போல்..கல்வி கற்றோர் முன்..தாழ்ந்து நின்று கற்போரே உயர்ந்தவர் ஆவார்.

6.தோண்ட தோண்ட கிணற்றில் நீர் ஊறுவது போல, படிக்கப் படிக்க அறிவு பெருகும்.

7.கற்றோருக்கு எல்லா நாடுகள்,எல்லா ஊர்களிலும் சிறப்பு உண்டு. அதனால் ஒருவன் சாகும்வரை படிக்கலாம்.

8.ஒரு பிறப்பில் நாம் கற்ற கல்வி..ஏழேழு பிறப்பிற்கும் உதவும் தன்மை உண்டு.

9.தாம் விரும்பும் கல்வி அறிவை உலகமும் விரும்புவதால் அறிஞர்கள் மேன்மேலும் கற்றிட விரும்புவர்.

10.அழிவற்ற செல்வம் கல்வியே ஆகும்..மற்றவை எதுவும் செல்வமாக ஆகாது.

39.இறைமாட்சி

1.படை,குடி மக்கள்,குறையா வளம்,நல்ல அமைச்சர்கள்,நல்ல நட்பு,அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் அமைந்த அரசு
ஆண் சிங்கமாகும்.
2.துணிவு,இரக்கம்,அறிவாற்றல்,உயர்ந்த குறிக்கோள் இந் நான்கு பண்புகளும் அரசின் இயல்பாகும்.

3.காலம் தாழ்த்தா தன்மை,கல்வி,துணிவு இவை மூன்றும் அரசனிடம் நீங்காமல் இருக்க வேண்டும்.

4.ஆட்சியில் அறநெறி தவறாமை,குற்றம் ஏதும் செய்யாமை,வீரம்,மானம் இவையே சிறந்த அரசனிடம் இருக்க வேண்டியவை.
5.பொருள் வரும் வழி,வந்த பொருள்களைச் சேர்த்தல்,காத்தல் அவற்றை சரியாக வகுத்தல் இவையே நல்லாட்சி
அரசனின் இலக்கணம்.
6.எளியவரையும்,கடுஞ்சொல் கூறாதவனையும் இனிய பண்புடையவனையும் கொண்ட அரசனை உலகு புகழும்.

7.இனிய சொற்கள்,பிறர்க்கு தேவையானவற்றை வழங்கிக் காத்தல் கொண்ட அரசனுக்கு உலகு வசப்படும்

8.நீதி தவறா ஆட்சியுடன் மக்களைக் காப்பாற்றும் மன்னவன் மக்கள் தலைவனாவான்.

9.தன்னை குறைகூறுவோரின் கடும் சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் மன்னனுக்கு மக்களிடம் மதிப்புண்டு.

10.கொடை,அருள்,செங்கொல்,குடிகளைக்காத்தல் இவை நான்கும் உள்ள அரசன் ..ஒளி விளக்காவான்

Saturday, April 19, 2008

38.ஊழ்

1.ஆக்கத்திற்கான நிலை சோர்வை நீக்கி ஊக்கம் தரும்.சோம்பல் அழிவைத்தரும்.

2.பொருளை இழக்க வைக்கும் ஊழ் அறியாமை ஆகும்.பொருளை ஆக்கும் ஊழ் அறிவுடமை ஆகும்.

3.ஒருவன் பல நூல்களைப் படித்திருந்தாலும்,இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.

4.ஒருவர் செல்வமுடையவராகவும்,ஒருவர் அறிவுடையராகவும் இருப்பது உலகின் இயற்கை நிலை ஆகும்.

5.நல்ல செயல்கள் தீமையில் முடிவதும்,தீய செயல்கள் நல்லவை ஆவதுமே ஊழ் எனப்படும்.

6.தமக்கு உரியவை இல்லா பொருள்கள் நில்லாமலும் போகும்.உரிய பொருள்கள் எங்கிருந்தாலும் வந்தும் சேரும்.

7.முறையானபடி வாழவில்லை எனில்..கோடி கணக்கில் பொருள் சேர்த்தாலும் அதன் பலனை அனுபவிக்க முடியாது.

8.வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் இருக்குமேயானால் நுகரும் பொருளற்றோர் துறவி ஆவர்.

9.நன்மை தீமை இரண்டும் இயற்கை நியதி.நன்மையைக் கண்டு மகிழ்வது போல் தீமையைக் கண்டால் கலங்கக்கூடாது.
10ஊழ்வினையிலிருந்து தப்ப முயன்றாலும் அதைவிட வலிமையுள்ளது வேறு ஏதுமில்லை.

(அறத்துப்பால் நிறைவு பெற்றது)

Thursday, April 17, 2008

37.அவா அறுத்தல்

1.எல்லா உயிர்களுக்கும் எல்லாக் காலத்திலும் பிறவி துன்பத்தின் வித்தான ஆசை இருக்கும்.

2.ஆசைகளை ஒழிக்காவிட்டால்..ஏன் பிறந்தோம் என்று எண்ணும் அளவு துன்பநிலை வரும்.

3.ஆசை அற்ற நிலையே சிறந்த செல்வமாகும்,அதற்கு நிகர் அதுவே.

4.ஆசை இல்லாதிருத்தலே தூய நிலை.இது மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

5.பற்றற்றவர் என்பவர் அவாவை விட்டவரே ஆவர்.மற்றவர்கள் அப்படி சொல்லிக் கொள்ளமுடியாது.

6.அவாவிற்கு அஞ்ச வேண்டும்.ஏனெனில் ஒருவனை கெடுத்து வஞ்சிப்பது அந்த ஆசைதான்.

7.ஒருவன் ஆசையை ஒழித்தால்..அவனுக்கு சிறந்த வாழ்வு வாய்க்கும்.

8.ஆசையை ஒழித்தால் துன்பம் இல்லை..ஆசை இருந்தால் எல்லா துன்பமும் வரும்.

9.ஆசையை விட்டு ஒழித்தால்..வாழ்வில் இன்பம் தொடரும்.

10.ஆசையை அகற்றி வாழ்வதே..நீங்காத இன்பத்தை வாழ்வில் தரக்கூடியது ஆகும்.

36.மெய்யுணர்தல்

1.மெய்ப்பொருள் அல்லாதவையை மெய்ப்பொருள் என எண்ணுபவர் வாழ்க்கை சிறக்காது.

2.மயக்கம் நீங்கி குற்றமற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகலும். நலம் தோன்றும்.

3.ஐயப்பாடுகளை நீக்கி மெய்யுணர்வு கொண்டவர்க்கு மேலுலகம் எனப்படுவதே அண்மையுள் இருப்பது
போல ஆகும்.

4.உண்மை அறியாதோர்,தமது ஐம்புலன்களையும் அடக்கியவராயிருப்பினும் பயன் இல்லை.

5 வெளித்தோற்றம் கண்டு மயங்காமல், அது பற்றி உண்மையை அறிவதே அறிவுடைமை ஆகும்.

6.கற்க வேண்டியவற்றை கற்று உண்மைப்பொருளை உணர்ந்தவர் மீண்டும் இப்பிறப்பிற்கு வரார்

7.ஒருவனது மனம் உண்மைப்பொருளை ஆராய்ந்து உணர்ந்தால் அவனுக்கு மறுபிறப்பு இல்லை எனலாம்.

8.பிறவித் துன்பத்திற்கான அறியாமையைப் போக்கி முக்தி நிலைக்கான பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

9.துன்பங்கள் நம்மை அடையாமல் இருக்க ...அத்துன்பத்துக்கான காரணம் அறிந்து பற்று விலக்கவேண்டும்.

10.விறுப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய மூன்றிருக்கும் இடம் தராதவரை துன்பம் நெருங்காது.

35.துறவு

1.ஒருவன் எந்தப் பொருள்மீது பற்றில்லாதவனாய் உள்ளானோ அப்பொருளால் துன்பம் அடைவதில்லை

2.பொருள்மீது உள்ள ஆசையை உரிய காலத்தில் துறந்தால் பெறும் இன்பம் பலவாகும்.

3.ஐம் புலன்களுக்கான ஆசை,அதற்கான பொருள்கள் எல்லாவற்றினையும் வெல்லுதல் வேண்டும்.

4.பற்றில்லாமல் இருத்தலே துறவு..ஒரு பற்றிருந்தாலும் மனம் மயங்கிவிடும்.

5.பிறவித்துன்பம் போக்க முயலும் போது உடம்பே மிகையாகும்..அதன் மீது வேறு தொடர்பு ஏன்?

6.நான் என்ற ஆணவத்தை விட்டவன் தேவர்க்கும் எட்டா உயர் நிலை அடைவான்.

7.பற்றுகளைப் பற்றிக்கொள்பவரை துன்பங்களும் பற்றிக்கொள்ளும்.

8.முற்றும் துறந்தவர் உயர் நிலை அடைவர்.அல்லாதார் அறியாமை என்னும் வலையில் விழுவர்.

9.பற்றுகளைத் துறந்தால் இன்ப துன்பங்கள் அணுகாது.இல்லையேல் அவை மாறி மாறி வந்து வறுத்தும்.

10.பற்றில்லாதவனான கடவுளிடம் பற்று வைத்தல் ஒன்றே பற்றுக்களை துறக்கும் வழியாகும்.

Wednesday, April 16, 2008

34.நிலையாமை

1.நிலையில்லாதவற்றை நிலையானவை என நம்புவது அறியாமை ஆகும்.

2.சேர்த்து வைக்கும் பெருஞ்செல்வம் நம்மைவிட்டு ...காட்சி முடிந்ததும் அரங்கை விட்டு செல்லும் மக்கள் போல்
கலைந்து சென்று விடும்.
3.செல்வம் நிலையற்றது என உணர்ந்து அதை வைத்து நிலையான நற்செயலில் ஈடுபட வேண்டும்.

4.வாழ்க்கையை உணர்ந்தவர்கள்..நம் ஆயுளை அறுத்துக் கொண்டிருக்கும் வாள் போன்றது காலம் என அறிவர்.

5.வாழ்வு நிலையானதில்லை என உணர்ந்து உயிருள்ள போதே நற் பணிகள் ஆற்றிட வேண்டும்.

6.நேற்று உயிருடன் இருந்தவர் இன்று இல்லை என்ற பெருமை இவ்வுலகிற்கு உண்டு.

7.வாழ்க்கையின் உண்மையை சிந்தித்து அறியாதவர்கள்..பேராசை கொண்டவராய் இருப்பர்.

8.உடல்..உயிர்..இடையே யான உறவு..முட்டைக்கும்,பறவைக்குஞ்சிற்கும் இடையேயான உறவு போலாகும்.

9.நிலையில்லா வாழ்க்கையில்..பிறப்பு எனப்படுவது..தூங்கி விழிப்பதைப் போன்றது..சாவு என்பது விழிக்க முடியா
தூக்கமாகும்.
10.உடலுடன் தங்கியுள்ளது உயிர்..உயிர் பிரிந்தால் வேறு புகலிடம் இல்லை.

Tuesday, April 15, 2008

33.கொல்லாமை

1.கொலை செய்தல் தீயவற்றை விளைவிப்பதால்..எவ்வுயிரையும் கொல்லாமையே அறச் செயலாகும்.

2.நம்மிடமிருப்பதை எல்லாரிடமும் பகிர்ந்துக் கொண்டு எல்லா உயிரும் வாழ வாழும் வாழ்வே ஈடு இணையற்ற வாழ்வாம்.
3.முதலில் கொல்லாமை..அடுத்து பொய் சொல்லாதிருத்தல் இவையே முதன்மையான அறங்கள் ஆகும்.

4.எவ்வுயிரைரும் கொல்லாதிருப்பதே நல் வழி யாகும்.

5.எல்லா உலகியலையும் துறந்தவரைவிட கொல்லாமையைக் கடை பிடிப்பவர் சிறந்தவர்.

6.கொலை செய்யாமையை அறனெறியாகக் கொண்டவரின் பெருமையை எண்ணி சாவு கூட அவர்களை பறிக்க
தயங்கும்.
7.தன் உயிரே போவதாயினும் பிற உயிர் போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது.

8.ஒரு கொலை நன்மை பயக்கும் என்றாலும்..பண்புடையோர் அந்த நன்மையை இழிவானதாகவே எண்ணுவர்.

9.பகுத்தறிவை இழந்து கொலை செய்பவர்கள் இழி பிறவிகளே ஆவர்.

10.தீய வாழ்க்கையில் இருப்போர்.வறுமையும்,நோயும் அடைந்து பல கொலைகளையும் செய்தவராய் இருப்பர்

Sunday, April 13, 2008

32.இன்னா செய்யாமை

1.பிறர்க்கு கேடு செய்வதால் செல்வம் கிடைக்கும் என்றாலும் மாசற்றவர் கேடு செய்ய மாட்டார்கள்.

2.கோபத்தால் ஒருவர் நமக்கு துன்பம் செய்தாலும்..அதை திரும்ப செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கை யாகும்.
3.யாருக்கும் கேடு செய்யாதவர்க்கு யாரேனும் கேடு செய்தால்..கேடு செய்பவர் மீளாத் துன்பம் அடைவர்.

4.நமக்குத் தீங்கு செய்பவரை தண்டிக்க சரியான வழி..அவர் வெட்கித் தலை குனியுமாறு அவருக்கு நன்மை செய்வதுதான்.
5.பிற உயிர்களின் துன்பத்தையும் தம் துன்பம் போல கருதாதோருக்கு அறிவு இருந்தும் பயனில்லை.

6.வாழ்க்கையில் துன்பம் என்ன என அறிந்தவன் மற்றவர்க்கு அதை செய்யாதிருக்க வேண்டும்.

7.தினையளவுக் கூட எப்போதும்,எவரையும் இழிவு படுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்கக் கூடாது.

8.பிறர் தரும் துன்பத்தை உணர்ந்தவன் பிற உயிர்க்கு எந்த துன்பமும் செய்யக்கூடாது.

9.பிறர்க்கு தீங்கு செய்வதால் மகிழ்ச்சி அடைவோருக்கு அதே போன்ற தீங்கு அவரையே தாக்கும்.

10.தீங்கு செய்பவருக்குத்தான் தீங்குகள் வரும்.எனவே யாருக்கும் தீங்கிழைக்காதவரை எந்த தீங்கும் அணுகாது.

Saturday, April 12, 2008

31.வெகுளாமை

1.நமது கோபம் பலிக்குமிடத்தில் கோபம் கொள்ளக்கூடாது.பலிக்காத இடத்தில் கோபம் கொள்வதில் என்ன பயன்.
(எந்த இடத்திலும் கோபம் கொள்ளக்கூடாது)
2.நம்மைவிட வலியோரிடம் கோபம் கொண்டால்,கேடு விளையும்.மெலியோரிடம் கோபம் கொண்டால் அது மிகவும்
கேடானது.
3.யார் மீது சினம் கொண்டாலும் அதை மறந்து விட வேண்டும்.இல்லையேல் தீய விளைவுகள் ஏற்படும்.

4.கோபம் கொள்கிறவரிடமிருந்து,முகமலர்ச்சி, மனமகிழ்ச்சி எல்லாம் மறைந்துவிடும்

5.தன்னைத்தானே காத்துக் கொள்ள சினம் காக்க வேண்டும்.இல்லையேல் அந்த சினமே அவனை அழிக்கும்.

6.கோபமுடையவரை .அந்த கோபமே அவரை அழிப்பதுடன், அவர் சுற்றத்தாரையும் அழிக்கும்.

7.மண் தரையை கையால் அடித்தால் கை வலிக்கும். அது போலத்தான் சினமும்..அது நம்மையே துயரத்தில் ஆழ்த்தும்.
8.நமக்கு தீமை பல புரிந்தவன் திருந்தி வரும் போது கோபம் கொள்ளாமல் இருப்பதே நல்லது.

9.கோபம் கொள்ளாதவன் எண்ணியதெல்லாம் உடனே பெறமுடியும்.

10.அளவில்லா கோபமுடையவர்...இறந்தவராகக் கருதப்படுவார்.கோபத்தை துறந்தவர் துறவிக்கு சமம்

Wednesday, April 9, 2008

30.வாய்மை

1.பிறருக்கு சின்ன தீமை கூட ஏற்படாத சொல்லை சொல்வதே வாய்மை எனப்படும்.

2.நன்மையை விளைவிக்குமானால் பொய் கூட அச்சமயம் வாய்மையாகும்.

3.மனசாட்சிக்கு எதிராக பொய் சொன்னால்..அதுவே அவரை தண்டிக்கும்.

4.மனதில் கூட பொய்யை நினைக்காதவர்கள் மக்கள் மனதில் நிலையா இடம் பெறுவர்.

5.உதட்டளவில் இன்றி மனதிலிருந்து வாய்மை பேசுபவர்கள் தவம்,தானம் செய்பவர்களைவிட உயர்ந்தவர்கள் ஆவர்.

6.பொய் இன்றி வாழ்வதே புகழ் மிக்க வாழ்வு..அதுவே அறவழி வாழ்வாகும்.

7.செய்யக்கூடாத செயல்களை செய்யாததால் எற்படும் நன்மையைவிட பொய் கூறாத பண்பே சிறந்ததாகும்.

8.நீரில் குளிப்பதால் உடல் அழுக்கு நீங்கும்.அதுபோல மன அழுக்கு தீர்ப்பது வாய்மையே ஆகும்.

9.இருளைப் போக்கும் விளக்கை விட மன இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒளிவிளக்காகும்.

10.நமக்கு நல்லது எதுவென உண்மையாய் கூறுவோமானால்..அது உண்மையைத்தவிர வேறு ஒன்றுமில்லை.

29.கள்ளாமை

1.எந்தப் பொருளையும் களவாடும் எண்ணம் இல்லாமல் இருக்க வேண்டும்.

2.சூழ்ச்சி செய்து பிறர் பொருளை அடையலாம் என்று நினைப்பது கூட தவறாகும்.

3.கொள்ளையடிப்பதால் செல்வம் பெருகுவது போல் தோன்றினாலும்,அந்த செயல் அவனிடம் ஏற்கனவே உள்ள
செல்வத்தையும் கொண்டுபோய் விடும்.
4.களவு புரிவதில் உண்டாகும் தணியா தாகம் ..அதன் விளைவுகளால் தீரா துன்பத்தைத் தரும்.

5.ஒருவர் அசந்திருக்கும் நேரம் அவர் பொருளை களவாட எண்ணுபவரிடம்,அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.

6.ஒரு எல்லைக்குட்பட்டு வாழாதவர்கள்..களவு செய்து பிறர் பொருளை கொள்வதில் நாட்டமுடையவராய் இருப்பர்.

7.அளவறிந்து வாழ்க்கை நடத்துபவரிடம் ..களவாடும் குணம் இருக்காது.

8.நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்..கொள்ளையடிப்போர் நெஞ்சமோ வஞ்சக வழியில் செல்லும்.

9.களவு வழியில் நடப்பவர்கள் ..வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்.

10.களவை மனத்தாலும் நினைத்துப் பார்க்காதவர்களுக்கு ..புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது

28.கூடா ஒழுக்கம்

1.ஒழுக்கம் உள்ளவர்களைப் போல் நடிக்கும் மக்களைப் பார்த்து பஞ்ச பூதங்களும் சிரிக்கும்.

2.துறவுக்கோலத்தில் உள்ளவர்கள் தன் மனத்திற்கு குற்றம் என்று தெரிவதை செய்ய மாட்டார்கள்.

3.துறவுக்கோலம் பூண்டும் மனத்தை அடக்க முடியாதவர்கள், பசுத்தோல் போர்த்திய புலி போல் வஞ்சகர் ஆவர்.

4.வேடன் மறைந்து பறவைகளை தாக்குவதும், தவக் கோலத்தினர் தகாத செயல்களில் ஈடுபடுவதும் ஒன்றுதான்.

5.பற்றற்றவராய் நடப்பவர்கள் போல ஏமாற்றுபவர்கள், ஒரு நாள் தன் செயலுக்கு தானே வருந்துவர்.

6.உண்மையாக பற்றுகளைத் துறக்காமல் துறந்தது போல நடப்பவர் இரக்கமற்ற வஞ்சகர்கள் ஆவர்.

7.பார்க்க குண்டுமணியைப்போல் சிவப்பாக இருந்தாலும்,அதன் முனையில் உள்ள கறுப்புபோலக் கறுத்த மனம்
படைத்தவர் உள்ளனர்.
8.மாண்புடையோர் என்று தன் செயல்களை மறைத்து திரியும் மாசு உடையோர் உலகில் பலர் உண்டு.

9.அம்பு நேரானது,ஆனால் கொலை செய்ய உதவும்.யாழ் வளைந்தது ஆனால் இன்ப இசையைத் தரும்.அதுபோல
மக்கள் பண்புகளே அவர்களை புரிய வைக்கும்.
10.ஒருவன் உண்மையான துறவியாய் இருந்தால்..மொட்டையடிப்பதோ,சடாமுடி வளர்த்துக் கொள்வதோ தேவையில்லை.

Tuesday, April 8, 2008

27.தவம்

1.எதையும் தாங்கும் இதயம்,எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமை இவையே தவம் எனப்படும்.

2.தவம் என்பது உறுதிப்பாடு,மன அடக்கம்.ஒழுக்கம் இல்லாதவர்கள் தவத்தை மேற்கொள்வது வீண்.

3.பற்றற்றோருடன் நாம் இருந்தாலும், கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தை மறக்கக்கூடாது.

4.மன உறுதியும்,கட்டுப்பாடும் கொண்ட தவம்..பகைவரை வீழ்த்தும்.நண்பரைக் காக்கும்.

5.உறுதிமிக்க தவம் விரும்பியதை,விரும்பியவாறு செய்து முடிக்க துணையாய் நிற்கும்.

6.அடக்கம்,அன்பு நெறி,துன்பங்களை தாங்கும் பொறுமை இதுவே தவம் ஆகும்.ஆசையை விட்டொழித்தால் போதும்.

7.தம்மை வருத்திக்கொண்டு,ஒரு குறிக்கோளுடன் தவம் இருப்போரை எந்த துன்பம் தாக்கினாலும் பொன் போல்
புகழ் பெறுவர்.
8.தனது உயிர்,என்ற பற்று,தான் எனும் செருக்குஇல்லாதாரை உலகம் புகழ்ந்து பாராட்டும்.

9.எந்த துன்பம் வந்தாலும், அதைத்தாங்கி தன் குறிக்கோளில் உறுதியாக இருப்போர் சாவையும் வெல்லுவர்.

10.மன உறுதி கொண்டவர் சிலராகவும், ஆற்றலும்,உறுதியுமற்றவர்கள் பலராகவும் உலகில் உள்ளனர்.

26.புலால் மறுத்தல்

1.தன் உடல் வளர வேறு உயிரின் உடலை உண்பவனிடம் கருணை உள்ளம் இருக்குமா.?

2.புலால் உண்பவர்களை அருள் உடையவர்களகக் கருதமுடியாது.

3.படைக்கருவியை உபயோகிப்பவர் நெஞ்சமும்,ஒரு உயிரின் உடலை
உண்பவர் நெஞ்சமும் அருளுடமை அல்ல.

4.கொல்லாமை என்பது அருளுடமை....கொல்லுதல் அருளற்ற செயல்...
ஊன் உண்ணுதல் அறம் இல்லை.

5.உயிர்களை சுவைக்காதவர்கள் இருப்பதால் தான் பல உயிர்கள்
கொல்லப்படாமல் வாழ்கின்றன.

6.உண்பதற்காக உயிர்களை கொல்லாதிருப்பின்..புலால் விற்கும் தொழிலை
யாரும் மேற்கொள்ளமாட்டார்கள்.

7.ஊன் ஒரு உயிரின் உடற்புண் என்பதால் அதை உண்ணாமல் இருக்கவேண்டும்.

8.மாசற்ற மதி உள்ளோர் ..ஒரு உயிரை அழித்து அதன் ஊனை உண்ணமாட்டார்கள்.

9.நெய் போன்றவற்றை தீயிலிட்டு நல்லது நடக்க யாகம் செய்வதை விட ஒரு உயிரை
போக்காமலிருப்பது நல்லது.

10.புலால் உண்ணாதவரையும்,அதற்காக உயிர்களை கொல்லாதவர்களையும்
எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.

Monday, April 7, 2008

25.அருளுடமை

1.பொருட்செல்வம் கொடியவர்களிடம் கூட இருக்கும்...ஆனால் அது அருட்செல்வத்துக்கு ஈடாகாது.

2.எப்படி ஆராய்ந்தாலும் அருள் உடமையே வாழ்க்கைக்கு துணையாகும்.

3.அருள் நிறை மனம் படைத்தோர் அறியாமையில் உழலமாட்டார்கள்.

4.எல்லா உயிரிடத்தும் கருணைக்கொண்ட சான்றோருக்கு..தம் உயிரைப்பற்றிய கவலை இருக்காது.

5.காற்றின் இயக்கத்தில் திகழும் உலகே..அருள் இயக்கத்தால் துன்பம் உணராததற்க்கு ஒரு சான்று.

6.அருளற்றவர்கள் தீமைகள் செய்பவர்களகவும் ,பொருள் அற்றவர்களாகவும் ,கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.

7.பொருளில்லாதவர்க்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது.அதுபோல் கருணை இல்லையேல்
துறவற வாழ்க்கையும் சிறந்ததாகாது.

8.பொருளை இழந்தால் மீண்டும் ஈட்டலாம் ஆனால் அருளை இழந்தால் மீண்டும் பெற முடியாது.

9.அறிவுத்தெளிவு இல்லாதவன் நூலின் உண்மைப்பொருளை அறியமுடியாது.
அதுபோலத்தான் அருள் இல்லாதவனின் அறச்செயலும்.

10.தன்னைவிட மெலிந்தவர்களை துன்புறுத்தும்போது ..தன்னைவிட வலியவர் முன் தான்
எப்படியிருப்போம் என எண்ண வேண்டும்.

24.புகழ்

1.பிறர்க்கு ஈதலும்,புகழுமே வாழ்வில் ஆக்கம் தரும்

2.இல்லாதவர்க்கு வழங்குபவரின் புகழே போற்றப்படும் புகழாகும்.

3.ஒப்பற்றதும்,அழிவில்லாததும் இந்த உலகில் புகழ் ஒன்றே ஆகும்.

4.தன்னலமின்றி புகழ் ஈட்டிய மக்களை ஏழேழு உலகும் பாராட்டும்.

5.துன்பம்,சாவு.. இவற்றிலும் கூட புகழ் பெறுவார் ஆற்றலுடையவர்.

6.எத்துறையில் ஈடுபட்டாலும் புகழோடு விளங்க வேண்டும்.அல்லாதார் அத்துறையில் ஈடுபடவே கூடாது.

7.புகழுடன் வாழ முடியாதார் ..தம் செயல்களை இகழ்பவரை நொந்துக்கொள்ளாமல் தன்னைத்தானே நொந்துக்கொள்ள வேண்டும்.
8.தமக்குப்பிறகு எஞ்சி நிற்கக்கூடிய புகழை பெறாதார், வாழ்ந்தும் பயன் இல்லை.

9.மனித உடலில் உயிர் எனப்படுவது புகழ் ஆகும்.அது இல்லாதார் இந்த பூமியில் தரிசு நிலமே ஆவர்.

10.பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை.அதுபோல புகழுடன் வாழ்வதே வாழ்க்கை.

Sunday, April 6, 2008

23.ஈகை

1.எந்த ஆதாயமுமின்றி இல்லாதவருக்கு வழங்குவதே ஈகைப்பண்பாகும்.

2.பிறரிடம் கை யேந்துவது சிறுமை..ஆயினும்..கொடுப்பவர்க்கு கொடுத்து வாழ்வதே பெருமை.

3.தன் வறுமையைக் காட்டிக்கொள்ளாமல்..பிறர்க்கு கொடுப்பது உயர் குடியினர் பண்பாகும்.

4.கொடுப்பவர்..அதனால் பயனடைபவரின் புன்னகை முகத்தைக் கண்டு மகிழ்ந்தாலும்..பெறுபவர் நிலை கண்டு
வருந்துவர்.
5.உண்ணா நோன்பை விட ..பசிப்பவர்க்கு உணவு அளித்ததால் உண்டாகும் பலன் அதிகம்.

6.பட்டினியால் வாடும் ஒருவரின் பசியை தீர்ப்பது மிகவும் புண்ணியமான செயல் ஆகும்.

7.பகிர்ந்து உண்போரை பசி என்றும் அணுகாது.

8.யாவருக்கும் எதுவும் அளிக்காத ஈவு இரக்கமற்றோர், ஒருவருக்கு உதவி..அதனால் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியை அறியார்.

9.பிறர்க்கு கொடுப்பதால் செல்வம் குறையுமெனக் கூறி தான் மட்டும் உண்ணுவது பிச்சை எடுப்பதற்கு சமம்.

10.சாவு என்னும் துன்பத்தை விட, வறியவர்க்கு ஏதும் கொடுக்க முடியா துன்பம் பெரியது

22.ஒப்புரவறிதல்

1.பதிலுதவி எதிர்ப்பார்த்து நாம் உதவி செய்யக்கூடாது..நமக்காக பெய்யும் மழை எந்த உதவியை திரும்ப
எதிர்ப்பார்க்கிறது?
2.பிறர் நலனுக்கு உதவும் பொருட்டே நம்மிடம் உள்ள பொருள் பயன்பட வேண்டும்.

3.பிறர்க்கு உதவிடும் பண்பைத்தவிர சிறந்த பண்பு வேறு எதுவும் இல்லை.

4.பிறர்க்கு உதவி செய்ய தன் வாழ்வில் நினைப்பவனே உண்மையில் உயிருள்ளவனாக கருதப்படுவான்.

5.பொது நோக்குடன் வாழ்பவனின் செல்வம்..மக்களுக்கு பயன் தரும் நீர் நிறைந்த ஊருணி ஆகும்.

6.பிறர்க்கு உதவும் எண்ணம் உள்ளவனிடம் செரும் செல்வம் பழுத்த மரம் போன்றது.

7.பிறர்க்கு உதவுபவனின் செல்வம்..ஒரு நல்ல மரத்தின் எல்லா பாகமும் பயன்படுவது போன்றது ஆகும்.

8.நம்மை வறுமை வாட்டினாலும்..முடிந்த அளவு உதவுதலே சிறந்த பண்புடையாளனுக்கு அடையாளம்.

9.பிறர்க்கு உதவுபவன் ..வறுமையடைந்து விட்டான் என்று அறியும் நேரம் பிறர்க்கு உதவிட முடியாத நேரமே ஆகும்.

10.பிறர்க்கு உதவும் செயல் கேடு விளைவிக்குமாயின்..அக்கேட்டை தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ள வேண்டும்.

21.தீவினையச்சம்

1.தீயசெயல்களை செய்ய தீயோர் அஞ்சமாட்டார்கள்...ஆனால் சான்றோர் அஞ்சுவர்.

2.தீய செயல்கள் தீயைவிடக் கொடுமையானதால் அதை செய்திட அஞ்சவேண்டும்.

3.நமக்கு தீமை செய்தவர்க்கு தீமையை திருப்பிச் செய்யாதிருத்தலே அறிவுடமை ஆகும்.

4.மறந்தும் கூட பிறருக்கு கேடு நினைக்கக்கூடாது.அப்படி நினைத்தால்..நினைப்பவனுக்கே கேடு உண்டாகும்.

5.வறுமையின் காரணாமாகக்கூட தீய செயல்கள் செய்யக்கூடாது.அப்படிச்செய்தால்
வறுமை அவனை விட்டு அகலவே அகலாது.

6.தீய செயல்கள் நம்மை தாக்கக்கூடாது என எண்ணுபவன் பிறர்க்கும் தீங்கு செய்யக்கூடாது.

7.நேர்மையான பகையை விட ஒருவன் செய்யும் தீயவினைகள் பெரும் பகையாகும்.

8.நிழல் நம்மைவிட்டு அகலாது இருப்பது போல செய்யும் தீமையும் கடைசிவரை நம்மை விட்டு அகலாது.

9.தனது நலம் விரும்புபவன் தீய செயல்கள் பக்கம் நெருங்கமாட்டான்.

10.பிறர்க்கு தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்த கெடுதியும் ஏற்படாது.

Thursday, April 3, 2008

20.பயனில சொல்லாமை

1.பலர் வெறுக்கும் பயனற்ற சொற்களை பேசக்கூடாது.

2.பலர்முன் பயனற்றவற்றை பேசுவது தீமையுடையதாகும்.

3.பயனற்றவற்றைப்பற்றி பேசுபவனை பயனற்றவன் என்று சொல்லலாம்.

4.பயனற்ற,பண்பற்ற சொற்கள் மகிழ்ச்சியை குலைக்கும்,தீமையை ஏற்படுத்தும்.

5.பண்புடையர் பயனில்லா சொற்களை கூறுவாரானில் அவரது மதிப்பு நீங்கிவிடும்.

6.பயனற்றவற்றைப் பேசி..பயன் கிடைக்கும் என எண்ணுபவன் மனிதப்பதர் ஆவான்.

7.பண்பாளர்கள் இனிய சொற்களைக் கூறாவிட்டாலும் பயனில்லா சொற்களை சொல்லக்கூடாது.

8.பலன்களை ஆராயும் ஆற்றல் படைத்தவர்...பயன் விளைவிக்காத சொற்களை கூறமாட்டார்.

9.மாசற்ற அறிவு கொண்டவர்கள்.. மறந்தும் பயனில்லா வார்த்தைகளை பேசமாட்டார்கள்.

10.பயனற்ற சொற்களை விடுத்து மனதில் பதியும் பயனுள்ள சொற்களையே பேச வேண்டும்.

19.புறங்கூறாமை

1.மற்றவர்களைப் பற்றி புறம் பேசுதல் அறவழியில் நடக்காதிருத்தலை விடத்தீமையானது.

2.நேரில் பொய்யாக சிரித்து..மறைவில் அவர் பற்றி தீது உரைப்பது கொடுமையானது.

3.ஒருவரை பார்க்கும்போது ஒன்றும் ....பார்க்காதபோது ஒன்றுமாக பேசுபவர் உயிர் வாழ்வதைவிட சாவது நன்று.

4.நேருக்கு நேர் ஒருவரது குறைகளை சாடுவது புறங்கூறுவதை விட நல்லது.

5.பிறரைப்பற்றி புறம் பேசுபவன் அறவழியில் நடக்காதவனாவான்.

6.பிறர் மீது புறம் கூறினால் ...அதுவே கூறுபவனை திரும்பி தாக்கும்.

7.இனிமையாக பேசத்தெரியாதவர்கள்தான் நட்பை கெடுத்து புறங்கூறுவார்கள்.

8.நெருங்கியவர்களை பற்றியே புறம் பேசுபவர்கள் மற்றவர்களைப்பற்றி எவ்வளவு கூறுவார்கள்.

9.ஒருவன் இல்லாதபோது அவனைப்பற்றி பழிச்சொல் கூறுபவனையும் தருமமாக நினைத்தே
பூமி காக்கிறது

10.பிறர் குற்றம் பற்றி எண்ணுபவர்கள் தன்னிடமுள்ள குற்றத்தையும் நினைத்தல் நல்லது.

Wednesday, April 2, 2008

18.வெஃகாமை

1.பிறரின் பொருளைக் கவர்ந்துக்கொள்ள விரும்புபவரின் குடியும் கெட்டொழிந்து..பழியும் வந்து சேரும்.

2.நடுவுநிலை தவறுவது வெட்கப்படும் செயல் என்பவர்..பயனுக்காக பழிக்கப்படும் செயலை செய்யார் .

3.அறவழி பயனை உணர்வோர்..உடனடிப் பயன் கிடைக்கும் என்பதற்காக அறவழி தவறார்.

4.புலனடக்கம் கற்றோர்..வறுமையில் வாடினாலும் பிறர் பொருளை விரும்பார்.

5.அறவழிக்கு புறம்பாக நடப்பவரிடம் நுண்ணறிவு இருந்தும் பயனில்லை.

6.அறவழி நடப்பவன் பிறர் பொருளை விரும்பி தவறான செயலில் ஈடுபட்டால் கெட்டழிவான்.

7.பிறன் பொருளால் வளம் பெற விழைபவனுக்கு அதனால் உண்டாகும் பயனால் நன்மை இருக்காது.

8.நம்மிடம் உள்ள செல்வச்செழிப்பு குன்றாமல் இருக்க வேண்டின்,பிறன் பொருள் மீதான ஆசை தவிர்க்க வேண்டும்.

9.பிறன் பொருளைக்கவரா மக்களின் ஆற்றலுக்கேற்ப செல்வம் சேரும்.

10.பிறன் பொருளை கவர்பவன் வாழ்வு அழியும்.அல்லாதான் வாழ்வு வெற்றி அடையும்.

Tuesday, April 1, 2008

17.அழுக்காறாமை

1.ஒழுக்கத்துக்குரிய நெறி மனத்தில் பொறாமையின்றி வாழ்வதே.

2.ஒருவர் பெரும் மேலான பேறு யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பே ஆகும்.

3.அறநெறி.ஆக்கம் .ஆகியவற்றை விரும்பாதவன் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.

4.தீயவழியில் சென்றால் துன்பம் ஏற்படும் என்பதை உணர்ந்தால் பொறாமை காரணமாக
தீயச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

5.பொறாமைக்குணம் கொண்டவர்களை வீழ்த்த வேறு பகை தேவை இல்லை.... அந்த குணமே போதும்.

6.ஒருவர்க்கு செய்யும் உதவியைக்கண்டு பொறாமை அடைந்தால் அந்த குணம் ..அவனையும்..
அவனை சார்ந்தோரையும் அழிக்கும்.

7.பொறாமைக் குணம் கொண்டவனை விட்டு லட்சுமி விலகுவாள்.

8.பொறாமை என்னும் தீ ஒருவனுடைய செல்வத்தை அழித்து அவனை தீய வழியில் விட்டுவிடும்.

9.பொறாமைக்குணம் கொண்டவனின் வாழ்வு வளமாகவும்...அல்லாதவன் வாழ்வு வேதனையாகவும்
இருந்தால் அது வியப்பான செய்தியாகும்.

10.பொறாமையால் உயர்ந்தோரும் இல்லை...அல்லாத காரணத்தால் புகழ் இகழ்ந்தாரும் இல்லை
.