Saturday, May 31, 2008

105.நல்குரவு

1.வறுமையைப்போல வேறு துன்பம் எது என்று கேட்டால்,வறுமையைப் போல துன்பம் வறுமை ஒன்றே ஆகும்.

2.வறுமை என்னும் பாவி ஒருவனை நெருங்கினால்..அவருக்கு எக்காலத்திலும் நிம்மதி என்பதே கிடையாது.

3.வறுமை காரணமாக பேராசை ஏற்பட்டால்..அது அவன் பரம்பரை பெருமையையும் ,புகழையும் சேர்த்து
கெடுத்துவிடும்.

4.வறுமை என்பது..நற்குடியிற் பிறந்தவரிடம் இழிவு தரும் சொல் பிறக்க காரணமான சோர்வை உண்டாக்கும்.

5.வறுமை என்னும் துன்பத்திலிருந்து பலவகை துன்பங்கள் உருவாகும்.

6.அரிய நூல் கருத்துக்களை, ஒரு வறியவன் சொன்னால்..அவை எடுபடாமற் போகும்.

7.வறுமை ..வந்துவிட்டது என்று..அறநெறி விலகி நடப்பவனை தாய் கூட புறக்கணிப்பாள்.

8.வறியவன்..நேற்று கொலை செய்தது போல துன்புறுத்திய..வறுமை இன்று வராமல் இருக்க வேண்டுமே என
நாளும் வருந்துவான்.

9.நெருப்பில் படுத்து தூங்கினாலும் துங்க முடியும்.ஆனால் வறுமைப் படுத்தும் பாட்டில் தூங்குவது இயலாது.

10.ஒழுக்கமில்லா வறியவர் முற்றுந் துறக்காமல் உயிர் வாழ்வது உப்புக்கும்..கஞ்சிக்கும் கேடாகும்.

Friday, May 30, 2008

104.உழவு

1.உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும்..ஏர்த்தொழிலின் பின் நிற்பதால்
உழவுத்தொழிலே சிறந்ததாகும்.

2.பல தொழில்கள் புரிபவர்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத்தொழில்
இருப்பதால்.. உலகத்தார்க்கு அதுவே அச்சாணியாகும்.

3.உழுதுண்டு வாழ்பவரே உரிமையோடு வாழ்பவர்கள்..ஏனெனில் மற்றவர்கள் பிறரிடம் வேலைசெய்து சம்பாதித்து
உண்பவராக இருப்பதால். 4.பல அரசுகளின் குடைநிழல்களை தம் குடையின் கீழ் கொண்டு வரும்
வலிமை உழவர்களுக்கே உண்டு.

5.தானே தொழில் செய்து சம்பாதித்து உண்ணும் இயல்புடையவர் பிறரிடம் கையேந்தார்..
தம்மிடம் வேண்டி நிற்போருக்கும் ஒளிக்காமல் வழங்குவர்.

6.பற்றை விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகளும் உழவர்களின் கையை
எதிர்பார்த்தே வாழவேண்டும்.

7.ஒரு பலம் புழுதி...கால் புழுதி ஆகும்படி நன்கு உழுது காயவிட்டால் ஒரு பிடி எருவும்
போடாமலேயே பயிர் செழித்து வளரும்.

8.உழுவது உரம் இடுதல் நன்று..களைஎடுப்பது..நீர்பாய்ச்சுதல் மிகவும் நல்லது.
அதைவிட பயிரை பாதுகாப்பது மிகமிக நல்லது.

9.உழவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் இருப்பானேயாயின்..அந்நிலம் ..மனைவிபோல
பிணங்கு கொண்டு அவனை வெறுக்கும்.

10.வாழ எந்த வழியும் இல்லை என சோம்பித் திரிவாரைப் பார்த்து..பூமித்தாய்
கேலியாய் சிரிப்பாள்.

103.குடிசெயல்வகை

1.கடமையைச் செய்வதில் சோர்வு காணாதவனுக்கு அப்பெருமையைவிட..வேறொரு பெருமை கிடையாது.

2.முயற்சி, நிறைந்த அறிவு கொண்டு அயராது பாடுபட்டால்..அவனைச் சார்ந்த குடிமக்கள் பெருமை உயரும்.

3.என் குடியை உயரச் செய்வேன் என முயலும் ஒருவனுக்கு..இயற்கையின் ஆற்றல் தானே முன் வந்து துணை
செய்யும்.

4.தம்மைச் சார்ந்த குடிமக்களை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு, முயல்வோருக்கு வெற்றி
வந்து குவியும்.

5.குற்றம் அற்றவனாய்..குடி உயரும் செயல் செய்து வாழ்பவனை உறவு போல கருதி சுற்றம் சூழ்ந்துகொள்ளும்.

6.நல்லபடி ஆளும் திறமை பெற்றவர்..பிறந்த குடிக்கு பெருமை சேர்ப்பர்.

7.போர்க்களத்தில் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் அஞ்சா வீரர் போல,குடிமக்களை தாங்கும் பொறுப்பும் ஆற்றலுள்ளவர்க்கு உண்டு.

8.குடி உயிர செயல் செய்கிறவனுக்கு காலம் என்று ஒன்று இல்லை.சோம்பல் கொண்டு தயங்கினால் குடிமக்கள்
நலன் கெடும்.

9.குடிமக்களுக்கு வரக்கூடிய குற்றத்தை வராது நீக்க முயலுபவன்..அவனைப் பொறுத்தவரை துன்பத்தைத்
தாங்கிக்கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்.

10.துன்பத்தை எதிர் நின்று தாங்கும் ஆற்றலுள்ளவர் இல்லாத குடியை..அத்துன்பம் வெட்டி வீழ்த்திவிடும்

102.நாணுடைமை

1.தகாத செயல் செய்து நாணுவதற்கும்..நல்ல பெண்ணின் இயல்பான நாணத்திற்கும் வேறுபாடு உண்டு.

2.உணவு,உடை எல்லாம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது..ஆனால் மாண்பு மட்டுமே மக்களின் சிறப்பு இயல்பு.

3.உடலுடன் உயிர் இணைந்து இருப்பது போல..மாண்பு எனப்படுவது நாண உணர்வோடு இணைந்து இருப்பது.

4.சான்றோர்க்கு நாணுடைமை அணிகலனாக அமையும்.நாணுடைமை அற்றோர்.. பெருமிதமாக நடக்கும் நடையே
நோய்க்கு ஒப்பானதாகும்.

5.தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றி..பிறர்க்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் பண்பிற்கு உறைவிடமாவர்.

6.பரந்த உலகில் நாணம் என்னும் வேலியே சிறந்த பாதுகாப்பாக கொள்ள வேண்டும்.

7.நாண உணர்வுள்ளவர்கள் மானத்தைக்காக்க உயிரையும் விடுவர்.உயிரைக் காக்க மானம் இழக்க மாட்டார்கள்.

8.வெட்கப்படும் அளவு பழி ஏற்படுமேயானால்..அதற்கு வெட்கப்படாதவர்களை விட்டு அறநெறி அகலும்.

9.கொள்கை தவறினால் குலத்துக்கு இழுக்கு..பிறர் பழிக்கும் செயல் செய்யின் நலமனைத்தும் கெடும்.

10.கயிறு கொண்டு பொம்மையை உயிர் இருப்பது போல ஆட்டிவைக்கப்படுவதற்கும்..நாண உணர்வற்றவர்களுக்கும்
வேறுபாடு இல்லை.

Thursday, May 29, 2008

101.நன்றியில் செல்வம்

1.ஒருவன் பெரும் பொருளைச் சேர்த்து அதை அனுபவிக்காமல் இறந்து போனால்..சேர்க்கப்பட்ட செல்வத்தால் பயன் என்ன?

2.பொருளால் எல்லாம் முடியும் என..பிறர்க்கு எதுவும் கொடுக்காமல் செல்வத்தை பற்றிக்கொண்டிருப்பவன்..எச்சிறப்பும் அற்றஇழிபிறவி ஆவான்.

3.பொருளை சேர்ப்பதே குறியாக இருப்பவர்கள்..பிறந்து வாழ்வதே பூமிக்கு சுமையாகும்.

4.யாராலும் விரும்பப்படாதவன்..மரணத்திற்குப்பின் எஞ்சி நிற்பது எது என எதை நினைத்திட முடியும்.

5.ஒருவருக்கு கொடுப்பதன் மூலம் அடையும் இன்பத்தை அறியமுடியாதவனிடம்..கோடி கோடியாக பணம் இருந்தும் பயன் இல்லை.

6.தானும் அனுபவிக்காது..தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்பவன் ..அவனிடம் உள்ள செல்வத்துக்கு ஒரு நோய் போல ஆவான்.

7.வறியவர்க்கு ஏதும் உதவாதவன் செல்வம்..அழகானப்பெண் ஒருத்தி தனித்திருந்து முதுமை அடைவதைப் போன்றது.

8.பிறர்க்கு உதவாதவன் செல்வம்..ஊர் நடுவில் எதற்கும் உதவாத நச்சு மரத்தில் பழுத்துள்ள பழம் போல
உபயோகமற்றது.

9.அன்பும் இன்றி,தன்னையும் வருத்தி..அறவழிக்கு புறம்பாய் சேர்க்கும் செல்வத்தை பிறர் கொள்ளை கொண்டு
போய்விடுவர்.

10.நல்ல உள்ளம் கொண்ட செல்வர்களின் சிறிய வறுமை என்பது..உலகத்தைக் காக்கும் மழைமேகம் வறுமை
மிகுந்தாற் போன்ற தன்மையுடையதாம்.

100.பண்புடைமை

1.யாராயிருப்பினும்..அவரிடம் எளிமையாகப் பழகினால்..அதுவே சிறந்த ஒழுக்கமான பண்புடைமை ஆகும்.

2.அன்புடையவராக இருத்தல்..உயர் குடியில் பிறந்த தன்மை ஆகிய இரண்டும் பண்புடையராக வாழ நல்வழியாகும்.

3.உடலால் ஒத்திருந்தாலும்..நற்பண்பு அற்றவர்களை மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியாக இருக்காது.

4.நீதி வழுவாமை,நன்மை செய்தல், என பிறர்க்கு பயன்படப் பணியாற்றுவர்களின் நற் பண்பை உலகு பாராட்டும்.

5.விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுதல் துன்பம் தருவதாகும்.பகைவரிடம் பண்பு கெடாமல் நடக்க
வேண்டும்.

6.பண்பாளர்களைச் சார்ந்து உலக நடமுறைகள் இயங்க வேண்டும்.இல்லையேல் அவை நாசமாகிவிடும்.

7.அரம் போல கூர்மையான அறிவு உடையவர் ஆனாலும்..உரிய பண்பற்றவர் மரத்துக்கு ஒப்பானவர் ஆவார்கள்.

8.நட்புக்கு ஏற்றவராய் இல்லாமல்..தீமை செய்பவரிடம்..பொறுமை காட்டி பண்புடையவராய் நாம் நடக்க வேண்டும்.

9.பிறருடன் நட்புக் கொண்டு பழகி, மகிழ முடியாதவர்க்கு..உலகம் பகலில் கூட இருட்டாகவே இருக்கும்.

10.பாத்திரம் சுத்தமாய் இல்லாவிட்டால்,அதில் ஊற்றும் பாலும் கெட்டு விடுவது போல..பண்பற்றவர் செல்வமும்
பயனற்றதாகும்.

99.சான்றாண்மை

1.ஆற்றவேண்டிய கடமை இவை என உணர்ந்து சான்றாண்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம்
இயல்பான கடமை ஆகும்.

2.நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கு அழகாகும்..வேறு எதுவும் அழகல்ல.

3.அன்பு,நாணம்,ஒழுக்கம்,இரக்கம்,வாய்மை என ஐந்து பண்புகளும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.

4.தவம் என்பது ஒரு உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது.பிறர் செய்யும் தீமைகளை
சுட்டிக்காட்டாத பண்பே சால்பு.

5.ஆணவமின்றி பணிவுடன் நடத்தலே..ஆற்றலாளரின் ஆற்றல்..அதுவே பகையை பகையிலிருந்துமாற்றும் கருவியாக
அமையும்.

6.ஒருவரின் மேன்மைக்கு உரைகல் போல மதிப்பிடும் கருவி..தாழ்ந்தோரிடத்திலும் ஏற்படும் தோல்வியைக் கூட
ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம்தான்.

7.துன்பத்தை செய்தவர்க்கும் நன்மை செய்வதே சான்றாண்மை எனும் நல்ல பண்பாகும்.

8.சால்பு என்ற வலிமையை உடையவர்களுக்கு வறுமை என்பது இழிவு தரக்கூடியது அல்ல.

9.கடமைகளை கண்ணியத்துடன் ஆற்றுகிற சான்றோர் ஊழிக்காலம் ஏற்பட்டாலும்..தம் நிலை மாறாமல் கடல்போல
திகழ்வர்.

10.சான்றோரின் நற்பண்பு குறையத் தொடங்கினால்...அதை இவ்வுலகு பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.

Wednesday, May 28, 2008

98.பெருமை

1.ஊக்கம் ஒருவரது வாழ்க்கைக்கு ஒளி தருவதாகும்..ஊக்கமின்றி வாழ்வது இழிவே தரும்.

2.பிறப்பினால் அனைவரும் சமம்..தொழில் செய்யும் திறமையால் மட்டுமே வேறுபாடு காணமுடியும்.

3.பண்பு இல்லாதவர்கள் உயர் பதவியில் இருந்தாலும் உயர்ந்தவர் ஆகமாட்டார்கள்..இழிவான காரியத்தில்
ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தலும் உயர்ந்தாரே ஆவார்கள்.

4.ஒருவன் தன்னைத்தானே காத்துக்கொண்டு நடந்தால்..கற்புக்கரசிகளுக்கு கிடைக்கும் புகழும் ,பெருமையும்
இவர்களுக்கும் கிடைக்கும்.

5.அரிய செயல்களை செய்து முடிக்கும் திறமைசாலிகள் அனைவரும் பெருமைக்குரியவர்களே.

6.பெரியாரை விரும்பி ஏற்றுக்கொள்ளும் நோக்கம்..சிறியோரின் உணர்ச்சியில் இருக்காது.

7.சிறப்பு நிலை..பொருந்தாத கீழ்மக்களுக்குக் கிடைத்தால்..அவர்கள் வரம்பு மீறி செயல்படுவர்.

8.பண்புடைய பெரியார் எக்காலமும்..எல்லோரிடமும் பணிவுடன் நடப்பார்கள்.ஆனால் சிறியோரோ
பண்பு இன்றி தன்னைத்தானே பாராட்டிக் கொண்டு இருப்பார்கள்.

9.ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை ஆகும்.ஆணவத்தின் எல்லைக்கு செல்வது சிறுமை ஆகும்.

10.பிறர் குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும்..பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது
சிறுமைக் குணமாகும்.

97.மானம்

1.இன்றியமையாத செய்ய வேண்டிய செயல்கள் என்றாலும்..அவற்றால் குடிப்பெருமை குறையுமானால்..
அச்செயல்களை தவிர்த்திட வேண்டும்.

2.புகழ் மிக்க வாழ்க்கையை விரும்புகிறவர்..தனக்கு புகழ் தேடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களை
செய்யமாட்டார்கள்.

3.உயர் நிலை அடையும்போது அடக்க உணர்வும்..அந்நிலை மாறும்போது அடிமையாக நடக்காத மான உணர்வும்
வேண்டும்.

4.மக்கள் உயர் நிலையில் இருந்து..மானமிழந்து தாழ்ந்திடும்போது..தலையிலிருந்து உதிர்ந்த முடிக்கு சமமாக
கருதப்படுவர்.

5.மலைபோல் உயர்நிலையில் உள்ளவரும்..ஒரு குன்றிமணி அளவிற்கு இழிவான செயலில் ஈடுபட்டால்
தாழ்ந்து போய் விடுவார்கள்.

6.ஒருவரின் இகழ்வையும் பொறுத்துக்கொண்டு..மானத்தையும் விட்டுவிட்டு பணிந்து செல்வதில் எந்த
புகழோ,பயனோ கிடைக்காது.

7.மதியாதோர் பின் சென்று உயிர் வாழ்வதைவிட ,செத்து ஒழிவது சிறந்ததாகும்.

8.ஒருவரின் சிறப்பு கெடும்போது..அவர் உடம்பை மட்டும் காத்து வாழ்வது என்பது இழிவான செயலாகும்.

9.தன் உடலில் இருந்து உரோமம் நீங்கினாலும்,கவரிமான் உயிர் வாழாதாம்.அதுபோல உயர்ந்த மனிதர்கள்
மானம் போனால் உயிரையே விட்டு விடுவார்கள்.

10.மானம் போயிற்றே என உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் புகழை உலகு போற்ரும்.

Tuesday, May 27, 2008

96.குடிமை

1.நடு நிலையான பண்பு,அடக்கம் கொண்டவர்களையே உயர் குடி பிறப்பு எனலாம்.

2.ஒழுக்கம்,வாய்மை,நாணம் இம்மூன்றும் வழுவாமல் வாழ்வரே உயர் குடியில் பிறந்தவர்கள்.

3.முகமலர்ச்சி,ஈகை,இனியசொல்,பிறரை இகழாமை ஆகிய நான்கு நல்ல பண்புகளும் பெற்றவர்கள் உயர்குடியினர்.

4.பலகோடி பெறுவதாக இருந்தாலும்..உயர் குடியில் பிறந்தவர்..சிறப்புக் கெடும் காரியங்களை செய்யமாட்டார்கள்.

5.பழம் பெருமை வாய்ந்த குடிபிறப்பினர்..வறுமையால் வாடிய போதும்..பிறர்க்கு வழங்கும் பண்பை விடமாட்டார்கள்.

6.வஞ்சக எண்ணத்துடன் தகுதியில்லாதவற்றை, மாசற்ற பண்புடன் வாழ்பவர்கள் செய்ய மாட்டார்கள்.

7.உயர்குடியில் பிறந்தவர்களிடம் உண்டாகும் குற்றம்..வானத்து நிலவில் காணப்படும் களங்கம் போல
பலர் அறியத் தெரியும்.

8.நல்ல பண்புள்ள ஒருவனிடம் அன்பற்ற தன்மை இருந்தால்..அவன் பிறந்த குலம் பற்றி ஐயப்பட நேரிடும்.

9.இன்ன நிலத்தில்..இன்ன பயிர் விளைந்தது என சொல்வது போல..ஒருவரின் வாய்ச்சொல்லே அவரின்
குடிபிறப்பைக் காட்டும்.

10.ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால்..தகாத செயல் செய்ய அஞ்சி நாண வேண்டும்.அதுபோல குடியின்
உயர்வு வேண்டுமானாலும் அனைவரிடமும் பணிவு வேண்டும்.

95.மருந்து

1.வாதம்,பித்தம்,சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் சொல்லும் மூன்றில் ஒன்று
கூட அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

2.முன்னர் உண்ட உணவு செரித்த பின்னர்.. அடுத்த உணவு அருந்தினவர்களுக்கு
எந்த மருந்தும் தேவைப்படாது.

3.உண்ட உணவு செரித்ததும்,உண்ணும் உணவின் அளவையும் அறிந்து
உண்டால் நீண்டநாள் வாழலாம்.

4.உண்ட உணவு செரித்துவிட்டதா என அறிந்தபின்னர்..
பசி எடுத்த பிறகு உணவு அருந்த வேண்டும்.

5.உடலுக்கு வேண்டிய உணவைக்கூட ..அதிகமாகும் போது...ம்றுத்து அளவுடன் சாப்பிட்டால்..
உயிர் வாழ்வதில் தொல்லை இருக்காது.

6.அளவுடன் உண்பவர் நலமாகவும் ..அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் வாழ்க்கை.

7.பசியின் அளவு..ஆராயாமல் அதிகமாக சாப்பிட நோய்களும் அதிகமாக வரும்.

8.நோய் என்ன? வரக்காரணம் என்ன? தீர்க்க வழி என்ன என ஆராய்ந்து சிகிச்சை
மேற்கொள்ளவேண்டும்.

9.மருத்துவர் என்பவர்..நோய் என்னவென்றும்,அதற்கான காரணத்தையும்,தணிக்கும் வழியையும்
ஆராய்ந்து ..நோயாளியின் உடலுக்கு பொருந்த சிகிச்சை மேற்கொள்ளுபவர்.

10.மருத்துவமுறை என்பது..நோயாளி,மருத்துவன்,மருந்து,அருகிலிருந்து துணை செய்பவர்
என நான்கு வகையாக பாகுபாடு உடையது.

94.சூது

1.வெற்றியே அடைவதானாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது.அந்த வெற்றி..தூண்டிலில் இரையை
விழுங்க நினைத்து மாட்டிக்கொள்ளும் மீன்களைப்போல் நம்மை ஆக்கிவிடும்.

2.ஒரு வெற்றி அடைந்தோம் என்று தொடர்ந்தால்..நூறு தோல்விகளை தழுவுவதே சூதின் தனமை ஆகும்.

3.பணையம் வைத்து சூதாடுவதை பழக்கமாகக் கொண்டால்..அவன் செல்வமும்..அதனை ஈட்டும் வழிமுறையும்
அவனை விட்டு நீங்கும்.

4.துன்பம் பலவற்றை உண்டாக்கி ஒருவன் புகழைக் கெடுக்கும் சூதைப்போல் வறுமை தருவது வேறு எதுவுமில்லை.

5.சூதாடும் கருவியும்,ஆடும் இடமும்,கைத்திறமையையும் மதித்துக் கைவிடாதவர் ஏதும் இல்லாதவர் ஆகி விடுவார்.

6.சூதின் வலையில் வீழ்ந்தவர்கள்..வயிறு நிறைய உணவும் உண்ணமுடியாமல் துன்பப்பட்டு வருந்துவார்கள்.

7.சூதாடும் இடத்தில் ஒருவன் தன் காலத்தை கழித்தால்..அது அவன் மூதாதையர் தேடி வைத்த செல்வம்,சொத்து,
நற்பண்புகள் எல்லாவற்றையும் நாசமாக்கும்.

8.பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி..அருள் நெஞ்சத்தையும் மாற்றி, துன்ப இருளில் ஒருவனை உழலச்
செய்வதே சூது.

9.சூதுக்கு அடிமையாகி விட்டவர்களை விட்டு புகழ்,கல்வி,செல்வம்,உணவு,உடை ஆகியவை அகன்று விடும்.

10உடலுக்கு துன்பம் வர..வர..உயிர் மேல் ஆசை ஏற்படுவதைப் போல..பொருளை இழக்க இழக்க சூதாட்டத்தில்
ஆசை அதிகரிக்கும்.

Monday, May 26, 2008

93.கள்ளுண்ணாமை

1.மதுப்பழக்கம் கொண்டவர் தமது புகழை இழப்பதோடு மற்றவர்களாலும்
அஞ்சப்படாதவர்களாக ஆவார்கள்.

2.சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர்கள் தான் மது அருந்துவர்.

3.மது அருந்தி மயங்கிக் கிடப்பவனை..பெற்றதாயே மன்னிக்கமாட்டாள் என்னும்போது..
ஏனையொர் எப்படிச் சகித்துக் கொள்வார்கள்?.

4.மது மயக்கமெனும் பெருங்குற்றத்திற்கு ஆளாகி இருப்போன் முன்
நாணம் எனப்படும் பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

5.தன்னை மறந்து மயங்கி இருக்க..விலைகொடுத்து கள்ளை வாங்குதல் என்பது மூடத்தனமாகும்.

6.இறப்பு என்பது நீண்ட உறக்கம் என்பது போல..கள்ளுண்பவர்களும் அறிவுமயங்குவதால்
அவர்கள் மதுவுக்கு பதில் நஞ்சு உண்பவர்கள் என்று கூறலாம்.

7.மறைந்திருந்து மது அருந்தினாலும்..அவர்கள் கண்கள் மயக்கத்தைக் காட்டிக்
கொடுப்பதால் ஊரார் அவர்களை எள்ளி நகையாடுவர்.

8.மது அருந்தமாட்டேன் என ஒருவன் பொய் சொல்ல முடியாது..ஏனெனில் மது
மயக்கத்தில் உள்ளபோது உண்மை வெளிப்பட்டுவிடும்.

9.குடிபோதைக்கு ஆளாளவனை திருத்த முயல்வது என்பது..நீரில் மூழ்கிய ஒருவனை
தீப்பந்தம் எடுத்துச் சென்று தேடுவது போல ஆகும்.

10.ஒருவன் மது அருந்தாதபோது.. மது அருந்தியவனின் நிலையை பார்த்தப் பின்னாவது
..திருந்தமாட்டானா?

92.வரைவின் மகளிர்

1.அன்பு இல்லாமல்..பொருள் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இன்சொல் பேசும் பொது மகளிர்
துன்பத்தையே தருவர்.

2.ஆதாயம் ஒன்றையே எண்ணி..அதற்கேற்ப இன்சொல் கூறும் பொதுமகளிர் உறவை நம்பி ஏமாறக்கூடாது.

3.பணத்துக்காக மட்டுமே ஒருவனைத் தழுவும் பொய்யான தழுவல் என்பது..இருட்டு அறையில் ..பிணத்தை
தழுவினாற்போன்றது.

4.அருளுடையோர்..பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாக எண்ணுவர்.

5.இயற்கை அறிவும்,கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்..விலைமகளிரின் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்.

6.நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர்..ஒழுக்கமற்ற பொதுமகளிரை நாட மாட்டார்கள்.

7.உறுதியற்ற மனம் படைத்தவர் மட்டுமே..தன் மனதில் பொருள் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள
பொதுமகளிரை விரும்புவர்.

8.வஞ்சம் நிறைந்த பொது மகளிரிடம் ஒருவன் மயங்குதல் என்பது..அறிவில்லாதவனிடம் ஏற்படும்
மோகினி மயக்கமாகும்.

9.விலை மகளை விரும்புதல்..தெரிந்தே நரகத்தில் விழுவதற்கு சமமாகும்.

10.பொதுமகளிர் தொடர்பு,மதுப்பழக்கம்,சூதாட்டம் இம்மூன்றும் அமைந்தவர் வாழ்வு சிறப்புற அமையாது.

Sunday, May 25, 2008

91.பெண் வழிச் சேறல்

1.கடமையுடன் செயல் புரிபவர்கள்..இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதக்கூடாது.

2.கடமை தவறி..மனைவியின் பின்னால்..சுற்றித் திரிபவன் நிலை வெட்கப்படும் செயலாகும்.

3.மனைவியின் துர்க்குணத்தை திருத்தமுடியாது பணியும் கணவன்.. நல்லோர் முன் நாணித் தலைக்குனிவான்.

4.மனைவிக்கு அஞ்சி நடப்பவனின் செயலாற்றல் சிறப்பாக அமையாது.

5.நல்லவர்க்கு தீங்கு செய்ய அஞ்சுபவன்..தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.

6.மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவர்..தேவாம்சம் பொருந்தியவர்கள் போல சிறப்பான நிலையில் வாழ்ந்தாலும்
பெருமை இல்லாதவர் ஆவர்.

7.மனைவியின் எல்லாக் கட்டளைக்கும் கீழ்படிந்து நடப்பவனை விட மான உணர்வுள்ள பெண்மை சிறந்ததாகும்.

8.மனைவியின் விருப்பப்படி நடப்பவர் ..நண்பர்கள் பற்றி,நற்பணிகள் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.

9.ஆணவப் பெண்கள் இடும் கட்டளைக்கு கீழ்ப்படிபவனிடம் ,சிறந்த அறநெறிச் செயல்களோ ..சிறந்த
அறிவாற்றலோ இருக்காது.

10.சிந்திக்கும் திறன்,உறுதியான மனம் கொண்டவர்கள்..பெண்களிடமே பழியாகக் கிடக்க மாட்டார்கள்

90.பெரியாரைப் பிழையாமை

1.ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தலே..நம்மை காத்திடும் காவல்கள்
அனைத்தையும் விடச் சிறந்த காவலாகும்.

2.பெரியோர்களை மதிக்காமல் நடந்தால்..நீங்காத துன்பத்தை அடைய நேரிடும்.

3.பகையை அழிக்கக்கூடிய ஆற்றலுள்ளவர்கள் பேச்சைக் கேட்காது இழித்துப் பேசினால்..அவன் தன்னைத்தானே
அழித்துக் கொள்கிறான் என்று பொருள்.

4.ஆற்றல் உடையவர்களுக்கு ஆற்றலற்றவர் தீமை செய்தால்..தங்கள் முடிவுக்காலத்தை அவர்களே
அழைத்துக் கொள்வது போலாகும்.

5.வலிமை பொருந்திய அரசின் கோபத்துக்கு ஆளானவர்கள் எங்கு சென்றாலும் உயிர் வாழ முடியாது.

6.தீயால் சுட்டால் கூட ஒரு வேளை உயிர் பிழைக்கலாம்..ஆற்றல் மிக்கவரிடம் தவறிழைப்பவர் தப்பிப்
பிழைக்க முடியாது.

7.பெருஞ்செல்வத்துடன் சுகமாக இருந்தாலும்..பெரியோரின் கோபத்துக்கு ஆளானவர்கள் முன் அனைத்தும்
பயனற்றதாய் விடும்.

8.மலை போன்ற பெருமை கொண்ட பெரியவர்களை குலைக்க நினைத்தால்..பெருஞ்செல்வந்தரும் குடியோடு அழிவர்

9.உயர்ந்த கொள்கை உடைய பெரியோர்கள்..கோபமடைந்தால் அரசனும்..அரசு இழந்து அழிவான்.

10.வசதி வாய்ப்புக்கள்,வலிமையான துணைகள் உடையவராக இருந்தாலும் சான்றோரின் சினத்தை எதிர்த்துத்
தப்பிப் பிழைக்க முடியாது.

Saturday, May 24, 2008

89.உட்பகை

1.இன்பம் தரும் நிழலும்,நீரும் கேடு விளைவிக்கக்கூடியதாக இருந்தால் அவை தீயவை ஆகும்.அதுபோலத்தான்
உறவினரின் உட்பகையும்.

2.வெளிப்படையாக தெரியும் பகைவர்களைவிட உறவாடி கெடுக்க நினைப்பவர்களிடம் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்.

3.உட்பகைக்கு அஞ்சி தன்னை பாதுகாத்துக் கொள்ளாதவனை..அப்பகை பச்சை மண்பாண்டத்தை அறுக்கும்
கருவி போல அழித்துவிடும்.

4.மனம் திருந்தா உட்பகை உண்டாகுமானால்..அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டை
உண்டாக்கும்.

5.நெருங்கிய உறவுகளிடையே தோன்றும் உட்பகை..அவர்களுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய துன்பங்களை
உண்டாக்கும்.

6. உற்றாரிடம் பகைமை ஏற்படுமானால்..அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது அரிதான செயலாகும்.

7.ஒரு செப்பு சிமிழின் மூடி பொருந்தி இருப்பது போல வெளிப்பார்வைக்குத் தெரியும்..அதுபோல உட்பகை
உள்ளவர் ஒன்றாக இருப்பது போலத் தெரிந்தாலும், பொருந்தி இருக்க மாட்டார்கள்.

8.அரத்தினால் அறுக்கப்பட்ட இரும்பு வலிமை இழப்பது போல..உட்பகை குலத்தின் வலிமையை குறைத்துவிடும்.

9.எள்ளின் பிளவு போன்று சிறியதாக இருந்தாலும்..உட்பகை குடியைக் கெடுக்கும்.

10.மனதால் உடன்பட்டு இல்லாதவருடன் கூடி வாழ்வது என்பது ஒரு சிறு குடிசையில் பாம்புடன்
வாழ்வது போல அச்சம் தருவதாகும்

88.பகைத்திறம் தெரிதல்

1.பகை என்பது பண்புக்கு மாறுபட்டதாதலால்..விளையாட்டாகக்கூட பகை கொள்ள்க்கூடாது.

2.படை வீரர்களுடன்கூட பகை கொள்ளலாம்.ஆனால் செயலாற்றல் மிக்க அறிஞர்களின் பகை கூடாது.

3.தனியாக இருந்து பகையை தேடிக் கொள்பவன்..புத்தி பேதலித்தவனைவிட முட்டாளாகக் கருதப்படுவான்.

4.பகையையும் நட்பாகக் கருதி பழகும் பெருந்தன்மையை உலகம் போற்றும்.

5.தனக்குப் பகையோ..இரு பிரிவு..துணையோ இல்லை..அப்படிப்பட்ட சமயத்தில் அந்த பகைவரில் ஒருவனை
இனிய துணையாக்கிக் கொள்வதே அறிவுடைமை.

6.பகைவனைப் பற்றி ஆராய்ந்து அறிந்திருந்தாலும்..இல்லாவிட்டாலும்..கேடு ஏற்படும் காலத்தில் அவனை அதிகம்
நெருங்காமலும்..நட்புக்காட்டியும் சும்மா இருக்க வெண்டும்.

7.நம் துன்பத்தை, அறியாத நண்பருக்கு சொல்லக்கூடாது.அதுபோல நம் பலவீனத்தையும் பகைவரிடம்
வெளிப்படுத்தக்கூடாது.

8.செய்யும் வகையை உணர்ந்து,தன்னையும் வலிமைப் படுத்திக் கொண்டு,தற்காப்பும் தேடிக்கொண்டால்
பகைவரின் ஆணவம் அடங்கிவிடும்.

9.முள் மரத்தை செடியிலேயே வெட்ட வேண்டும்..பகையையும் அது முற்றும் முன்னே வீழ்த்திட வேண்டும்.

10.பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள்..மூச்சு விட்டாலும் ..உயிரோடு இருப்பதாக
சொல்ல முடியாது.

Friday, May 23, 2008

87.பகைமாட்சி

1.மெலியோரை விட்டுவிட்டு..வலியோரை எதிர்த்து போராட நினைப்பதே பகைமாட்சி.

2.அன்பற்றவராய்..துணை யாரும் இல்லாதவராய்.தானும் வலிமையற்றவராயிருப்பவர்
பகையை எப்படி வெல்லமுடியும்?

3.பயப்படுபவனாய்,அறிவு இல்லாதவனாய்,பண்பு இல்லாதவனாய்,ஈகைக்குணம் இல்லாதவனாய்
இருப்பவனை வெல்லுதல் எளிது.

4.சினத்தையும்,மனத்தையும் கட்டுப்படுத்தாதவனை எவரும்,எப்போதும்,எங்கும் வெல்லலாம்.

5.நல்வழி நாடாமல்,பொருத்தமானவற்றைச் செய்யாமல்,பழிக்கு அஞ்சாமல்,பண்பும் இல்லாமல்
இருந்தால் எளிதில் வெல்லப்படுவான்.

6.யோசிக்காத சினம் உடையவனையும்,பேராசைக் கொண்டவனையும் பகையாக ஏற்று எதிர்கொள்ளலாம்.

7.தன்னுடன் இருந்துக்கொண்டு,தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனை
பொருள் கொடுத்தாவது பகைவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

8.குணம் இல்லாதவன்,குற்றம் பல செய்தவன் ஆகியவர்களுக்கு துணை யாரும் இருக்கமாட்டார்கள்.
அதனால், அவனை பகைவர்கள் எளிதில் வீழ்த்துவர்.

9.அறிவற்ற கோழைகள், எதற்கும் பயப்படும் இயல்புடையோர் ஆகியோரின் பகைவர்கள் எளிதில் வெற்றிப் பெறுவர்.

10.கல்வி கற்காதவர்களைப் பகைத்துக் கொள்ளும் எளிய செயலைச் செய்ய முடியாதவனிடம் என்றும் புகழ்
வந்து சேராது.

86.இகல்

1.மக்களுடன் ஒன்று சேர்ந்து வாழமுடியாத மனமாறுபாடு தீய பண்பாகும்.

2.ஒருவன் வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஈடுபட்டால் மாறுபாடு காரணமாக
அவனுக்கு துன்பம் தரும் எதையும் செய்யாதிருக்க வேண்டும்.

3.மனமாறுபாடு என்னும் நோயை..தங்கள் மனத்தை விட்டு அகற்றினால் நீடித்த புகழ் உண்டாகும்.

4.துன்பத்துள் பெரும் துன்பம் பகையுணர்வு..அதை அகற்றினால் இன்பத்திலேயே பெறும் இன்பமாகும்.

5.மனதில் மாறுபாடு உருவானால் அதற்கு இடம் தராது..நடக்கக்கூடிய ஆற்றலுள்ளவர்களை வெல்லுதல் முடியாது.

6.மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி எளிது என எண்ணுபவர் வாழ்வு..விரைவில் தடம் புரண்டு கெட்டொழியும்.

7.பகை உண்ர்வுள்ள தீய அறிவை உடையவர் வெற்றிக்கு வழிவகுக்கும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.

8.மனதில் உண்டாகும் மாறுபாட்டை நீக்கிக்கொண்டால்.. நன்மையும்..இல்லையேல் தீமையும் விளையும்.

9.தனக்கு நன்மை வரும் போது மாறுபாட்டை நினைக்கமாட்டான்.ஆனால் தனக்குத்தானே கேடு
தருவித்துக் கொள்ளும்போது அதை எதிர்ப்பான்.

10.மாறுபாடு கொண்டு பகை உணர்வைக் காட்டுவோரை துன்பங்கள் தொடரும்.நட்புணர்வோடு
செயல்படுவோர்க்கு நற்பயன் விளையும்

Thursday, May 22, 2008

85.புல்லறிவாண்மை

1.அறிவுப் பஞ்சமே கொடுமையான பஞ்சமாகும்.மற்ற பஞ்சங்கள் அவ்வளவாக உலகால்
பொருட்படுத்தப்படுவது இல்லை.
2.அறிவற்றவன் மகிழ்ச்சியுடன் ஒரு பொருளை மற்றவனுக்குக் கொடுத்தால்...
அது அப்பொருளை பெறுகிறவன் பெற்றபேறு தான்.

3.பகைவரால் கூட வழங்கமுடியா வேதனையை..அறிவற்றவர்கள்
தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.

4.ஒருவன்...தன்னைத்தானே அறிவுடையோன் என எண்ணிக் கொள்ளும் ஆணவமே..
அறியாமை எனப்படும்..

5.அறிவற்றவர்..தான் படிக்காத நூல்களையும் படித்ததுபோல காட்டிக் கொண்டால்..அவர்களுக்கு தெரிந்த
விஷயங்கள் பற்றியும் சந்தேகம் ஏற்பட்டுவிடும்.

6.தனது குற்றத்தை அறிந்து நீக்காதவன் உடலை மறைக்க மட்டும் உடை
அணிவது மடைமையாகும்.

7.நல்வழிக்கான அறிவுரைகளை ஏற்று...அதன்படி நடக்காத அறிவற்றவர்கள் தனக்குத்தானே
பெருந்தீங்கு செய்க் கொள்வர்.

8.சொந்தபுத்தியும் இன்றி..சொல்புத்தியும் கேட்காதவர்கள் வாழ்நாள் முழுவதும்
அந்நோயினால் துன்பமடைவர்.

9.அறிவு இல்லாதவன் தான் அறிந்ததை வைத்து அறிவுடையவனாகக் காட்டிக்கொள்வான்
ஆனால் அவனுக்கு அறிவுரை கூறும் அறிவுள்ளவன் அறிவற்ற நிலைக்கு தன்னையே தள்ளிக்
கொள்ள நேரிடும்.

10.உலகத்தார் உண்டு என்று சொல்வதை ..இல்லை என்று கூறுகிறவன்...ஒரு பேயாக
கருதி விலக்கப்படுவான்.

84.பேதைமை

1.நமக்கு கேடி விளைவிப்பது எது..நன்மை தருவது எது..என அறியாது நன்மை விடுத்து கேட்டை நாடுவதே
பேதைமை எனப்படும்.

2.நம்மால் இயலாத செயல்களை செய்ய விரும்புவது பேதைமைகளில் மிகப்பெரிய பேதைமை ஆகும்.

3.வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும்,தேட வேண்டியதை தேடாமலும்,அன்பு காட்ட வேண்டியவரிடம்
அன்பு காட்டாமலும்,நன்மை எதையும் விரும்பாமையும் பேதைமையின் இயல்பு.

4.நூல்களை படித்து உணர்ந்து,அவற்றை பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் செய்துவிட்டு தாங்கள் மட்டும் அப்படி
நடக்காவிட்டால் அவர்கள் பேதைகள் ஆவார்கள்.

5.தன்னிச்சையாக செயல்படும் ஒரு பேதை..ஏழேழு பிறப்பிற்கும் துன்பமெனும் சேற்றில் அழுந்தி கிடக்க நேரிடும்.

6.ஒழுக்க நெறி இல்லாத ஒரு மூடன்..ஒரு செயலை மேற்கொண்டால்..அதைத் தொடரவும் முடியாமல்..அச்செயலும்
கெட்டு தானும் தண்டனை அடைவான்.

7.அறிவில்லாதவனிடம் சேரும் பெரும் செல்வம் அயலார் சுருட்டிக் கொள்ள பயன்படுமேயன்றி..பாசமுள்ள
உறவினர்களுக்கு பயன்படாது.

8.முட்டாளின் கையில் பொருள் கிடைத்து விட்டால்..அவன் நிலை பித்து பிடித்தவன் கள்ளையும் குடித்து
மயங்கும் கதை ஆகிவிடும்.

9.அறிவற்றவர்களுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது..ஏனெனில் அவர்களிடமிருந்து பிரியும் போது
வருத்தம் ஏற்படாது.

10.அறிஞர்கள் கூட்டத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது அசுத்தத்தை மிதித்த காலை கழுவாமல் படுக்கையில்
வைப்பது போன்றது.

83.கூடா நட்பு

1.மனதார இல்லாமல் வெளியே நட்பு பாராட்டுவான் நட்பு..இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போன்ற
கல்லுக்கு ஒப்பாகும்.

2.உற்றார் போல இருந்து அப்படி இல்லாதவரின் நட்பு..விலை மகளிர் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக
வேறுபட்டு நிற்கும்.

3.பல நூல்களை கற்றுத் தேர்ந்த போதிலும்..பகை உணர்வு படைத்தோர் மனம் திருந்துவது நடக்காத காரியம்.

4.சிரித்துப் பேசி..சீரழிக்க நினைப்பவரின் நட்புக்கு, அஞ்சி ஒதுங்கவேண்டும்.

5.மனம் வேறு..செயல் வேறாக இருப்பவர்களின் நட்புக்கு அஞ்சி ஒதுங்க வேண்டும்.

6.நண்பர் போல பகைவர் பழகினாலும்..அவர் சொல்லும் சொற்களில் அவர்களது உண்மைத் தன்மை வெளிப்படும்.

7.பகைவரின் சொல் வணக்கம் என்பது..வளையும் வில் போல தீங்கு விளைவிக்கூடியது.

8.பகைவர் வணங்கும் கையினுள்ளும் கொலைக்கருவி இருக்கும்.அவர் கண்ணீர் விட்டாலும் அது போலிக்கண்ணீரே

9.வெளியே நண்பர் போல மகிழ்ந்து அகத்தில் இகழ்கின்றவரின்..நட்பை நலிவடையச்செய்ய நாமும் அதே முறையை
கைப்பிடிக்க வேண்டும்.

10.பகைவருடன் பழகும் காலம் வரும்போது..முகத்தளவில் நட்புக் கொண்டு வாய்ப்பு வரும் போது அந்த நட்பை
விட்டுவிட வேண்டும்.

Wednesday, May 21, 2008

82.தீ நட்பு

1.அன்பு மிகுதியால் பழகுபவர்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பை
குறைத்துக் கொள்வதே நல்லது.

2.தனக்கு வேண்டும் போது நட்புச் செய்து..பயன் இல்லாத போது நட்பு நீங்குபவர்களின்
நட்பைப் பெற்றாலும்..இழந்தாலும் ஒன்றுதான்.

3.பயனை எதிப்பார்க்கும் நண்பர்..பொருளை மட்டுமே எதிர்ப்பார்க்கும் விலைமாதர்,கள்வர்
போன்றவர்களுக்கு ஒப்பாவார்.

4.போர்க்களத்தில்..நம்மைத் தள்ளிவிட்டு ஓடும் அறிவற்ற குதிரையைப் போன்றவர் நட்பைப்
பெறுவதைவிட அந்த நட்பு இல்லாததே சிறந்ததாகும்.

5.தீய நட்பு..பாதுகாப்பாக அமையாததாகும்...அவர்களுடன் நட்பு கொள்வதைவிட அந்நட்பை
ஏற்காமல் இருப்பதே நலம்.

6.அறிவில்லாதவரின் நட்பைவிட..அறிவுள்ளவர்களிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு
நன்மை தருவதாகும்.

7.சிரித்துப்பேசி நடிப்பவரின் நட்பைவிட பகைவர்களால் வரும் துன்பம் பத்து கோடி மடங்கு நன்மை
தருவதாகும்.

8.நிறைவேற்ற முடியும் செயலையும் முடிக்க விடாதவர் உறவை..அவர் அறியாதபடி மெல்ல மெல்ல
விட்டு விட வேண்டும்.

9.சொல் ஒன்று,செயல் ஒன்று என்றுள்ளவர்களின் நட்பு கனவிலும் துன்பம் தருவதாகும்.

10.தனியாக உள்ளபோது இனிமையாக பேசி..பொது மன்றத்தில் பழித்துப் பேசுவோர் நட்பு நம்மை
சிறிதும் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

81.பழைமை

1.பழகிய நண்பர்கள் ...உறவை அழியாமல் பாதுகாப்பதே பழைமை என்பதாகும்.

2.பழைய நண்பர்களின் உரிமையைப் பாராட்டும் கடமைதான் சான்றோர்களின் உண்மையான நட்பாகும்.

3.பழைய நண்பர்கள் உரிமை எடுத்துக்கொண்டு செய்யும் காரியங்கள்.. நாமே
செய்ததுபோல எண்ணாவிடில்.. நட்பு பயனற்றுப்போகும்.

4.பழைய நட்பின் உரிமையால்... நண்பர்கள் கேளாமலேயே ஒரு செயல் புரிந்தாலும்..
நல்ல நண்பர் எனப்படுபவர் அதை ஏற்றுக் கொள்வர்.

5.வருந்தக்கூடிய செயலை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை மட்டுமல்ல..
மிகுந்த உரிமையே என்று எண்ண வேண்டும்.

6.நீண்டநாள் நண்பகள் தமக்கு கேடு செய்வதாக இருந்தாலும் நட்பின் இலக்கணம்
தெரிந்தவர்கள் அந்த நட்பைத் துறக்க மாட்டார்கள்.

7.பழைய நண்பர்கள் அன்புடன் அழிவு தரும் செயல்களைச் செய்தாலும்
நட்பு கொண்டவர்கள் அன்பு நீங்காமலிருப்பர்.

8.பழகிய நண்பர் செய்த தவறுப்பற்றிப் பிறர் கூறினாலும் கேளாமலிருப்பவர்க்கு..
அந்நண்பர் தவறு செய்தால் அந்நட்பால் என்ன பயன்.

9.பழைய நண்பரின் நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகு போற்றும்.

10.பழகிய நண்பர்கள் தவறு செய்தாலும் ..அவர்களிடம் தமக்குள்ள அன்பை
நீக்கிக் கொள்ளாதவரை பகைவரும் விரும்புவர்.

Tuesday, May 20, 2008

80.நட்பாராய்தல்

1.ஆராயாமல் கொள்ளும் தீய நட்பு பின்னர் விடுபட முடியா அளவுக்கு கேடுகளை உண்டாக்கும்.

2.மீண்டும்..மீண்டும் ஆராயாமல் ஏற்படுத்திக் கொள்ளும் நட்பு..இறுதியில் சாவதற்கு காரணமாகிற
அளவு துயரத்தைக் கொடுக்கும்.

3.குணம்,குடிபிறப்பு,குற்றங்கள்,குறையா இயல்புகள் என அனைத்தும் அறிந்தே ஒருவருடன் நட்பு
கொள்ள வேண்டும்.

4.உயர்குடியில் பிறந்து பழிக்கு நாணுகின்றவனின் நட்பை எப்பாடுபட்டாவது பெறவேண்டும்.

5.தீமையான செயல்களை செய்யும் போது கண்டித்து சொல்லி,அறிவுரை வழங்கும் ஆற்றலுள்ளவரின்
நட்பே சிறந்த நட்பாகும்.

6.தீமை வருவதும் நன்மைதான்..அப்போதுதான் நம் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறியமுடியும்.

7.அறிவில்லாதவருடன் செய்துக் கொண்ட நட்பிலிருந்து நீங்குதலே ஒருவனுக்கு பெரும் பயனுடையதாக
அமையும்.

8.ஊக்கம் குறையும் செயல்களையும்,துன்பம் வரும்போது விலகும் நண்பர்களையும் விட்டுவிட வேண்டும்.

9.இறக்கும் தறுவாயிலும்..நமக்கு கேடு வரும்போது கைவிட்டு ஓடிய நண்பர்களின் நினைப்பு வந்தால்..
அது உள்ளத்தை வறுத்தும்.

10.குற்றமற்றவர்களை நண்பனாகக் கொள்ள வேண்டும்..இல்லாதவர் நட்பை எந்த விலைக் கொடுத்தாவது
விலக்க வேண்டும்.

79.நட்பு

1.நட்பு கொள்வது போல அருமையானது இல்லை.நம் பாதுகாப்புக்கும்
அது ஏற்ற செயலாகும்.

2.அறிவுடையார் நட்பு வளர்பிறை போல வளர்ந்து முழு நிலவாகும்.
அறிவற்றவர் நட்பு தேய்பிறையாய் குறைந்து மறையும்.

3.படிக்கப்படிக்க நூல் இன்பம் தரும்...பழகப்பழக பண்புடையார்
நட்பு இன்பம் தரும்.

4.நட்பு என்பது சிரித்து மகிழ மட்டும் அல்ல..நண்பர்கள் வழி மாறும் போது
இடித்து திருத்துவதற்கும் ஆகும்.

5.நட்புக்கொள்ள ஒருவருடன் தொடர்பும்..பழக்கமும் இருக்க வேண்டும் என்பதல்ல..
அவருடைய ஒத்த மன உணர்ச்சியே போதுமானது.

6.முகமலர்ச்சி மட்டும் நட்பு அல்ல..நெஞ்ச மலர்ச்சியும் உண்மையான நட்புக்கு தேவை.

7.அழிவைத் தரும் தீமையை நீக்கி..நல்ல வழியில் நடக்கச்செய்து அழிவு காலத்தில் உடனிருந்து
துன்பப்படுவதே நட்பாகும்.

8.அணிந்திருக்கும் உடை நெகிழும்போது..கைகள் உடனடி செயல்பட்டு சரி செய்வதுபோல
நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கிக் களைவதே சிறப்பு.

9.மன வேறுபாடு கொள்ளாது தன்னால் முடியும் போதெல்லாம் உதவி செய்து நண்பனை
தாங்குவதே நட்பின் சிறப்பாகும்.

10.நண்பர்கள் ஒருவருக்கொருவர்..இவர் இப்படி..நான் அப்படி என செயற்கையாக புகழும்போது
நட்பின் பெருமை குறையும்.

78.படைச்செருக்கு

1.பகைவர்களே..என் தலைவனை எதிர்க்காதீர்கள்..அவனை எதிர்த்து நின்று மடிந்தவர் பலர்.

2.வலிவற்ற முயலை குறிவைத்து வீழ்த்துவதைக் காட்டிலும்..வலிவான யானையைக் குறிவைத்து
அது தப்பினாலும் அது சிறப்புடையதாகும்.

3.பகைவனை எதிர்க்கும் வீரமே மிக்க ஆண்மை.துன்பம் வரும்போது பகைவனுக்கும் உதவுதல்
ஆண்மையின் உச்சமாகும்.

4.வீரன் என்பவன் கையில் உள்ள வேலை ஒரு யானையின் மேல் எறிந்து விட்டு போரைத் தொடர
தன் மார்பில் பாய்ந்த வேலை கண்டு மகிழ்பவன் ஆவான்.

5.பகைவர் வீசும் வேல் தன் மீது பாயும் போது விழிகளை இமைத்தல் கூட வீரர்க்கு அழகல்ல.

6.வீரன் தன் வாழ்நாட்களை கணக்கிட்டு ..விழுப்புண் படாத நாட்களெல்லாம்
வீணான நாட்கள் என்று எண்ணுவான்.

7.புகழை விரும்பி உயிரைப்பற்றி விரும்பாத வீரரின்..காலில் கட்டப்படும் வீரக்கழல் கூட
தனிப்பெருமை பெற்றதாகும்.

8.தலைவன் சினந்தாலும் போர்வந்தால் உயிரை எண்ணாமல் போர் செய்யும் வீரர்
சிறப்பு குன்றாதவன் ஆவான்.

9.தான் சபதம் செய்தபடி போர்களத்தில் சாக வல்லவனை யாரும் இழிவாக பேசமுடியாது.

10.தன்னைக் காக்கும் தலைவன் கண்களில் நீர் வருமாறு வீரமரணம் அடையும்
சந்தர்ப்பத்தை யாசித்தாவது பெற்றுக்கொள்ளுதல் பெருமை ஆகும்.

Monday, May 19, 2008

77.படைமாட்சி

1.எல்லா வகைகளிலும் நிறைந்ததாய்..இடையூறுகளுக்கு அஞ்சாததாய்..போரிடக்கூடியதாய் உள்ள படை
அரசுக்கு தலையான செல்வமாகும்.

2.போரில் அழிவு வந்தாலும்..இடையூறுகளுக்கு அஞ்சாமை..பழம் பெருமைக்கொண்ட படைக்கின்றி வேறு
எந்தப் படைக்கும் இருக்க முடியாது.

3.எலிகள் கூடி பகையை கக்கினாலும்..நாகத்தின் மூச்சொலிக்கி முன்னால் நிற்க முடியாது.அதுபோல வீரன்
வெகுண்டு எழுந்தால் வீணர்கள் விழுந்து விடுவார்கள்.

4.அழிவு இல்லாததாய்,வஞ்சனைக்கு இரையாகாததாய் ,பரம்பரை பயமற்ற உறுதி உடையதே உண்மையான
படையாகும்.

5.எமனே கோபமடைந்து எதிர்த்து வந்தாலும் அஞ்சாமல் எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படை ஆகும்.

6.வீரம்,மானம்,சிறந்த வழி நடத்தல்,தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப்
பாதுகாக்கும் பண்புகளாகும்.

7.எதிர்த்து வரும் பகைவரின் போரைத் தாங்கி, வெல்லும் ஆற்றல் அறிந்திருப்பின் அதுவே வெற்றிக்கு
செல்லாக்கூடிய சிறந்த படையாகும்.

8.போர் புரியும் வீரம்,எதிர்ப்பைத் தாங்கும் ஆற்றல் இல்லை என்றாலும் படையின் அணி வகுப்புத் தோற்றம்
சிறப்புடையதாக அமைய வேண்டும்.

9.சிறுத்து விடாமல்,தலைவனை வெறுக்காமல்,பயன்படா நிலை இல்லாமல்..இருக்கும் படையே வெற்றி பெறும்.

10.நீண்ட நாள் நிலைத்திருக்கும் வீரர் பலரை கொண்டதாக இருந்தாலும்..தலைமை தாங்க சரியான தலைவர்
இல்லை எனில் அப்படை நிலைத்து நிற்காது.

Sunday, May 18, 2008

76.பொருள் செயல்வகை

1.மதிக்கத்தக்காதவர்களையும்..மதிக்கச் செய்வது அவர்களிடம் உள்ள பணமே ஆகும்.

2.பொருள் இல்லாதவரை இகழ்வதும்..உள்ளவரை புகழ்வதும் உலக நடப்பு ஆகும்.

3.செல்வம் என்னும் அணையாவிளக்கு கையில் இருந்தால் நினைத்த இடத்திற்குச்
சென்று துன்பம் என்னும் இருளை போக்கிடலாம்.

4.தீய வழியில் சேர்க்கப்படாத செல்வம் அறநெறியைக் காட்டி ஒருவருக்கு இன்பத்தைத் தரும்.

5.பெரும் செல்வம் வந்தாலும் அது அருள் நெறியிலோ..அன்பு வழியிலோ வரவில்லை என்னும்போது
அதை புறக்கணித்து விட வேண்டும்.

6.வரி,சுங்கம்,பகை நாடு,செலுத்தும் கப்பம் ஆகியவை அரசுக்குரிய செல்வமாகும்.

7.அன்பு பெற்றெடுக்கும் அருள் என்னும் குழந்தை பொருள் என்னும் செவிலித்தாயால் வளர்க்கப்படும்.

8.தன்னிடம் உள்ள செல்வத்தைக் கொண்டு தொழில் செய்தல்..மலையின் மேல் ஏறி யானைகளின்
போரைப் பார்ப்பது போல எளிதானதாகும்.

9.தன்னுடைய பகைவனின் செருக்கை அழிக்கவல்லது பொருளே ஆகும்.

10.சிறந்ததான பொருளை ஈட்டியவர்க்கு..அறமும்..இன்பமும்..எளிதாக வந்து சேரும்

75.அரண்

1.போர் செய்யச் செல்பவர்க்கும் கோட்டை சிறந்ததாகும்..பகைவர்க்கு அஞ்சித் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும்
கோட்டை பயன்படும்.

2.தெளிந்த நீர்,பரந்த நிலம்,மலையும்,காடும் இவை நான்கும் உடையதே அரண் ஆகும்.

3.உயரம்,அகலம்,உறுதி,அழிக்க முடியாத அமைப்பு இவை நான்கும் அமைந்திருப்பதே அரண்.

4.காக்க வேண்டிய இடம் சிறியதாய்.மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய்,தன்னை எதிர்க்கும் பகைவரின் ஊக்கத்தை
அழிக்கக்கூடியதே அரண் ஆகும்.

5.பகைவரால் கைப்பற்ற முடியாததாய்,உள்ளே தேவையான அளவு உணவுப் பொருள் கொண்டதாய்..போர் புரிய
எளிதானதாய் அமைந்ததே அரண் ஆகும்.

6.தன்னிடம் உள்ளவர்க்கு எல்லாப் பொருளும் உடையதாய், போர்க்காலத்தில் உதவ வலிமை மிக்க வீரர்களை
உடையதே அரண் ஆகும்.

7.முற்றுகையிட்டும், முற்றுகை இடாமல் போர் செய்தும்,வஞ்சனை செய்தும் பகைவரால் கைப்பற்ற முடியாத
வலிமையுடையதே அரண் ஆகும்.

8.முற்றுகை இடும் வல்லமை கொண்டு,உள்ளிருந்துக்கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில்
அமைந்ததே அரண்.

9.போர் முனையில் பகைவர் அழியும்படி உள்ளிருந்துக்கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் பெருமைப்
பெற்றதே அரண்.

10.கோட்டைக்கு தேவையான சிறப்புகள் இருந்தாலும்..உள்ளிருந்து போர் புரிபவர் திறமையற்றவராய் இருந்தால்
பயனில்லை.

Saturday, May 17, 2008

74.நாடு

1.குறையா விளை பொருளும்,சிறந்த அறிஞர்களும் பழி இல்லா செல்வம் உடையவரும்
கொண்டதே சிறந்த நாடாகும்.

2.மிக்க பொருள்வளம் கொண்டதாய்..எல்லோராலும் விரும்பத்தக்கதாய்,கேடு இல்லாததாய்
நல்ல விளைச்சல் உள்ளதாய் அமைவதே சிறந்த நாடு.

3.வேற்று நாட்டு மக்கள் குடியேறும்போது ஏற்படும் சுமையைத் தாங்கி..அரசுக்கு வரிகளை
ஒழுங்காகச் செலுத்தும் மக்களையும் பெற்றதே சிறந்த நாடு.

4.பசியும், நோயும், பகையும் இல்லாத நாடு சிறந்த நாடாகும்.

5.பல குழுக்களால் உட்பகையும்,அரசில் பங்குக்கொள்ளும் கொலைகாரர்களும் இல்லாததே
சிறந்த நாடாகும்.

6.பகைவரால் கெடுக்கப்படாததாய் கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ளதே
நாடுகள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

7.நிலத்தடி நீர்,மழை ஆகிய இரு வகை நீர் வளமும்..அதற்கேற்ப மலைத்தொடரும்..மலையிலிருந்து
வரும் நீர்வளமான ஆறும், பாதுகாப்பான அரணும் நாட்டிற்கு முக்கியம்.

8.நோயற்ற வாழ்வு,விளைச்சல்,பொருள்வளம்,இன்பவாழ்வு,பாதுகாப்பு ஆகிய ஐந்தும்நாட்டிற்கு அழகு.

9.இடைவிடா முயற்சியால் வளம் பெறும் நாடுகளைவிட..இயற்கையிலேயே வளங்களைக் கொண்ட
நாடே சிறந்த நாடாம்.

10.நல்ல தலைவன் அமையாத நாட்டில் எல்லா வளங்கள் இருந்தாலும் பயனின்றிப் போகும்.

Friday, May 16, 2008

73.அவை அஞ்சாமை

1.சொற்களின் அளவறிந்தவர்கள்..அவையிலிருப்போரை அறிந்து..பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.

2.கற்றவரின் முன்..தான் கற்றதை அவர்கள் மனதில் பதிய சொல்லும் வல்லவர்..கற்றவர்களைவிட
கற்றவராக மதிக்கப்படுவர்.

3.பகைவர்களைக் கண்டு அஞ்சாமல் சாகத்துணிந்தவர் பலர் உள்ளனர்..ஆனால்..அறிவுடையோர் உள்ள
அவையில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரே உள்ளனர்.

4.அறிஞர்கள் அவையில் நாம் கற்றதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவு எடுத்துச் சொல்லி ..நம்மைவிட
கற்றவர்களிடம் தெரியாததைக் கேட்டு அறிந்துக் கொள்ள வேண்டும்.

5.அவையில் பேசும்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு அஞ்சாமல் விடை அளிக்கும் அளவுக்கு ஏற்றவகையில்
கற்றிருக்க வேண்டும்.

6. கோழைகளுக்கு வாளால் என்ன பயன்? அதுபோல அவையில் பேச அஞ்சுபவர் கற்றும் பயனில்லை.

7.அவையில் பேச அஞ்சுபவன் கற்ற நூல்..போர்க்களத்தில் கோழையின் கையில் ஏந்தியுள்ள வாளுக்கு சமம்.

8.அறிவுடையோர் உள்ள அவையில்..அவர்கள் மனதில் பதிய கருத்துக்களை சொல்ல முடியாதவர்..என்ன
படித்து என்ன பயன்?

9.நூல் பல கற்றும் அறிஞர்கள் நிறைந்த அவையில் பேச அஞ்சுபவர்..கல்லாதவரைவிட இழிவானவர்களாக
கருதப்படுவர்.

10.அவைக்கு அஞ்சி தாம் படித்ததைக் கேட்போர் கவரும் வண்ணம் கூற அஞ்சுபவர்..உயிருடன் இருந்தும்
இறந்தவர் ஆவார்.

Thursday, May 15, 2008

72.அவை அறிதல்

1.ஒவ்வொரு சொல்லின் தன்மையை உணர்ந்த அறிஞர்கள், அவையினரின் தன்மையும் உணர்ந்து..அதற்கேற்ப
ஆராய்ந்து பேசுவார்கள்.

2.சொற்களின் வழிமுறையறிந்தவர் அவையினரின் நேரத்தையும்,நிலையையும் உணர்ந்து சொல்ல வேண்டும்.

3.அவையின் தன்மையை அறியாது..சொற்களை பயன்படுத்துவோர்களுக்கு சொற்களின் வகையும் பேசும் திறமையும்
கிடையாது.
4.அறிவாளிகளின் முன் அறிவாளியாகவும்..அறிவற்றவர் முன் அறிவில்லாதவர் போலவும் இருக்க வேண்டும்.

5.அறிவாளிகள் மிகுந்த இடத்தில் பேசாத அடக்கம் ஒருவனுக்கு எல்லா நன்மைகளையும் தரும்.

6.அறிவுடையோர் முன் ஆற்றும் உரையில் குற்றம் ஏற்படின் அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு
சமமாகும்.
7.குற்றமற்ற சொற்களை தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துபவரிடம் அவர் கற்ற கல்வியின் பெருமை விளங்கும்.

8.உணரும் தன்மை உள்ளவர் முன் கற்றவர் பேசுவதென்பது..தானே வளரும் பயிரில் நீர் ஊற்றுவதற்கு சமமாகும்.

9.நல்ல அறிஞர்கள் சூழ்ந்த அவையில்..மனதில் பதியுமாறு பேசுபவர்..சொல்வன்மை உள்ளவர் ஆவார்..அறிவற்றோர்
அவையில் பேசாதிருப்பதே சிறந்தது.

10.அறிவுள்ளவர்கள்..அறிவில்லாதவர் நிறைந்த கூட்டத்தில் பேசுவது தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய
அமிழ்தம் போல வீணாகிவிடும்.

71.குறிப்பறிதல்

1.ஒருவன் ஏதும் சொல்லாமலேயே அவர் முகம் நோக்கி கருத்து அறிபவன் உலகத்துக்கு
அணிகலனாவான்.
2.ஒருவன் மனதில் உள்ளதை உணர வல்லவரை தெய்வத்தோடு ஒப்பிடலாம்.

3.முகம்,கண்,இவற்றின் குறிப்புகளால் உள்ளக் குறிப்பை உணருபவரை எதைக் கொடுத்தாவது
நம் துணை ஆக்கிக் கொள்ள வேண்டும்.
4.ஒருவன் மனதில் உள்ளதை.. அவன் கூறாமலேயே அறிந்துக் கொள்பவர் போல மற்றவர்கள்
உறுப்பால் ஒன்று பட்டாலும் அறிவால் வேறுபட்டவர்கள்.
5.ஒருவனது முகக் குறிப்பு உள்ளத்தில் உள்ளதைக் காட்டிவிடும் எனும் போது..அதை உணர
முடியாதவர்களுக்கு கண்கள் இருந்தும் பயனில்லை.
6.ஒருவன் மனதில் உள்ளதை அவன் முகம்..தன் எதிரில் உள்ளதை காட்டும் கண்ணாடிப் போலக்
காட்டிவிடும்.
7.உள்ளத்தில் உள்ள விருப்பு,வெறுப்புகளை தெரிவிக்கும் முகத்தைவிட அறிவு மிக்கது ஏதுமில்லை.

8.முகக் குறிப்பால் உள்ளத்தில் உள்ளதை அறிபவர் முன் ஒருவன் நின்றாலே போதுமானது ஆகும்.

9.கண் பார்வையின் வேறுபாடுகளை புரிந்துக் கொள்ளக் கூடியவர்கள்..ஒருவரின் கண்களைப் பார்த்தே
அவரிடம் உள்ளது நட்பா..பகையா என கூறிவிடுவர்.
10.தாம் நுட்பமான அறிவுடையோர் என்பவர்..பிறர் மனத்தில் உள்ளதை ஆராய்ந்து அறிய பயன்படுத்துவது
அவர்களின் கண்களையே ஆகும்.

Tuesday, May 13, 2008

70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

1.மன்னருடன் பழகுபவர் நெருப்பில் குளிர் காய்பவர்போல் அணுகியும்
அணுகாமலும் இருக்கவேண்டும்.

2.மன்னர் விரும்புவதைத் தாம் விரும்பாமலிருத்தல்,அரசரால்
நிலையான ஆக்கத்தைப் பெற்றுத்தரும்.

3.அரசரிடம் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் தவறுகள்
நேராமல் காத்துக்கொள்ளவேண்டும்.அரசனுக்கு சந்தேகம் வந்துவிட்டால் தீர்ப்பது எளிதல்ல.

4.வல்லமை உள்ள பெரியவர்கள் முன் மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும்
நகைப்பதையும் தவிர்த்து அடக்கமயிருக்கவேண்டும்.

5.அரசர் பிறருடன் பேசும்போது அதை ஒட்டுக்கேட்கக்கூடாது.அது என்ன வென்றும்
கேட்கக்கூடாது.அவர் என்ன என்று சொன்னால் மட்டுமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

6.அரசர் குறிப்பறிந்து தக்க காலம் எதிர்நோக்கி வெறுப்பில்லாதவற்றையும்,
விருப்பமானவற்றையும் அவர் விரும்பும்படி சொல்லவேண்டும்.

7.விரும்பிக்கேட்டாலும் பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப்
பயனற்றவற்றை சொல்லாமல் விடவேண்டும்.

8.அரசர் எனக்கு இளையவர் ..எனக்கு இன்னமுறையில் சொந்தம் என்று எல்லாம்
சொல்லாமல் நம் நிலைக்கு ஏற்றபடி நடக்கவேண்டும்.

9.நாம் அரசரால் விரும்பபட்டோம் என்ற துணிவில் அரசர் விரும்பாதவற்றை
அறிவுடையோர் செய்யமாட்டார்கள்.

10.நெருங்கி அரசருடன் பழகுவதாலேயே தகாத காரியங்களை செய்தால் அது
துன்பத்தையேத் தரும்.

69.தூது

1.அன்பான குணம்,தகுதியான குடிப்பிறப்பு,அரசர் விரும்பும் சிறந்த பண்பு பெற்றிருப்பதே
தூதுவனின் தகுதிகளாகும்.

2.அன்பு,அறிவு ஆராய்ந்து பேசும் சொல்வன்மை இம்மூன்றும் தூது செல்வோருக்கு தேவையான
பண்புகளாகும்.

3.வேற்று நாட்டவனிடம்..தன் நாட்டிற்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைக்கும் தூதுவனே..
நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

4.தூது உரைப்போர்.. அறிவு,தோற்றம்,ஆய்ந்த கல்வி ஆகிய மூன்றும்..நிறைந்தவராக இருத்தல்
வேண்டும்.

5.பலவற்றை தொகுத்திச் சொல்லி..பயனற்றவைகளை நீக்கி மகிழுமாறு சொல்லி..அரசனுக்கு
நன்மை உண்டாக்குபவனே தூதுவன்.

6.கற்கவேண்டியவற்றை கற்று..பிறரின் பகையான பார்வைக்கு அஞ்சாமல், கேட்பவர் உள்ளத்தில்
பதிய சொல்லி.. காலத்திற்குப் பொருத்தமானதை அறிகின்றனவே தூதுவன்.

7.செய்யவேண்டிய கடமையை தெளிவாக அறிந்து,செய்யும் காலத்தை எதிர் நோக்கித் தக்க
இடத்தையும் ஆராய்ந்து சொல்பவனே தூதுவன்.

8.துணிவு,துணை,தூய ஒழுக்கம் இவை மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

9.ஒரு அரசின் கருத்தை மற்றொரு அரசுக்கு எடுத்துக் கூறும்போது..வாய்த் தவறிக்கூட
குற்றமான சொற்களை சொல்லாதவனே தகுதியான தூதுவன் ஆவான்.

10.தனக்கு அழிவு வந்தாலும்..அதற்காக பயப்படாது..தன் அரசனுக்கு நன்மையை உண்டாக்குபவனே
தூதுவன் ஆவான்.

68.வினை செயல்வகை

1.ஒரு செயலில் ஈடுபடும்முன் அச்செயலால் எழப்போகும் சாதக,பாதங்கள் பற்றி
ஆராயவேண்டும்..முடிவெடுத்தபின் காலந்தாழ்த்தக்கூடாது.

2.மெதுவாக செய்யவேண்டிய காரியங்களை காலந்தாழ்த்தே செய்யலாம்.
ஆனால் விரைவாக செய்ய வேண்டியதை உடனே செய்யவேண்டும்.

3.இயலும் இடத்திலெல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது.
இயலாத இடமாயின் அதன் வழி அறிந்து செயலை முடிக்க வேண்டும்.

4.ஏற்ற செயல்.. எதிர்கொண்ட பகை இவற்றை முழுதும் முடிக்காது விட்டுவிட்டால்
அது நெருப்பைஅரைகுறையாக அணைத்தாற் போலாகிவிடும்.

5.வேண்டிய போருள்,அதற்கான கருவி,காலம்,செயல்முறை,இடம் ஆகியவற்றை....
ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன் பார்த்துக்கொள்ளவேண்டும்.

6.செயலை முடிக்கும் வகையும்,வரக்கூடிய இடையூறும்,முடிந்தபின் கிடைக்கும்
பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்யவேண்டும்.

7.ஒரு செயலை செய்பவன் அச்செயலைக்குறித்து நன்கு அறிந்தவனின் கருத்தை
முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.

8.ஒரு செயலில் ஈடுபடும்போதே ...அது தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்தல்
ஒரு யானையை பயன்படுத்தி மற்ற யானையை பிடிப்பது போன்றதாகும்.

9.நண்பருக்கு...நல்ல உதவியை செய்வதைவிட..பகைவராய் உள்ளவரை தன்னுடன்
சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத்தக்கதாகும்.

10.நம்மைவிட வலிமையுள்ளவரை எதிர்க்க நம்முடன் உள்ளவரே அஞ்சும்போது...
வேண்டுவது கிடைக்குமானால் வலியோரை பணிந்தும் அவர்கள் ஏற்றுக்கொள்வர்.

Monday, May 12, 2008

67.வினைத்திட்பம்

1.எல்லம் இருந்தும் மனதில் உறுதி இல்லையெனில் ...செய்யும்
செயலிலும் உறுதி இருக்காது.

2.இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்குவது...மீறிவந்தால்
மனம் தளராது இருப்பது..இவையே அறிவுடையோர் கொள்கையாகும்.

3.ஒரு செயலை செய்தபின் வெளியிடுவதே ஆண்மையாகும்..இடையில்
வெளியிட்டால் அது நீங்கா துன்பத்தையே கொடுக்கும்.

4.ஒருசெயலை சொல்லுவது எல்லோருக்கும் எளிது...சொல்லியதைச்
செய்து முடிப்பது கடினம்.

5.செயல் திறனால் சிறப்புற்றவரின் வினைதிட்பம்..ஆட்சியாளரையும்
கவர்ந்து பெரிதும் போற்றப்படும்.

6.எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதியாய் இருப்பவரே..
எண்ணியபடி வெற்றி பெறுவார்கள்

7.உருவத்தில் சிறியவர்களைக் கண்டு இகழக்கூடாது.பெரிய தேர் ஓட உதவும்
அச்சாணியும் உருவத்தில் சிறியது தான்.

8.மனம் கலங்காது..ஆராய்ந்து துணிந்து,தளர்ச்சியின்றி ...தாமதமும் இல்லாமல்
ஏற்ற செயலை செய்து முடிக்கவேண்டும்.

9.இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும்போது ...அதனால் ஆரம்பத்தில்
துன்பம் வந்த போதும் துணிவுடன் செய்து முடிக்கவேண்டும்.

10.எவ்வளவு தான் உறுதி உடையவராய் இருந்தாலும் ..செய்யும் தொழிலில்
உறுதியற்றவரை உலகம் மதிக்காது

Saturday, May 10, 2008

66.வினைத்தூய்மை

1.ஒருவனுக்கு கிடைக்கும் துணையின் நன்மை ஆக்கத்தையும்.
செய்யும் வினையின் நன்மை எல்ல நலன்களையும் கொடுக்கும்.

2. புகழையும்,நன்மையும் தராத செயல்களை எப்பொழுதுமே செய்யாமல்
விட்டொழிக்க வேண்டும்.

3.மேன்மேலும் உயரவேண்டும் என விரும்புபவர்,தன் புகழ் கெட காரணமான
செயலைச் செய்யாமல் விடுவர்.

4.தெளிந்த அறிவினையுடையவர்.. துன்பத்தில் சிக்கினாலும் இழிவான
செயலை செய்யார்.

5.பின்னால் நினைத்து வருந்தும் செயல்களைச் செய்யக்கூடாது.அப்படியே
தவறி செய்திருந்தாலும்..மீண்டும் செய்யாதிருத்தல் நல்லது.

6.பெற்ற தாயின் பசி கண்டு வருந்தினாலும்..ஒருவன் இழிவான
செயலைச் செய்யக்கூடாது.

7.இழிவான செயல் புரிந்து செல்வந்தனாக வாழ்வதை விட,கொடிய
வறுமை தாக்கினாலும் ,நேர்மையாளராக வாழ்வதே மேலானது.

8.தகாத செயல்களை விலக்காமல் செய்தவர்களுக்கு அச்செயல்கள்
நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.

9.பிறர் வருந்த திரட்டிய பொருள் எல்லம் போய்விடும்.. ஆனால் நல்வழியில்
ஈட்டிய செல்வம் நம்மை விட்டு போனாலும் மீண்டும் பயன் தரும்.

10.தவறான வழியில் பொருள் சேர்த்து காப்பாற்றுதல்..பச்சை மண் பாத்திரத்தில்
நீரை விட்டு காப்பாற்றுவது போன்றதாகும்.

65.சொல்வன்மை

1.நாவன்மை செல்வம் ஆகும்..அது சிறப்புடைய சிறந்த செல்வமாகும்.

2.ஆக்கமும்..அழிவும் சொல்லும் சொல்லால் வருவதால் ஒருவன் தன்
சொல்லில் தவறு நேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

3.கேட்பவரை கவரும் தன்மையும்..கேட்காதவரைக்கூட கேட்க வைபபதுமே
சொல்வன்மை ஆகும்.

4.சொல்லும் காரணத்தை அறிந்து சொல்லும் சொல்வன்மையைவிட
சிறந்த அறமும்..பொருளும் இல்லை.

5.ஒரு சொல்லை வெல்லும் மற்றொரு சொல் இல்லை என்பதை உணர்ந்த பின்னே
அச்சொல்லை பயன்படுத்தவேண்டும்.

6.பிறர் விரும்பும் கருத்துக்களைச் சொல்லி..பிறர் சொல்லும் சொல்லின்
பயனை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது அறிவுடையார் தொழிலாகும்.

7.சொல்லுவதை நன்கு சொல்லி ..சோர்வற்றவனாய்,அஞ்சாதவனாய்
உள்ளவனை யாராலும் வெல்லமுடியாது.

8.சொற்களை கோர்த்து...இனிமையாக சொல்ல வல்லவரை உலகத்தார் கேட்டு
அதன்படி நடப்பர்.

9.குற்றமற்ற சொற்களை சொல்லத் தெரியாதவர்தான்..பல சொற்களை
திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பர்.

10.தாம் கற்றதை பிறர்க்கு சரியாக விளக்கத் தெரியாதவர்கள்...
கொத்தாக மலர்ந்திருந்தாலும்..மணமில்லா மலரைப் போன்றவர்கள்.

Friday, May 9, 2008

64.அமைச்சு

1.உரிய கருவி,ஏற்ற காலம்,செய்யும் வகை,செய்யப்படும் பணி ஆகியவற்றை ஆய்ந்து
அறிந்து செய்ய வல்லவனே அமைச்சன்.

2.அஞ்சாமை,குடிபிறப்பு,காக்கும் திறன்,கற்றறிந்த அறிவு,முயற்சி ஆகிய ஐந்தும்
கொண்டவனே அமைச்சன்.

3.பகைவனின் துணையைப் பிரித்தல்,தம்மிடம் உள்ளவரைக் காத்தல்,பிரிந்தவரை
மீண்டும் சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சன்.

4.ஒரு செயலை தேர்ந்தெடுத்தலும்,அதற்கான வழி அறிந்து ஈடுபடுதலும் துணிவான
கருத்துக்களை சொல்லுதலுமே அமைச்சனின் சிறப்பாகும்.

5.அறத்தை அறிந்தவனாய்,சொல்லாற்றல் கொண்டவனாய்,செயல் திறன் படைத்தவனாய்
இருப்பவனே ஆலோசனை சொல்ல தகுதி உடையவன்.

6.இயற்கையான அறிவு,நூலறிவு இரண்டையும் பெற்றவர் முன் எந்த சூழ்ச்சியும் நிற்காது.

7.நூலறிவைப் பெற்றிருந்தாலும்..உலக நடைமுறைகளை அறிந்து அதற்கேற்ப செயல்களை
நிறைவேற்ற வேண்டும்.

8.சொந்த அறிவும் இன்றி,சொல்வதையும் கேட்காதவர்களுக்கு அமைச்சன் தான் நல்ல
யோசனைகளைக் கூற கடைமைப்பட்டவன்.

9.தவறான வழியைக் கூறும் அமைச்சனைவிட..எழுபது கோடி பகைவர்கள் எவ்வளவோ மேலாகும்.

10.முறையாக எடுக்கப்பட்ட முடிவுகளையும்..செயல் படுத்த திறனற்றோர் எதையும் முழுமையாக
செய்யார்.

63.இடுக்கண் அழியாமை

1.துன்பம் வரும்போது கலங்கக்கூடாது.அதை எதிர்த்து
வெல்ல வேண்டும்.

2.வெள்ளம் போன்ற அளவற்ற துன்பமும்...அதை நீக்கும் வழியை
அறிவுடையவர்கள் நினைக்க விலகி ஓடும்.

3.துன்பம் வரும்போது கலங்காமல்..அத்துன்பத்திற்கே துன்பத்தை உண்டாக்கி
அதை வெல்ல வேண்டும்.

4.கரடுமுரடான பாதையில் வண்டி இழுக்கும் எருது போல விடாமுயற்சியுடன்
செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்படும்.

5.துன்பங்கள் கண்டு கலங்காதவர்களைக் கண்டு அத்துன்பமே
துன்பபட்டு அழியும்.

6.செல்வம் வரும்போது அதன்மீது பற்றுக்கொள்ளாதவர்கள்தான் ..
வறுமை வந்தபோது துவண்டுவிட மாட்டார்கள்.

7.உடலுக்கும் உயிர்க்கும் துன்பம் இயல்பானதால்..துன்பம் வரும்போது
அதை துன்பமாகக் கருதக்கூடாது.

8.இன்பம் தேடி அலையாது ..துன்பம் இயற்கையானதுதான் என
எண்ணுபவன் ..துவண்டு போவதில்லை.

9.இன்பம் வரும்போது ஆட்டம் போடாமலும்...துன்பம் வரும்போது வாடாமலும்
இரண்டையும் ஒன்று போல் கருதவேண்டும்.

10.துன்பத்தையே இன்பமாகக் கருதிக் கொண்டால்...அவர்களை
பகைவர்களும் பாராட்டுவார்கள்.

62.ஆள்வினை உடைமை

1.எந்த ஒரு காரியத்தையும் நம்மால் முடியும் என்று நம்பிக்கையுடன் முயன்றால்
அதுவே பெரிய வலிமை ஆகும்.

2.எந்த செயலானாலும் ..அரைக்கிணறு தாண்டாமல் முழுவதுமாக செய்து முடிக்க வேண்டும்.

3.பிறர்க்கு உதவி செய்தல்....என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்ற
பண்பில் நிலைத்து இருக்கின்றது.

4.ஊக்கமில்லாதவரை நம் உதவியாளராக வைப்பது என்பது..ஒரு கோழை வாள்
வீச்சில் ஈடுபடுவதை போன்றதாகும்.

5.தன் இன்பத்தை விரும்பாதவனே..தான் ஏற்ற செயலை முடிக்க நினைப்பவனே..
தன் சுற்றத்தாரை தாங்குகின்ற தூணாக ஆவான்.

6.முயற்சி ஒருவனது செல்வத்தை பெருக்கும்..முயற்சி இன்மை அவனை வறுமையில் ஆழ்த்தும்.

7.ஒருவனின் சோம்பலில் மூதேவியும்,சோம்பலற்றவன் முயற்சியில் திருமகளும் வாழ்கின்றனர்.

8.ஊழ்வினை என்பதுடன் அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாமைதான் பெரும்பழியாகும்.

9.ஊழ்வினையால் ஒன்றை செய்ய முடியாமல் போனாலும்..ஒருவனின் முயற்சியானது
அந்த உழைப்பிற்கான வெற்றியைக் கொடுக்கும்.

10.ஊழ்வினையை வெல்ல முடியாது என்று சொல்வதை விட,முயற்சியை மேற்கொண்டால்
அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்யலாம்.

Thursday, May 8, 2008

61.மடி இன்மை

1.பிறந்த குடி மங்காத விளக்காயிருந்தாலும்...ஒருவனது சோம்பல்
அதை மங்க வைத்துவிடும்.

2.பிறந்த குடி செழிக்க...சோம்பலை ஒழித்து...ஊக்கத்துடன்
முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

3.அழிக்கும் இயல்பான சோம்பல் கொண்டவனின் பிறந்த குடி
அவனுக்கு முன் அழிந்துவிடும்.

4.சோம்பலில் உழன்று..சிறந்த முயற்சி இல்லாதவர்கள் குடி
தனிப் பெருமை இழந்து...குற்றத்தை பெருக்கும்.

5.காலம் தாழ்த்துதல்,மறதி,சோம்பல்.அளவுக்கு மீறிய தூக்கம்
இந்நான்கும் கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் தோணிகளாகும்.

6.நல்லவர்கள் உறவு தானே வந்து சேர்ந்தாலும் ..சோம்பல் உடையவர்
சிறந்த பயனை அடைய முடியாது.

7.முயற்சியின்றி சோம்பேறியாய் வாழ்பவர்கள் அனைவரின் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.

8.நல்ல குடியில் பிறந்தவனிடம் சோம்பல் இருந்தால் அதுவே அவனைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

9.சோம்பலை அகற்றிவிட்டால் ..அவனது குடிப்பெருமையும்,ஆண்மையும்
தானே வந்து சேரும்.

10.சோம்பல் இல்லா அரசன் உலகம் முழுவதையும் ஒரு சேர அடைவான்

Wednesday, May 7, 2008

60.ஊக்கம் உடைமை

1.ஊக்கம் உடையவர் எல்லாம் உடையவர்.ஊக்கம் இல்லாதவர் எது இருந்தாலும் உடையவர் ஆக மாட்டார்கள்.

2.ஊக்கம் ஒன்றுதான்..நிலையான உடைமையாகும்.

3.ஊக்கம் உடையவர்கள்..ஆக்கம் இழந்து விட்டாலும்..இழந்துவிட்டோமே என கலங்க மாட்டார்கள்.

4.உயர்வு..ஊக்கமுடையவர்களை தேடிப்பிடித்து போய்ச் சேரும்.

5.தண்ணீர் அளவே தாமரைத் தண்டின் அளவும் இருக்கும்.அதுபோல மனிதர்களின் வாழ்க்கையின் உயர்வும்
ஊக்கத்தின் அளவே இருக்கும்.
6.உயர்வைப் பற்றியே எண்ண வேண்டும்..அவ்வுயர்வை அடையாவிடினும் நினைப்பை விட்டு விடக் கூடாது.

7.உடம்பு முழுதும் அம்புகளால் புண்பட்டாலும் யானை தன் பெருமையை நிலை நிறுத்தும்..அதுபோல
அழிவு வந்தாலும் ஊக்கமுடையவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
8.ஊக்கம் அற்றோர்..தம்மைத் தாமே எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடைய மாட்டார்கள்.

9.யானை பருத்த உடலையும்,கூர்மையான தந்தங்களையும் உடையது..ஆனாலும் ஊக்கமுள்ள புலி
தாக்கினால் அஞ்சும்.
10.ஊக்கமில்லாதவர்கள் மனிதர்களாக காணப்பட்டாலும்..மரங்களுக்கும்,அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.

59.ஒற்றாடல்

1.ஒற்றரும்,நீதிநூலும் அரசனின் இரண்டு கண்களாக அமையும்.

2.எல்லோரிடத்திலும்,நிகழும் எல்லாவற்றையும் ஒற்றர் மூலம் விரைந்து அறிதல் அரசனின் தொழிலாகும்.

3.நாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றரால் அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்து நடக்காத அரசு தழைத்திடமுடியாது.

4.ஒற்று வேலை பார்ப்பவர்கள் வேண்டியவர்,வேண்டாதவர்,சுற்றத்தார் என்று எல்லாம் பாராது பணி செய்தலே
நேர்மைக்கு அடையாளம்.
5.சந்தேகப்படாத உருவத்தோடு,பார்ப்போர் கண் பார்வைக்கும் அஞ்சாமல்,என்ன நேரிடினும் மனத்தில் உள்ளதை
சொல்லாதவரே சிறந்த ஒற்றர்கள் ஆவர்.
6.முற்றும் தொடர்பில்லாதவராய் இருந்துக்கொண்டு..செல்ல முடியாத இடங்களில் சென்று ஆராய்ந்து..துன்பங்களை
தாங்கிக்கொண்டு தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாதவரே ஒற்றர் ஆவார்.
7.மற்றவர்கள் பற்றிய செய்திகளையும் அவர்களுடன் இருப்பவர் மூலம் கேட்டுத் தெரிந்துக்கொண்டு ..அதன்
உண்மைகளை தெளிந்து அறிவதே உளவறியும் திறனாகும்.
8.ஒரு ஒற்றன் தெரிவித்த செய்தியையும்..மறு ஒற்றன் மூலம் தெரிந்துக்கொண்டு ..செய்தியின் உண்மையைப் பற்றி
முடிவுக்கு வர வேண்டும்.
9.ஒரு ஒற்றனை..மறு ஒற்றன் தெரியாதபடி ஆள வேண்டும்.இது போல் மூன்று ஒற்றர்களை இயங்க வைத்து
அறிவதே உண்மை எனக் கொள்ள வேண்டும்.
10.ஒற்றரின் திறனை வியந்து அவனை சிறப்பு செய்தால்,அவன் ஒற்றன் என்பது வெளிப்படையாக தெரிந்து விடும்.

Tuesday, May 6, 2008

58.கண்ணோட்டம்

1.இரக்கம் என்னும் சிறந்த அழகு இருப்பதால் தான் உலகு
அழியாமல் இருக்கின்றது.

2.இரக்கம்,அன்பும் இல்லதவர்கள் உயிரோடு இருத்தல் நிலத்துக்கு ஒரு சுமையே ஆகும்.

3.பாடலுடன் பொருந்தாத இசை போல..இரக்கம் சுரக்கா கண்ணினால் என்ன பயன்.

4.தக்க அளவில் அன்பும் இரக்கமும் இல்லாத கண்கள் முகத்தில் இருந்தால் என்ன...இல்லாவிட்டால் என்ன.

5.கருணைஉள்ளம் உள்ளவன் கண்ணே கண்..மற்றவை எல்லம் கண் அல்ல புண்.

6.கண் இருந்தும் இரக்கம் இல்லாதவர் மரம் போன்றவர்கள்.

7.கருணை உள்ளம் கொண்டவர்களுக்கு இருப்பதே கண்கள்..அல்லாதவர்கள்
கண்ணற்றோர் என சொல்லலாம்.

8.கடமை தவறாதல் கருணை பொழிதல் உள்ளவர்க்கே
இவ்வுலகம் உரிமையுடையதாகும்.

9.தம்மை அழிக்க நினைப்பவரிடமும் பொறுமை காட்டுவது மிக
உயர்ந்த பண்பாகும்.

10.கருணை உள்ளமும் பண்பும் உள்ளவர்கள் விஷத்தையேக் கொடுத்தாலும் அருந்தி மகிழ்வர்

57.வெருவந்த செய்யாமை

1.ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து மீண்டும் அக்குற்றம் செய்யாதப்படி..குற்றத்துக்கு பொருந்துமாறு
தண்டிப்பவனே அரசன்.
2.குற்றங்கள் நிகழாமல் இருக்க..தண்டிக்கும்போது அளவுக்கு அதிகமாக நடந்துக்கொள்வது போலக் காட்டி
..அளவு மீறாமல் நடக்க வேண்டும்.
3.குடிமக்கள் அஞ்சும்படியாக நடக்கும் அரசு..விரைவில் அழியும்.

4.நம் தலைவன் கடுமையானவன்..என குடிமக்கள் கருதினால்..அந்த அரசு தன் பெருமையை விரைவில்
இழக்கும்.
5.கடுகடுப்பும்,இனிமையற்ற முகமும் உடையவன் செல்வம் பேயைப்போல அஞ்சத்தக்க தோற்றத்துக்கு ஒப்பாகும்.

6.கடுஞ்சொல்லும்,இரக்கமற்ற உள்ளமும் கொண்டவன் செல்வம் நிலைக்காமல் அழிந்து விடும்.

7.கடுஞ்சொல்லும்,முறையில்லா தண்டனையும் அரசின் வெற்றிக்கான வலிமையை தேய்க்கும் கருவியாக அமையும்.

8.அமைச்சர்களுடன் கலந்து முடிவெடுக்கா அரசன்..சினத்துக்கு ஆளாகி நிற்பதுடன்,புகழையும் இழப்பான்.

9.முன்னரே உரிய பாதுகாப்பு இல்லாத அரசன்..போர் வந்துவிட்டால் தற்காப்பு இல்லாது விரைவில் வீழ்வான்.

10.கொடுங்கோல் மன்னன் படிக்காதவர்களை, இந்த பூமிக்கு பாரமாய் தனக்கு பக்க பலமாய் ஆக்கிக்கொள்வான்.

Monday, May 5, 2008

56.கொடுங்கோன்மை

1.குடிகளை வருத்தும் தொழிலையும்,முறையில்லா செயல்களையும் செய்யும் அரசன் கொலையாளியை விடக்
கொடியவன்.
2.ஆட்சியில் இருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டி பொருள் பறித்தல்..வேல் ஏந்தி நிற்கும்
கள்வன் மிரட்டி 'கொடு' என பறித்தல் போன்றது.
3.ஆட்சியில் விளையும் நன்மை,தீமைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தகுந்தவாறு நடக்காத அரசு சீர் குலையும்.

4.நாட்டு நிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசன் பொருளையும்,குடிகளையும் ஒரு சேர இழப்பான்.

5.கொடுமையால் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கக்கூடியதாகும்.

6.நீதி நெறி தவறாத அரசு புகழ் பெறும்..தவறிய அரசு சரிந்து போகும்.

7.மழை இல்லா உலகம் எத்தன்மையானதோ..அத்தன்மையானது நாட்டில் வாழும் மக்களிடம் அருள் இல்லா அரசு.

8.வறுமை இல்லா ஒருவன் வாழ்வு..கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்து விட்டால் அது வறுமைத் துன்பத்தை
விட அதிக துன்பமாகும்.
9.முறை தவறி நாட்டை ஆளும் அரசன் இருந்தால்..அந்த நாட்டில் பருவ மழை கூட பொய்த்துப் போகும்.

10.நாட்டைக் காக்கும் அரசன் முறை தவறினால்..அந் நாட்டில் பசுக்கள் பால் தராது..அறநூல்களையும் மக்கள்
மறப்பர்.

Sunday, May 4, 2008

55.செங்கோன்மை

1.குற்றம் என்னவென்று ஆராய்ந்து, எந்த பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல்
வழங்கப்படுவது நீதியாகும்.
2.உலகத்து உயிர்கள் மழையை நோக்கி வாழ்கின்றன..அதுபோல குடிமக்கள் நல்லாட்சியை நோக்குகிறார்கள்.

3.மறை நூலுக்கும்..அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனின் செங்கோலாகும்.

4.குடிமக்களை அன்போடு அணைத்து..செங்கோல் செலுத்துபவரை உலகம் போற்றும்.

5.நீதி வழுவா அரசு இருந்தால் பருவ காலத்தில் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல்
கிடைப்பது போல ஆகும்.
6.அரசுக்கு வெற்றி பகைவரை வீழ்த்துவதில்லை..குடிமக்களை வாழவைப்பதே..

7.நீதி வழுவாத அரசு இருந்தால்...அந்த அரசே நீதியை காக்கும்.

8.ஆடம்பர அரசு...நீதி வழங்கப்படாத அரசு..இவை தானாகவே கெட்டு ஒழியும்.

9. குடிமக்களை பாதுகாப்பதும், குற்றம் புரிந்தவர் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என
கருதாது தண்டிப்பதும் அரசின் கடைமையாகும்.
10.கொடியவர் சிலரை கொலை தண்டனை மூலம் அரசு தண்டிப்பது வயலில் பயிரின்
செழிப்புக்காக களை எடுப்பது பொலாகும்

Saturday, May 3, 2008

54.பொச்சாவாமை

1.மகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி,அடங்காத சினத்தால் ஏற்படும்
விளைவை விட தீமையானது.

2.நாளும் வாட்டும் வறுமை அறிவைக் கொல்வதுபோல,புகழை
அவனுடைய மறதி கொன்றுவிடும்.

3.மறதி உள்ளவர்களுக்கு..அவர் எப்படிபட்டவராயிருந்தாலும் புகழ்
ஏற்படாது.

4.தம்மைச்சுற்றி பாதுகாப்பிருந்தாலும்..அச்சம் உள்ளவருக்கு பயனில்லை..
அதுபோல மறதி உடையவர்களும் நல்ல நிலை இருந்தும் பயனில்லை.

5.துன்பம் வருமுன் அதை காக்காமல் மறந்துவிடுபவன்..பின்னர்
அவை வரும்போது தன் பிழையை எண்ணி வருந்துவான்.

6.ஒருவரிடம் மறவாமை என்ற பண்பு இருக்குமேயானால்..அதைவிட
அவருக்கு நன்மை தருவது வேறு எதுவும் இல்லை.

7.மறதியின்றி அக்கறையுடன் செயல்பட்டால் முடியாதது என்பதே கிடையாது.

8.சான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களை போற்றிஸ் செய்யவேண்டும்..
இல்லையனில் ஏழு பிறப்பிலும் நன்மை உண்டாகாது.

9.மகிழ்ச்சியால் செருக்கு அடைந்து கடமையை மறப்பவன்...
அதுபோல முன்னரே அழிந்துபோனவர்களை எண்ணி திருந்திடவேண்டும்.

10.ஒருவன் எண்ணியதை விடாது...வெற்றி அடைவதிலேயே குறியாக இருந்தால்..
குறிக்கோளை அடைவது எளிதாகும்.

Friday, May 2, 2008

53.சுற்றந்தழால்

1.ஒருவன் வறுமை அடைந்த நேரத்திலும்..அவனிடம் பழைய உறவைப்
பாராட்டிப் பேசுபவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.
2.அன்பு குறையா சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் ..அது வளர்ச்சி குறையாத
ஆக்கத்தை கொடுக்கும்.
3.சுற்றத்தாரோடு கலந்து பழகும் தன்மை இல்லாதவன் வாழ்வு..கரையில்லா
குளத்தின் நீர் போல பயனற்றது ஆகும்.
4.சுற்றத்தாரோடு தழுவி அன்புடன் வாழ்தல்..ஒருவனுக்கு பெரும் செல்வத்தைப்
பெற்ற பலனைத் தரும்.
5.கொடைத் தன்மையும்,இன் சொல்லும் கொண்டவனை சுற்றத்தார் சூழ்ந்து
கொண்டேயிருப்பார்கள்.
6.பெரும் கொடையாளியாகவும்,கோபமற்றவனாகவும் ஆகிய ஒருவன் இருந்தால்
அவனைப்போல சுற்றம் உடையவர் உலகில் இல்லை எனலாம்.
7.காக்கை தன் சுற்றத்தாரைக் கூவி அழைத்து உண்ணும்.அந்தக் குணம் பெற்றோருக்கு
உலகில் உயர்வு உண்டு.
8.அனைவரும் சமம் என்றாலும்..அவரவர் சிறப்புக்கு ஏற்றார்போல பயன்படுத்தப்
படுவார்களேயானால், அந்த அரசுக்கு அரணாக மக்கள் இருப்பர்.
9.உறவு..ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்தால்..அந்தக் காரணம் சரியில்லை என
உணர்ந்ததும் மீண்டும் உறவு கொள்வர்.
10.ஏதோ காரணத்தால் பிரிந்து..மீண்டும் வந்து இணைபவரை..ஆராய்ந்து..
பின்னரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

52.தெரிந்து வினையாடல்

1.நற்செயலில் நாட்டம் கொண்டவர்கள் நன்மை,தீமை இரண்டையும் ஆராய்ந்து
அப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்.

2.பொருள் வரும் வழிகளை பெருகச்செய்து வளம் பெற்று இடையூறுகளையும்
ஆராய்ந்து நீக்க வல்லவனே செயலாற்றும் திறனுடையவ்ன்.

3.அன்பு,அறிவு,ஆற்றல்,அவா இல்லாமை ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாக
பெற்றவனை தேர்ந்து எடுக்க வெண்டும்.

4.எவ்வளவு தான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும்..
செயல்வகையில் வேறுபடுபவர் பலர் இருப்பர்.

5.செய்யும் வழிகளை ஆராய்ந்து அறிந்து.. இடையூறுகளைத் தாங்கிச் செய்து
முடிக்கவல்லவன் அல்லால் மற்றவனைச் சிறந்தவன் என்று கருதிட முடியாது.

6.செய்கின்ற தன்மை,செயலின் தன்மை இவற்றை ஆராய்ந்து தக்க காலத்தோடு
பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.

7.ஒரு தொழிலை இந்தக் காரணத்தால் இவர் முடிப்பார் என ஆராய்ந்து...
பின் அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்கவேண்டும்.

8.ஒரு செயலில் ஈடுபட அவன் ஏற்றவனா என்பதை ஆரய்ந்த பிறகே ...
அவனை அந்த செயலில் ஈடுபடுத்த வெண்டும்.

9.மேற்கொண்ட தொழிலில் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக
எண்ணுபவரைவிட்டு பெருமை அகலும்.

10.உழைப்பவர் உள்ளம் வாடாதிருந்தால் உலகம் செழிக்கும்...ஆகவே அரசாள்பவர்
உழைப்பவனின் நிலையை நாளும் ஆராயவேண்டும்.
.

Thursday, May 1, 2008

51.தெரிந்து தெளிதல்

1.அறம்,பொருள்,இன்பம்,உயிர் மேல் அச்சம் இவை நான்கும் ஆராயப்பட்ட பிறகே ஒருவனை ஒரு பணியில்
ஈடுபடுத்த முடியும்.
2.நல்ல குடியில் பிறந்தவனாகவும்,குற்றமற்றவனாகவும்,பழி சொல்லுக்கு அஞ்சுபவனாகவும் இருப்பவனே உயர் குடியில் பிறந்தவன் எனப்படுபவன்.
3.அரிய நூல்கலைக் கற்றவராயிருந்தாலும் ஆழமாக ஆராய்ந்தால் அவரிடம் அறியாமை என்பது இல்லை என்று
சொல்லிவிடமுடியாது.
4.ஒருவனது குணங்களையும்,குறைகளையும் பார்த்து அவற்றுள் எவை மிகுதியாக உள்ளவை என்று தெரிந்த பிறகே
அவனைப் பற்றி முடிவெடுக்க முடியும். 5.ஒருவர் செய்யும் காரியங்களே..அவர்..தரமானவரா,தரங்கட்டவரா என்பதைச் சொல்லிவிடும்.

6.சுற்றத்தார் தொடர்பு அற்றவரை நம்பி தேர்வு செய்யக்கூடாது.ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் பழிக்கு அஞ்சார்.
உலகத்துக்கும் கவலைப் பட மாட்டார்.
7.அறிவற்றவரை அன்பு காரணமாக தேர்வு செய்தால்,அது எல்லா அறியாமையையும் கொடுக்கும்.

8.ஆராயாமல் ஒருவரை துணையாய்த் தேர்ந்தெடுத்தால் அது அவனுக்கு மட்டுமல்ல..அவன் வருங்காலத்
தலைமுறைக்கும் கேடு விளைவிக்கும்.
9.நன்கு ஆராய்ந்து தெளிந்ததும் ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்.ஆராயாமல் யாரையும் நம்பக் கூடாது.

10ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து..ஏற்றுக்கொண்டு பின் அவரை சந்தேகப்படுவது தீராத் துன்பத்தைத் தரும்