Wednesday, November 12, 2014

திருக்குறள் - காமத்துப்பால்-1261 முதல் 1265 வரை



குறள்-1261

காதலன் காதலையைப் பிரிந்து செல்கிறான்.அவன் பிரிந்து சென்றது முதல் ஒவ்வொரு நாளும் சுவரில் ஒரு கோடு இடுகிறாள்.அதனால் அவள் விரல்கள் தேய்ந்துவிட்டனவாம்.அவன் வருகிறானா...என பார்த்துப் பார்த்து கண்களும் காணும் திறனை இழந்து வருகிறதாம்.


வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்தன.

குறள்-1262

காதலரை அவளால் மறக்க இயலவில்லை.அவள் மறந்திருக்க முயன்றாலும் அவள் தோள்கல் அழகு இழந்து மெலிந்து, அதில் அணிந்திருந்த அணிகலங்களும் கழன்று விழும் நிலையில் உள்ளனவாம்

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகிழந்து மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதி

குறள்-1263

அவனுக்கு அவளதுபால் ஈடுபாடு இல்லை.ஆனால் அவளுக்கோ அவனை மறக்க இயலவில்லை.எவ்வளவு காலம் ஆனாலும் அவன் விரும்பி திரும்பும்வரை காத்திருப்பாளாம் இந்த கண்ணகி


உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்.

குறள்-1264

அவளைப் பிரிந்து சென்றவன்..அதே அன்புடன் அவளைக் காண திரும்பி வருகிறான்.காதலிக்கோ மகிழ்ச்சியடைகிறாள்.மனம் உயரத்தில் கொடி கட்டிப் பறக்கிறது.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.

முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யை நினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.

குறள்-1265

கணவனைக் காணாமல் வாடுகிறாள் மனைவி.அதனால் உடலில் பசலை படர்கிறது.அவனைப் பார்த்தால் போதும் தன் நோய் நீங்கிவிடும் என்கிறாள் அவள்


காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு. #1265


என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம்
தன்னால் நிங்கி விடும்.

No comments: