Saturday, October 18, 2014

திருக்குறள்- காமத்துப்பால் -1167 முதல் 1170 வரை




குறள்-1167

கடல் போன்ற துன்பத்தைத் தரக்கூடியதாம் காதல்.அத் துன்பக்கடலை நீந்தினாலும்..கரை ஏதும் கண்களில் படவில்லை.ஆதாலால்...இரவு முழுவதும் காதலனை எண்ணியபடியே தூங்காமல் கடக்கிறாளாம் காதலி

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

காதல் எனப்படும் வெள்ளத்தை நீந்தியும், கரை ஏதும் நான் காணவில்லை.நள்ளிரவு நேரத்திலும் தனியாகவே இருக்கின்றேன்

குறள்-1168

காதலனும் அருகில் இல்லை.ஊரே உறங்கிக் கொண்டிருக்கிறது.அவள் தனியாகவே இருக்கிறாள்.அப்போதும்..தன்னைப்போல யார் தனிமையில் இருப்பர் என எண்ணுகையில்..இரவு தான் கண்களில் படுகிறது.அதனால் அந்த இரவைப் பார்த்து பாவம் எனப் பரிதாபப்படுகிறாள்

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.

இந்த இரவு பாவம். எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.

குறள்-1169

சாதாரணமாக நாம் ஒருவரை ஒரு குறிப்பிட்ட நேரம் வருவார் என எதிர்பார்க்கையில்..அந்த நேரம் வராமல் காலம் நீண்டுக் கொண்டே இருப்பது போலத் தோன்றும்.இங்கே காதலனை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் காதலியின் நிலையும் அதுதான்.

கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.

(காதலனைப் பிரிந்து துன்புறும்) இரவுகள் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்றன.பிரிந்தவரின் கொடுமையைவிட இக் கொடுமையே அதிகமாய்த் தெய்கின்றது.

குறள்-1170

கணவன் ஊருக்குச் செல்கிறான்.மனைவியின் மனமோ..அவர் இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பார்..என அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறது.அது போல கண்களும் அவர் ஊரில் என்ன செய்துகொண்டிருப்பார் என எண்ணினால் என்ன..? அப்போதே அவரையும் பார்க்க முடியுமே! என வருந்துகிறாளாம்.


உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.

காதலன் உள்ள இடம் நோக்கி செல்லும் என் மனதைப்போல என் கண்களும் செல்லமுடியுமானால் அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டாம்

No comments: