Thursday, October 9, 2014

திருக்குறள் - காமத்துப்பால்- 1126,1127,1128,1129,1130



காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தால் இமைக்கவும் மறந்து பரவசத்தில் ஈடுபடுவார்கள்.இதை இலக்கியங்களிலும் நாம் படித்ததுண்டு...நடைமுறையிலும் நடப்பது உண்டு..ஆனால்..ஒருவேளை கண் இமைத்துவிட்டால்... என்னவாகும்..ஒரு காதலி சொல்வதைக் கேட்போம்

குறள்-1126

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.

என் காதலர் என் கண்களிலிருந்து போகமாட்டேன் என்கிறார்.கண்களை மூடி நான் இமைத்தாலும் வருந்த மாட்டார்/அவ்வளவு நுட்பமானவர்.

கண்ணுக்கு மை அழகு என்பர்.அதுவும் பெண்களை கயல்விழி என அழைக்க..கண்களின் இட்ட மையே பெரும் காரணமாய் அமைவதுண்டு.ஆனால் பெண் மை தீட்டும் நேரத்தில் காதலன் மறைந்துவிட்டால்...அதனால் வள்ளுவன் சொல்லும் காதலி எப்படிப்பட்டவள் பாருங்கள்.

குறள்- 1127

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

என் காதலன் என் கண்ணினுள் உள்ளார்.ஆகவே நான் மை தீட்டினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் தீட்டுவதில்லை.



காதலி மனதில் காதலன் உள்ளான்.ஆதலால் சூடான உணவினை அவள் சாப்பிட்டால்..ஒருவேளை அது அவனை சுட்டுவிட்டால்...ஆகவே அவள் சூடான உணவுகளை சாப்பிட அஞ்சுகிறாளாம்.,

குறள்-1128


நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.

என் காதலன் என் நெஞ்சத்தில் இருக்கிறார்,ஆகவே சூடான பொருளை நான் உண்டாள்..அது அவரைச் சுடுமோ என எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகிறேன்

கண்ணுக்குள் இருக்கும் காதலன், காதலி கண் இமைப்பதால் மறையக் கூடும் என்பதால்...இவள் கண்களை இமைப்பதில்லை.ஆனால்..இதை உறவு தவறாக எண்ணி காதலனை அன்பில்லதவன் என்கின்றனராம்

குறள்-1129

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.

என் கண்கள் இமைத்தால் காதலர் மறைவார் என்பதால் கண் இமைப்பதில்லை அவ்வளவுதான்.ஆனால் இதை அறியா ஊரார் அவரை அன்பில்லாதவர் என்கின்றனர்.

குறள்-1130


என் காதலன் என் நெஞ்சத்திலேயே  உள்ளான்.ஆனால்..இதை அறியா உறவு..அவர் என்னைப் பிரிந்து வாழ்கிறார்..அவர் அதனால் அன்பற்றவர் என்றெல்லாம் சொல்கின்றனரே என காதலி வருத்தப்படுகிறாள்

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.


என் காதலர் எப்போதும் என் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கையில், அதை அறியாத உறவினர் நாங்கள் பிரிந்திருப்பதாகப் பழித்துரைப்பது தவறு

No comments: