Saturday, January 31, 2009

71.குறிப்பறிதல்

1.ஒருவன் ஏதும் சொல்லாமலேயே அவர் முகம் நோக்கி கருத்து அறிபவன் உலகத்துக்கு
அணிகலனாவான்.
2.ஒருவன் மனதில் உள்ளதை உணர வல்லவரை தெய்வத்தோடு ஒப்பிடலாம்.

3.முகம்,கண்,இவற்றின் குறிப்புகளால் உள்ளக் குறிப்பை உணருபவரை எதைக் கொடுத்தாவது
நம் துணை ஆக்கிக் கொள்ள வேண்டும்.
4.ஒருவன் மனதில் உள்ளதை.. அவன் கூறாமலேயே அறிந்துக் கொள்பவர் போல மற்றவர்கள்
உறுப்பால் ஒன்று பட்டாலும் அறிவால் வேறுபட்டவர்கள்.
5.ஒருவனது முகக் குறிப்பு உள்ளத்தில் உள்ளதைக் காட்டிவிடும் எனும் போது..அதை உணர
முடியாதவர்களுக்கு கண்கள் இருந்தும் பயனில்லை.
6.ஒருவன் மனதில் உள்ளதை அவன் முகம்..தன் எதிரில் உள்ளதை காட்டும் கண்ணாடிப் போலக்
காட்டிவிடும்.
7.உள்ளத்தில் உள்ள விருப்பு,வெறுப்புகளை தெரிவிக்கும் முகத்தைவிட அறிவு மிக்கது ஏதுமில்லை.

8.முகக் குறிப்பால் உள்ளத்தில் உள்ளதை அறிபவர் முன் ஒருவன் நின்றாலே போதுமானது ஆகும்.

9.கண் பார்வையின் வேறுபாடுகளை புரிந்துக் கொள்ளக் கூடியவர்கள்..ஒருவரின் கண்களைப் பார்த்தே
அவரிடம் உள்ளது நட்பா..பகையா என கூறிவிடுவர்.
10.தாம் நுட்பமான அறிவுடையோர் என்பவர்..பிறர் மனத்தில் உள்ளதை ஆராய்ந்து அறிய பயன்படுத்துவது
அவர்களின் கண்களையே ஆகும்.

Friday, January 30, 2009

70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

1.மன்னருடன் பழகுபவர் நெருப்பில் குளிர் காய்பவர்போல் அணுகியும்
அணுகாமலும் இருக்கவேண்டும்.

2.மன்னர் விரும்புவதைத் தாம் விரும்பாமலிருத்தல்,அரசரால்
நிலையான ஆக்கத்தைப் பெற்றுத்தரும்.

3.அரசரிடம் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் தவறுகள்
நேராமல் காத்துக்கொள்ளவேண்டும்.அரசனுக்கு சந்தேகம் வந்துவிட்டால் தீர்ப்பது எளிதல்ல.

4.வல்லமை உள்ள பெரியவர்கள் முன் மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும்
நகைப்பதையும் தவிர்த்து அடக்கமயிருக்கவேண்டும்.

5.அரசர் பிறருடன் பேசும்போது அதை ஒட்டுக்கேட்கக்கூடாது.அது என்ன வென்றும்
கேட்கக்கூடாது.அவர் என்ன என்று சொன்னால் மட்டுமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

6.அரசர் குறிப்பறிந்து தக்க காலம் எதிர்நோக்கி வெறுப்பில்லாதவற்றையும்,
விருப்பமானவற்றையும் அவர் விரும்பும்படி சொல்லவேண்டும்.

7.விரும்பிக்கேட்டாலும் பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப்
பயனற்றவற்றை சொல்லாமல் விடவேண்டும்.

8.அரசர் எனக்கு இளையவர் ..எனக்கு இன்னமுறையில் சொந்தம் என்று எல்லாம்
சொல்லாமல் நம் நிலைக்கு ஏற்றபடி நடக்கவேண்டும்.

9.நாம் அரசரால் விரும்பபட்டோம் என்ற துணிவில் அரசர் விரும்பாதவற்றை
அறிவுடையோர் செய்யமாட்டார்கள்.

10.நெருங்கி அரசருடன் பழகுவதாலேயே தகாத காரியங்களை செய்தால் அது
துன்பத்தையேத் தரும்.

Wednesday, January 28, 2009

69.தூது

1.அன்பான குணம்,தகுதியான குடிப்பிறப்பு,அரசர் விரும்பும் சிறந்த பண்பு பெற்றிருப்பதே
தூதுவனின் தகுதிகளாகும்.

2.அன்பு,அறிவு ஆராய்ந்து பேசும் சொல்வன்மை இம்மூன்றும் தூது செல்வோருக்கு தேவையான
பண்புகளாகும்.

3.வேற்று நாட்டவனிடம்..தன் நாட்டிற்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைக்கும் தூதுவனே..
நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

4.தூது உரைப்போர்.. அறிவு,தோற்றம்,ஆய்ந்த கல்வி ஆகிய மூன்றும்..நிறைந்தவராக இருத்தல்
வேண்டும்.

5.பலவற்றை தொகுத்திச் சொல்லி..பயனற்றவைகளை நீக்கி மகிழுமாறு சொல்லி..அரசனுக்கு
நன்மை உண்டாக்குபவனே தூதுவன்.

6.கற்கவேண்டியவற்றை கற்று..பிறரின் பகையான பார்வைக்கு அஞ்சாமல், கேட்பவர் உள்ளத்தில்
பதிய சொல்லி.. காலத்திற்குப் பொருத்தமானதை அறிகின்றனவே தூதுவன்.

7.செய்யவேண்டிய கடமையை தெளிவாக அறிந்து,செய்யும் காலத்தை எதிர் நோக்கித் தக்க
இடத்தையும் ஆராய்ந்து சொல்பவனே தூதுவன்.

8.துணிவு,துணை,தூய ஒழுக்கம் இவை மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

9.ஒரு அரசின் கருத்தை மற்றொரு அரசுக்கு எடுத்துக் கூறும்போது..வாய்த் தவறிக்கூட
குற்றமான சொற்களை சொல்லாதவனே தகுதியான தூதுவன் ஆவான்.

10.தனக்கு அழிவு வந்தாலும்..அதற்காக பயப்படாது..தன் அரசனுக்கு நன்மையை உண்டாக்குபவனே
தூதுவன் ஆவான்.

Monday, January 26, 2009

68.வினை செயல்வகை

1.ஒரு செயலில் ஈடுபடும்முன் அச்செயலால் எழப்போகும் சாதக,பாதங்கள் பற்றி
ஆராயவேண்டும்..முடிவெடுத்தபின் காலந்தாழ்த்தக்கூடாது.

2.மெதுவாக செய்யவேண்டிய காரியங்களை காலந்தாழ்த்தே செய்யலாம்.
ஆனால் விரைவாக செய்ய வேண்டியதை உடனே செய்யவேண்டும்.

3.இயலும் இடத்திலெல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது.
இயலாத இடமாயின் அதன் வழி அறிந்து செயலை முடிக்க வேண்டும்.

4.ஏற்ற செயல்.. எதிர்கொண்ட பகை இவற்றை முழுதும் முடிக்காது விட்டுவிட்டால்
அது நெருப்பைஅரைகுறையாக அணைத்தாற் போலாகிவிடும்.

5.வேண்டிய போருள்,அதற்கான கருவி,காலம்,செயல்முறை,இடம் ஆகியவற்றை....
ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன் பார்த்துக்கொள்ளவேண்டும்.

6.செயலை முடிக்கும் வகையும்,வரக்கூடிய இடையூறும்,முடிந்தபின் கிடைக்கும்
பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்யவேண்டும்.

7.ஒரு செயலை செய்பவன் அச்செயலைக்குறித்து நன்கு அறிந்தவனின் கருத்தை
முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.

8.ஒரு செயலில் ஈடுபடும்போதே ...அது தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்தல்
ஒரு யானையை பயன்படுத்தி மற்ற யானையை பிடிப்பது போன்றதாகும்.

9.நண்பருக்கு...நல்ல உதவியை செய்வதைவிட..பகைவராய் உள்ளவரை தன்னுடன்
சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத்தக்கதாகும்.

10.நம்மைவிட வலிமையுள்ளவரை எதிர்க்க நம்முடன் உள்ளவரே அஞ்சும்போது...
வேண்டுவது கிடைக்குமானால் வலியோரை பணிந்தும் அவர்கள் ஏற்றுக்கொள்வர்.

Friday, January 23, 2009

67.வினைத்திட்பம்

1.எல்லம் இருந்தும் மனதில் உறுதி இல்லையெனில் ...செய்யும்
செயலிலும் உறுதி இருக்காது.

2.இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்குவது...மீறிவந்தால்
மனம் தளராது இருப்பது..இவையே அறிவுடையோர் கொள்கையாகும்.

3.ஒரு செயலை செய்தபின் வெளியிடுவதே ஆண்மையாகும்..இடையில்
வெளியிட்டால் அது நீங்கா துன்பத்தையே கொடுக்கும்.

4.ஒருசெயலை சொல்லுவது எல்லோருக்கும் எளிது...சொல்லியதைச்
செய்து முடிப்பது கடினம்.

5.செயல் திறனால் சிறப்புற்றவரின் வினைதிட்பம்..ஆட்சியாளரையும்
கவர்ந்து பெரிதும் போற்றப்படும்.

6.எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதியாய் இருப்பவரே..
எண்ணியபடி வெற்றி பெறுவார்கள்

7.உருவத்தில் சிறியவர்களைக் கண்டு இகழக்கூடாது.பெரிய தேர் ஓட உதவும்
அச்சாணியும் உருவத்தில் சிறியது தான்.

8.மனம் கலங்காது..ஆராய்ந்து துணிந்து,தளர்ச்சியின்றி ...தாமதமும் இல்லாமல்
ஏற்ற செயலை செய்து முடிக்கவேண்டும்.

9.இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும்போது ...அதனால் ஆரம்பத்தில்
துன்பம் வந்த போதும் துணிவுடன் செய்து முடிக்கவேண்டும்.

10.எவ்வளவு தான் உறுதி உடையவராய் இருந்தாலும் ..செய்யும் தொழிலில்
உறுதியற்றவரை உலகம் மதிக்காது

Thursday, January 22, 2009

66.வினைத்தூய்மை

1.ஒருவனுக்கு கிடைக்கும் துணையின் நன்மை ஆக்கத்தையும்.
செய்யும் வினையின் நன்மை எல்ல நலன்களையும் கொடுக்கும்.

2. புகழையும்,நன்மையும் தராத செயல்களை எப்பொழுதுமே செய்யாமல்
விட்டொழிக்க வேண்டும்.

3.மேன்மேலும் உயரவேண்டும் என விரும்புபவர்,தன் புகழ் கெட காரணமான
செயலைச் செய்யாமல் விடுவர்.

4.தெளிந்த அறிவினையுடையவர்.. துன்பத்தில் சிக்கினாலும் இழிவான
செயலை செய்யார்.

5.பின்னால் நினைத்து வருந்தும் செயல்களைச் செய்யக்கூடாது.அப்படியே
தவறி செய்திருந்தாலும்..மீண்டும் செய்யாதிருத்தல் நல்லது.

6.பெற்ற தாயின் பசி கண்டு வருந்தினாலும்..ஒருவன் இழிவான
செயலைச் செய்யக்கூடாது.

7.இழிவான செயல் புரிந்து செல்வந்தனாக வாழ்வதை விட,கொடிய
வறுமை தாக்கினாலும் ,நேர்மையாளராக வாழ்வதே மேலானது.

8.தகாத செயல்களை விலக்காமல் செய்தவர்களுக்கு அச்செயல்கள்
நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.

9.பிறர் வருந்த திரட்டிய பொருள் எல்லம் போய்விடும்.. ஆனால் நல்வழியில்
ஈட்டிய செல்வம் நம்மை விட்டு போனாலும் மீண்டும் பயன் தரும்.

10.தவறான வழியில் பொருள் சேர்த்து காப்பாற்றுதல்..பச்சை மண் பாத்திரத்தில்
நீரை விட்டு காப்பாற்றுவது போன்றதாகும்.

Monday, January 19, 2009

65.சொல்வன்மை

1.நாவன்மை செல்வம் ஆகும்..அது சிறப்புடைய சிறந்த செல்வமாகும்.

2.ஆக்கமும்..அழிவும் சொல்லும் சொல்லால் வருவதால் ஒருவன் தன்
சொல்லில் தவறு நேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

3.கேட்பவரை கவரும் தன்மையும்..கேட்காதவரைக்கூட கேட்க வைபபதுமே
சொல்வன்மை ஆகும்.

4.சொல்லும் காரணத்தை அறிந்து சொல்லும் சொல்வன்மையைவிட
சிறந்த அறமும்..பொருளும் இல்லை.

5.ஒரு சொல்லை வெல்லும் மற்றொரு சொல் இல்லை என்பதை உணர்ந்த பின்னே
அச்சொல்லை பயன்படுத்தவேண்டும்.

6.பிறர் விரும்பும் கருத்துக்களைச் சொல்லி..பிறர் சொல்லும் சொல்லின்
பயனை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது அறிவுடையார் தொழிலாகும்.

7.சொல்லுவதை நன்கு சொல்லி ..சோர்வற்றவனாய்,அஞ்சாதவனாய்
உள்ளவனை யாராலும் வெல்லமுடியாது.

8.சொற்களை கோர்த்து...இனிமையாக சொல்ல வல்லவரை உலகத்தார் கேட்டு
அதன்படி நடப்பர்.

9.குற்றமற்ற சொற்களை சொல்லத் தெரியாதவர்தான்..பல சொற்களை
திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பர்.

10.தாம் கற்றதை பிறர்க்கு சரியாக விளக்கத் தெரியாதவர்கள்...
கொத்தாக மலர்ந்திருந்தாலும்..மணமில்லா மலரைப் போன்றவர்கள்.

Saturday, January 17, 2009

64.அமைச்சு

1.உரிய கருவி,ஏற்ற காலம்,செய்யும் வகை,செய்யப்படும் பணி ஆகியவற்றை ஆய்ந்து
அறிந்து செய்ய வல்லவனே அமைச்சன்.

2.அஞ்சாமை,குடிபிறப்பு,காக்கும் திறன்,கற்றறிந்த அறிவு,முயற்சி ஆகிய ஐந்தும்
கொண்டவனே அமைச்சன்.

3.பகைவனின் துணையைப் பிரித்தல்,தம்மிடம் உள்ளவரைக் காத்தல்,பிரிந்தவரை
மீண்டும் சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சன்.

4.ஒரு செயலை தேர்ந்தெடுத்தலும்,அதற்கான வழி அறிந்து ஈடுபடுதலும் துணிவான
கருத்துக்களை சொல்லுதலுமே அமைச்சனின் சிறப்பாகும்.

5.அறத்தை அறிந்தவனாய்,சொல்லாற்றல் கொண்டவனாய்,செயல் திறன் படைத்தவனாய்
இருப்பவனே ஆலோசனை சொல்ல தகுதி உடையவன்.

6.இயற்கையான அறிவு,நூலறிவு இரண்டையும் பெற்றவர் முன் எந்த சூழ்ச்சியும் நிற்காது.

7.நூலறிவைப் பெற்றிருந்தாலும்..உலக நடைமுறைகளை அறிந்து அதற்கேற்ப செயல்களை
நிறைவேற்ற வேண்டும்.

8.சொந்த அறிவும் இன்றி,சொல்வதையும் கேட்காதவர்களுக்கு அமைச்சன் தான் நல்ல
யோசனைகளைக் கூற கடைமைப்பட்டவன்.

9.தவறான வழியைக் கூறும் அமைச்சனைவிட..எழுபது கோடி பகைவர்கள் எவ்வளவோ மேலாகும்.

10.முறையாக எடுக்கப்பட்ட முடிவுகளையும்..செயல் படுத்த திறனற்றோர் எதையும் முழுமையாக
செய்யார்.

Friday, January 16, 2009

63.இடுக்கண் அழியாமை

1.துன்பம் வரும்போது கலங்கக்கூடாது.அதை எதிர்த்து
வெல்ல வேண்டும்.

2.வெள்ளம் போன்ற அளவற்ற துன்பமும்...அதை நீக்கும் வழியை
அறிவுடையவர்கள் நினைக்க விலகி ஓடும்.

3.துன்பம் வரும்போது கலங்காமல்..அத்துன்பத்திற்கே துன்பத்தை உண்டாக்கி
அதை வெல்ல வேண்டும்.

4.கரடுமுரடான பாதையில் வண்டி இழுக்கும் எருது போல விடாமுயற்சியுடன்
செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்படும்.

5.துன்பங்கள் கண்டு கலங்காதவர்களைக் கண்டு அத்துன்பமே
துன்பபட்டு அழியும்.

6.செல்வம் வரும்போது அதன்மீது பற்றுக்கொள்ளாதவர்கள்தான் ..
வறுமை வந்தபோது துவண்டுவிட மாட்டார்கள்.

7.உடலுக்கும் உயிர்க்கும் துன்பம் இயல்பானதால்..துன்பம் வரும்போது
அதை துன்பமாகக் கருதக்கூடாது.

8.இன்பம் தேடி அலையாது ..துன்பம் இயற்கையானதுதான் என
எண்ணுபவன் ..துவண்டு போவதில்லை.

9.இன்பம் வரும்போது ஆட்டம் போடாமலும்...துன்பம் வரும்போது வாடாமலும்
இரண்டையும் ஒன்று போல் கருதவேண்டும்.

10.துன்பத்தையே இன்பமாகக் கருதிக் கொண்டால்...அவர்களை
பகைவர்களும் பாராட்டுவார்கள்.

Thursday, January 15, 2009

62.ஆள்வினை உடைமை

1.எந்த ஒரு காரியத்தையும் நம்மால் முடியும் என்று நம்பிக்கையுடன் முயன்றால்
அதுவே பெரிய வலிமை ஆகும்.

2.எந்த செயலானாலும் ..அரைக்கிணறு தாண்டாமல் முழுவதுமாக செய்து முடிக்க வேண்டும்.

3.பிறர்க்கு உதவி செய்தல்....என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்ற
பண்பில் நிலைத்து இருக்கின்றது.

4.ஊக்கமில்லாதவரை நம் உதவியாளராக வைப்பது என்பது..ஒரு கோழை வாள்
வீச்சில் ஈடுபடுவதை போன்றதாகும்.

5.தன் இன்பத்தை விரும்பாதவனே..தான் ஏற்ற செயலை முடிக்க நினைப்பவனே..
தன் சுற்றத்தாரை தாங்குகின்ற தூணாக ஆவான்.

6.முயற்சி ஒருவனது செல்வத்தை பெருக்கும்..முயற்சி இன்மை அவனை வறுமையில் ஆழ்த்தும்.

7.ஒருவனின் சோம்பலில் மூதேவியும்,சோம்பலற்றவன் முயற்சியில் திருமகளும் வாழ்கின்றனர்.

8.ஊழ்வினை என்பதுடன் அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாமைதான் பெரும்பழியாகும்.

9.ஊழ்வினையால் ஒன்றை செய்ய முடியாமல் போனாலும்..ஒருவனின் முயற்சியானது
அந்த உழைப்பிற்கான வெற்றியைக் கொடுக்கும்.

10.ஊழ்வினையை வெல்ல முடியாது என்று சொல்வதை விட,முயற்சியை மேற்கொண்டால்
அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்யலாம்.

Monday, January 12, 2009

61.மடி இன்மை

1.பிறந்த குடி மங்காத விளக்காயிருந்தாலும்...ஒருவனது சோம்பல்
அதை மங்க வைத்துவிடும்.

2.பிறந்த குடி செழிக்க...சோம்பலை ஒழித்து...ஊக்கத்துடன்
முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

3.அழிக்கும் இயல்பான சோம்பல் கொண்டவனின் பிறந்த குடி
அவனுக்கு முன் அழிந்துவிடும்.

4.சோம்பலில் உழன்று..சிறந்த முயற்சி இல்லாதவர்கள் குடி
தனிப் பெருமை இழந்து...குற்றத்தை பெருக்கும்.

5.காலம் தாழ்த்துதல்,மறதி,சோம்பல்.அளவுக்கு மீறிய தூக்கம்
இந்நான்கும் கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் தோணிகளாகும்.

6.நல்லவர்கள் உறவு தானே வந்து சேர்ந்தாலும் ..சோம்பல் உடையவர்
சிறந்த பயனை அடைய முடியாது.

7.முயற்சியின்றி சோம்பேறியாய் வாழ்பவர்கள் அனைவரின் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.

8.நல்ல குடியில் பிறந்தவனிடம் சோம்பல் இருந்தால் அதுவே அவனைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

9.சோம்பலை அகற்றிவிட்டால் ..அவனது குடிப்பெருமையும்,ஆண்மையும்
தானே வந்து சேரும்.

10.சோம்பல் இல்லா அரசன் உலகம் முழுவதையும் ஒரு சேர அடைவான்

Friday, January 9, 2009

60.ஊக்கம் உடைமை

1.ஊக்கம் உடையவர் எல்லாம் உடையவர்.ஊக்கம் இல்லாதவர் எது இருந்தாலும் உடையவர் ஆக மாட்டார்கள்.

2.ஊக்கம் ஒன்றுதான்..நிலையான உடைமையாகும்.

3.ஊக்கம் உடையவர்கள்..ஆக்கம் இழந்து விட்டாலும்..இழந்துவிட்டோமே என கலங்க மாட்டார்கள்.

4.உயர்வு..ஊக்கமுடையவர்களை தேடிப்பிடித்து போய்ச் சேரும்.

5.தண்ணீர் அளவே தாமரைத் தண்டின் அளவும் இருக்கும்.அதுபோல மனிதர்களின் வாழ்க்கையின் உயர்வும்
ஊக்கத்தின் அளவே இருக்கும்.
6.உயர்வைப் பற்றியே எண்ண வேண்டும்..அவ்வுயர்வை அடையாவிடினும் நினைப்பை விட்டு விடக் கூடாது.

7.உடம்பு முழுதும் அம்புகளால் புண்பட்டாலும் யானை தன் பெருமையை நிலை நிறுத்தும்..அதுபோல
அழிவு வந்தாலும் ஊக்கமுடையவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
8.ஊக்கம் அற்றோர்..தம்மைத் தாமே எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடைய மாட்டார்கள்.

9.யானை பருத்த உடலையும்,கூர்மையான தந்தங்களையும் உடையது..ஆனாலும் ஊக்கமுள்ள புலி
தாக்கினால் அஞ்சும்.
10.ஊக்கமில்லாதவர்கள் மனிதர்களாக காணப்பட்டாலும்..மரங்களுக்கும்,அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.

Thursday, January 8, 2009

59.ஒற்றாடல்

1.ஒற்றரும்,நீதிநூலும் அரசனின் இரண்டு கண்களாக அமையும்.

2.எல்லோரிடத்திலும்,நிகழும் எல்லாவற்றையும் ஒற்றர் மூலம் விரைந்து அறிதல் அரசனின் தொழிலாகும்.

3.நாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றரால் அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்து நடக்காத அரசு தழைத்திடமுடியாது.

4.ஒற்று வேலை பார்ப்பவர்கள் வேண்டியவர்,வேண்டாதவர்,சுற்றத்தார் என்று எல்லாம் பாராது பணி செய்தலே
நேர்மைக்கு அடையாளம்.
5.சந்தேகப்படாத உருவத்தோடு,பார்ப்போர் கண் பார்வைக்கும் அஞ்சாமல்,என்ன நேரிடினும் மனத்தில் உள்ளதை
சொல்லாதவரே சிறந்த ஒற்றர்கள் ஆவர்.
6.முற்றும் தொடர்பில்லாதவராய் இருந்துக்கொண்டு..செல்ல முடியாத இடங்களில் சென்று ஆராய்ந்து..துன்பங்களை
தாங்கிக்கொண்டு தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாதவரே ஒற்றர் ஆவார்.
7.மற்றவர்கள் பற்றிய செய்திகளையும் அவர்களுடன் இருப்பவர் மூலம் கேட்டுத் தெரிந்துக்கொண்டு ..அதன்
உண்மைகளை தெளிந்து அறிவதே உளவறியும் திறனாகும்.
8.ஒரு ஒற்றன் தெரிவித்த செய்தியையும்..மறு ஒற்றன் மூலம் தெரிந்துக்கொண்டு ..செய்தியின் உண்மையைப் பற்றி
முடிவுக்கு வர வேண்டும்.
9.ஒரு ஒற்றனை..மறு ஒற்றன் தெரியாதபடி ஆள வேண்டும்.இது போல் மூன்று ஒற்றர்களை இயங்க வைத்து
அறிவதே உண்மை எனக் கொள்ள வேண்டும்.
10.ஒற்றரின் திறனை வியந்து அவனை சிறப்பு செய்தால்,அவன் ஒற்றன் என்பது வெளிப்படையாக தெரிந்து விடும்.

Wednesday, January 7, 2009

58.கண்ணோட்டம்

1.இரக்கம் என்னும் சிறந்த அழகு இருப்பதால் தான் உலகு
அழியாமல் இருக்கின்றது.

2.இரக்கம்,அன்பும் இல்லதவர்கள் உயிரோடு இருத்தல் நிலத்துக்கு ஒரு சுமையே ஆகும்.

3.பாடலுடன் பொருந்தாத இசை போல..இரக்கம் சுரக்கா கண்ணினால் என்ன பயன்.

4.தக்க அளவில் அன்பும் இரக்கமும் இல்லாத கண்கள் முகத்தில் இருந்தால் என்ன...இல்லாவிட்டால் என்ன.

5.கருணைஉள்ளம் உள்ளவன் கண்ணே கண்..மற்றவை எல்லம் கண் அல்ல புண்.

6.கண் இருந்தும் இரக்கம் இல்லாதவர் மரம் போன்றவர்கள்.

7.கருணை உள்ளம் கொண்டவர்களுக்கு இருப்பதே கண்கள்..அல்லாதவர்கள்
கண்ணற்றோர் என சொல்லலாம்.

8.கடமை தவறாதல் கருணை பொழிதல் உள்ளவர்க்கே
இவ்வுலகம் உரிமையுடையதாகும்.

9.தம்மை அழிக்க நினைப்பவரிடமும் பொறுமை காட்டுவது மிக
உயர்ந்த பண்பாகும்.

10.கருணை உள்ளமும் பண்பும் உள்ளவர்கள் விஷத்தையேக் கொடுத்தாலும் அருந்தி மகிழ்வர்

Tuesday, January 6, 2009

57.வெருவந்த செய்யாமை

1.ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து மீண்டும் அக்குற்றம் செய்யாதப்படி..குற்றத்துக்கு பொருந்துமாறு
தண்டிப்பவனே அரசன்.
2.குற்றங்கள் நிகழாமல் இருக்க..தண்டிக்கும்போது அளவுக்கு அதிகமாக நடந்துக்கொள்வது போலக் காட்டி
..அளவு மீறாமல் நடக்க வேண்டும்.
3.குடிமக்கள் அஞ்சும்படியாக நடக்கும் அரசு..விரைவில் அழியும்.

4.நம் தலைவன் கடுமையானவன்..என குடிமக்கள் கருதினால்..அந்த அரசு தன் பெருமையை விரைவில்
இழக்கும்.
5.கடுகடுப்பும்,இனிமையற்ற முகமும் உடையவன் செல்வம் பேயைப்போல அஞ்சத்தக்க தோற்றத்துக்கு ஒப்பாகும்.

6.கடுஞ்சொல்லும்,இரக்கமற்ற உள்ளமும் கொண்டவன் செல்வம் நிலைக்காமல் அழிந்து விடும்.

7.கடுஞ்சொல்லும்,முறையில்லா தண்டனையும் அரசின் வெற்றிக்கான வலிமையை தேய்க்கும் கருவியாக அமையும்.

8.அமைச்சர்களுடன் கலந்து முடிவெடுக்கா அரசன்..சினத்துக்கு ஆளாகி நிற்பதுடன்,புகழையும் இழப்பான்.

9.முன்னரே உரிய பாதுகாப்பு இல்லாத அரசன்..போர் வந்துவிட்டால் தற்காப்பு இல்லாது விரைவில் வீழ்வான்.

10.கொடுங்கோல் மன்னன் படிக்காதவர்களை, இந்த பூமிக்கு பாரமாய் தனக்கு பக்க பலமாய் ஆக்கிக்கொள்வான்.

Monday, January 5, 2009

56.கொடுங்கோன்மை

1.குடிகளை வருத்தும் தொழிலையும்,முறையில்லா செயல்களையும் செய்யும் அரசன் கொலையாளியை விடக்
கொடியவன்.
2.ஆட்சியில் இருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டி பொருள் பறித்தல்..வேல் ஏந்தி நிற்கும்
கள்வன் மிரட்டி 'கொடு' என பறித்தல் போன்றது.
3.ஆட்சியில் விளையும் நன்மை,தீமைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தகுந்தவாறு நடக்காத அரசு சீர் குலையும்.

4.நாட்டு நிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசன் பொருளையும்,குடிகளையும் ஒரு சேர இழப்பான்.

5.கொடுமையால் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கக்கூடியதாகும்.

6.நீதி நெறி தவறாத அரசு புகழ் பெறும்..தவறிய அரசு சரிந்து போகும்.

7.மழை இல்லா உலகம் எத்தன்மையானதோ..அத்தன்மையானது நாட்டில் வாழும் மக்களிடம் அருள் இல்லா அரசு.

8.வறுமை இல்லா ஒருவன் வாழ்வு..கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்து விட்டால் அது வறுமைத் துன்பத்தை
விட அதிக துன்பமாகும்.
9.முறை தவறி நாட்டை ஆளும் அரசன் இருந்தால்..அந்த நாட்டில் பருவ மழை கூட பொய்த்துப் போகும்.

10.நாட்டைக் காக்கும் அரசன் முறை தவறினால்..அந் நாட்டில் பசுக்கள் பால் தராது..அறநூல்களையும் மக்கள்
மறப்பர்.

Sunday, January 4, 2009

55.செங்கோன்மை

1.குற்றம் என்னவென்று ஆராய்ந்து, எந்த பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல்
வழங்கப்படுவது நீதியாகும்.
2.உலகத்து உயிர்கள் மழையை நோக்கி வாழ்கின்றன..அதுபோல குடிமக்கள் நல்லாட்சியை நோக்குகிறார்கள்.

3.மறை நூலுக்கும்..அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனின் செங்கோலாகும்.

4.குடிமக்களை அன்போடு அணைத்து..செங்கோல் செலுத்துபவரை உலகம் போற்றும்.

5.நீதி வழுவா அரசு இருந்தால் பருவ காலத்தில் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல்
கிடைப்பது போல ஆகும்.
6.அரசுக்கு வெற்றி பகைவரை வீழ்த்துவதில்லை..குடிமக்களை வாழவைப்பதே..

7.நீதி வழுவாத அரசு இருந்தால்...அந்த அரசே நீதியை காக்கும்.

8.ஆடம்பர அரசு...நீதி வழங்கப்படாத அரசு..இவை தானாகவே கெட்டு ஒழியும்.

9. குடிமக்களை பாதுகாப்பதும், குற்றம் புரிந்தவர் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என
கருதாது தண்டிப்பதும் அரசின் கடைமையாகும்.
10.கொடியவர் சிலரை கொலை தண்டனை மூலம் அரசு தண்டிப்பது வயலில் பயிரின்
செழிப்புக்காக களை எடுப்பது பொலாகும்
Labels: திருக்குறள் இலக்கியம்

Friday, January 2, 2009

54.பொச்சாவாமை

1.மகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி,அடங்காத சினத்தால் ஏற்படும்
விளைவை விட தீமையானது.

2.நாளும் வாட்டும் வறுமை அறிவைக் கொல்வதுபோல,புகழை
அவனுடைய மறதி கொன்றுவிடும்.

3.மறதி உள்ளவர்களுக்கு..அவர் எப்படிபட்டவராயிருந்தாலும் புகழ்
ஏற்படாது.

4.தம்மைச்சுற்றி பாதுகாப்பிருந்தாலும்..அச்சம் உள்ளவருக்கு பயனில்லை..
அதுபோல மறதி உடையவர்களும் நல்ல நிலை இருந்தும் பயனில்லை.

5.துன்பம் வருமுன் அதை காக்காமல் மறந்துவிடுபவன்..பின்னர்
அவை வரும்போது தன் பிழையை எண்ணி வருந்துவான்.

6.ஒருவரிடம் மறவாமை என்ற பண்பு இருக்குமேயானால்..அதைவிட
அவருக்கு நன்மை தருவது வேறு எதுவும் இல்லை.

7.மறதியின்றி அக்கறையுடன் செயல்பட்டால் முடியாதது என்பதே கிடையாது.

8.சான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களை போற்றிஸ் செய்யவேண்டும்..
இல்லையனில் ஏழு பிறப்பிலும் நன்மை உண்டாகாது.

9.மகிழ்ச்சியால் செருக்கு அடைந்து கடமையை மறப்பவன்...
அதுபோல முன்னரே அழிந்துபோனவர்களை எண்ணி திருந்திடவேண்டும்.

10.ஒருவன் எண்ணியதை விடாது...வெற்றி அடைவதிலேயே குறியாக இருந்தால்..
குறிக்கோளை அடைவது எளிதாகும்.

Thursday, January 1, 2009

53.சுற்றந்தழால்

1.ஒருவன் வறுமை அடைந்த நேரத்திலும்..அவனிடம் பழைய உறவைப்
பாராட்டிப் பேசுபவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.
2.அன்பு குறையா சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் ..அது வளர்ச்சி குறையாத
ஆக்கத்தை கொடுக்கும்.
3.சுற்றத்தாரோடு கலந்து பழகும் தன்மை இல்லாதவன் வாழ்வு..கரையில்லா
குளத்தின் நீர் போல பயனற்றது ஆகும்.
4.சுற்றத்தாரோடு தழுவி அன்புடன் வாழ்தல்..ஒருவனுக்கு பெரும் செல்வத்தைப்
பெற்ற பலனைத் தரும்.
5.கொடைத் தன்மையும்,இன் சொல்லும் கொண்டவனை சுற்றத்தார் சூழ்ந்து
கொண்டேயிருப்பார்கள்.
6.பெரும் கொடையாளியாகவும்,கோபமற்றவனாகவும் ஆகிய ஒருவன் இருந்தால்
அவனைப்போல சுற்றம் உடையவர் உலகில் இல்லை எனலாம்.
7.காக்கை தன் சுற்றத்தாரைக் கூவி அழைத்து உண்ணும்.அந்தக் குணம் பெற்றோருக்கு
உலகில் உயர்வு உண்டு.
8.அனைவரும் சமம் என்றாலும்..அவரவர் சிறப்புக்கு ஏற்றார்போல பயன்படுத்தப்
படுவார்களேயானால், அந்த அரசுக்கு அரணாக மக்கள் இருப்பர்.
9.உறவு..ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்தால்..அந்தக் காரணம் சரியில்லை என
உணர்ந்ததும் மீண்டும் உறவு கொள்வர்.
10.ஏதோ காரணத்தால் பிரிந்து..மீண்டும் வந்து இணைபவரை..ஆராய்ந்து..
பின்னரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.