Saturday, October 4, 2014

திருக்குறள்- 1107,1108,1109,1110- காமத்துப்பால்




குறள்-1107

மனிதனின் இன்றியமையாத் தேவை உணவு, உடை, இருப்பிடம்.அதுவும், தன் சொந்த உழைப்பில் கட்டிய வீட்டில் இருந்து கொண்டு, உழைத்து, உண்டு வாழும் வாழ்வுக்கு இணை ஏதுமில்லை.இது சாதாரணமாக நாம் கூறுவது.ஆனால் வள்ளுவன் சொல்கிறான்..இதற்கு ஈடான சுகம் ஒன்று உள்ளதாம்..அது....

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.


அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது.
.

 திருக்குறள் : 1108

காதலர்க்கிடையே தழுவுதல் எப்படியிருக்க வேண்டுமாம்...அது சாதாரணமாக இருக்கக் கூடாதாம்..பின்னே...

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு

காற்றுகூட நடுவே நுழையாதவாறு அணைத்துக் கூடிப் பெறும் சுகம், காதலர்களுக்கிடையே இனிமை உடையதாக அமையுமாம்.


குறள்-1109

ஊடல் இல்லையேல் காதலில் நெருக்கத்தைக் காண முடியாது.அதுவும் ஊடலுக்குப் பின் கூடல் இருக்கிறதே அப்போது கிடைக்கும் இன்பத்தை எழுத்தில் வடிக்க இயலுமா?


ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

ஊடுதல், பின் ஊடலை உணர்ந்து விடுதல், அத்ற்குப் பின் கூடுதல் ஆகியவை காதலித்து வாழும் நிறைவு பெற்றவர் பெற்ற பயன்களாகும்.

குறள்- 1110

கற்றனைத்து ஊறும் அறிவு..இது வள்ளுவன் வாக்கு.அதாவது நாம் படிக்கப் படிக்க ஊருணி போல அறிவு வளர்ச்சியடையுமாம்.நாம் படிக்கும் நூல்களுக்கான பலப்பல அர்த்தங்கள் புலனாகுமாம்.அதற்கு ஈடானது..

 அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

நூல்களாலும், நமது அறிவாலும் அறிய அறிய முன் இருந்த அறியாமையை உணர்வது போல, சிவந்த அணிகளை அணிந்த இவளிடம்கூடக் கூட அவள் மீது உள்ள காதல் சுவையும் புதிது புதிதாய்த் தெரிகிறது.

No comments: